Sunday, December 28, 2008

பேரெழில்



என் கண்கள்
என்னைப்
பார்ப்பதை விட

உன் விழிகள்
என்னை நோக்கும்
வேளைகளில்

பேரெழிலாய்
உணர்கிறேன்
நான்.

Tuesday, December 23, 2008

கருகிய ரோஜாவும், கடைசிக் கேள்விகளும்



அண்மையில் வாசிக்கக் கிடைத்த கவிதை.
நண்பர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.

Monday, November 24, 2008

கவிஞர் யுகபாரதிக்கு வாழ்த்து.



(நவம்பர்) 23.11.08 கவிஞர் யுகபாரதியின்
திருமணம் இனிதே நடந்தேறியது.
மணமக்கள் வாழ்வாங்கு வாழப்
பிரார்த்தனையும், வாழ்த்தும்.
அவருடைய திருமண அழைப்பிதழின்
பின்பகுதியில் இடம்பெற்றுள்ள
கவிதையின் ஒலிவடிவம்

Friday, November 21, 2008

காத்து கறுப்பு


காத்து கறுப்பு
ஏனோ தெரியலை
அடிக்கடி வந்து
போகிறது
தீக்குளித்த
கறுத்தம்மாவின்
நினைவு।
சுழன்றடித்த
காற்றின் வேகத்தில்
மின் கம்பியில்
மோதி
உயிர் விட்ட
காகத்தைக் கண்ட
கணந்தொட்டு....:(

Thursday, November 20, 2008

நாய்ப்பாசம்



நாய்ப்பாசம்.

பரபரப்பான நெடுஞ்சாலை.

எதையோ எதையோ
தேடும் முனைப்பில்
காத்து நிற்கும்
வாகனங்கள்।

பச்சை
ஒளிரும் வேளை
பாய்ந்து வந்தது
வீதியோர ராஜா।

மருண்ட அதன் விழிகளில்
வாகனங்களின்
எதிரொலி।

சடுதியில் சாலை புகுந்து
நெஞ்சோடு சேர்த்தணைத்தான்
ராஜாவை
வீதியோரச் சின்னமணி।

வசையின் இசையோடு
நடுச்சாலையில்
அரங்கேறியது
உயிர்களிடத்தில்
அன்பு செய்.


Wednesday, November 19, 2008

நரை



நரை


முதுமை
முகவரியின்
முதல் வரி.

அந்தி(ம)க் கதிரின்
ஆரம்ப
நிறப்பிரிகை.

ஒழுகும் ஆயுளை
உணர்த்தும்
ஒளிக் கீற்று.

தழும்பும் இளமை
தடம் மாறாமல்
தடுக்கும் சமிக்ஞை.

தடுமாறிய தருணங்களை
மீள்பார்த்துச்
சரிபார்க்கச் சொல்லும்
மனக்கணக்கு.

காலன் பதிவேட்டில்
புதுக்கணக்குக்கான
ஆதிச் சுழி.

Tuesday, November 18, 2008

கொழந்த


கொழந்த :)

ட்ரிங்.. .. .. ட்ரிங்.. .. ..

வாழ்த்துகள்.

மகிழ்ச்சி.

என்ன குழந்தை?
....

யாரை மாதிரி?
...

தாத்தா?
....

பாட்டி?
....

அம்மம்மா?
...

அம்மா?
....

அப்பா?
...

பின்னே யாரு மாதிரி?

கொழந்த மாதிரி :)

Monday, November 17, 2008

கரையே(ற்)றுவாரா ஒபாமா !?



"மாற்றம்" என்ற மந்திரச் சொல் அமெரிக்க வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் போட்டிருக்கிறது. அண்மைய அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்பார். அமெரிக்கப் பொருளியலின் இமாலயச் சரிவு உலகளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒபாமா அதை எப்படிச் சரிக்கட்டப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. புஷ் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 700 பில்லியன் உதவித் தொகை ஓர் ஆறுதலைத் தந்ததே தவிர பொருளியலில் தேறுதலைத் தரவில்லை.

ஒபாமா அலுவலகத்துக்குள் நுழைந்த முதல் நாளே அவருக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவு சிக்கலான பொருளியல் சவால்களைச் சமாளிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இருக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதென்றால், தினமும் பத்தாயிரம் வீடுகள் வங்கிகளால் மீட்டுக் கொள்ளப்பட்டு பின்பு ஏலத்தில் விடப்படுகின்றன.

1930 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா மிகப் பெரிய பொருளியல் சரிவைச் சந்தித்திருக்கிறது. அதன் விளைவு, வேலையின்மை விகிதம் 10 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. முன்பு அது ஆறு விழுக்காடாக இருந்தது. பதவி விலகும் அதிபர் புஷ், 10.3 டிரில்லியன் டாலர் கடன் சுமையை அமெரிக்க மக்களின் தலையில் சுமத்திச் செல்கிறார். தமது எட்டு ஆண்டு கால ராஜபோகத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போமா? நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் வருடத்தில் 300 நாட்கள் அவர் வேலை செய்தால் 7,15,000 வருடங்களுக்குப் பிறகு தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார். இப்பவே கண்ணைக் கட்டுதா?

இந் நிலையில், அமெரிக்க மக்களுக்குத் தேவை இமாலய மாற்றம். தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக ஒபாமா வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். அவை நடுத்தர மக்களுக்கும், வறுமையில் வாடுவோருக்கும் மிகுந்த பயனளிக்கும் என்பது எதிர்பார்ப்பு.

உதாரணத்திற்கு, Un Employment Insurance வேலையில்லாதோருக்குக் காப்பீடு, தனி நபர் வருமான வரிக் குறைப்பு, செலுத்த முடியாத கடன் தொகைக்குப் பகரமாக வங்கிகள் வீடுகளைப் பிடுங்கிக் கொள்வதால் நஷ்டத்தில் தவிப்போருக்கு உதவுவது போன்ற பல திட்டங்களைச் சொல்லலாம். இவை நடுத்தர மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் உதவித் திட்டம் வரையப்படும் என்று கூறியிருக்கின்றார் ஒபாமா. அதே சமயம், இதற்கு ஏற்படும் செலவை ஈடுகட்டுவதற்கு இந்தச் சுமையை நிறுவனங்களின் தலையில் சுமத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். அவருடைய புதிய பொருளாதாரக் கொள்கையைப் பார்க்கும் போது அதிகமான வரிச் சலுகைகள் நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் வேலை இழந்தோர் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம். பொருளியல் நிலைத்தன்மை ஏற்படாதவரை அந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்கப் பணிகளை வெளிக்குத்தகைக்கு விடுவதன் மூலம் அங்குள்ள வேலைச் சந்தை அதிகம் பாதிக்கப்படுகிறது என்பது (Democratic Party) ஜனநாயகக் கட்சியின் வாதம். ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்ட பிறகு அதற்கு அவர்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை பலனளிக்குமா என்பது கேள்விக்குறி.

Out sourcing எனப்படும் வெளிக்குத்தகைக்குப் பணிகளை ஒப்படைத்திருக்கும் நிறுவனங்களுக்குரிய வரிச்சலுகையை அகற்றப் போவதாகச் சொல்கிறார் ஒபாமா. அப்படி அகற்றப்படும் போது அதிகமான அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கிறார். ஒரு கோணத்தில் அது சரி. ஆனால் மறுகோணத்தில், இதனால் ஏற்படும் விளைவுகளென்ன தெரியுமா? வரிச்சலுகை குறையும் போது அமெரிக்க நிறுவனங்களுக்கான லாபம் பாதிக்கப்படுகிறது. அல்லது (Production Cost) உற்பத்திச் செலவு உயர்த்தப்படுகின்றது. அதன் எதிர்வினையாக அமெரிக்கப் பொருட்களின் போட்டித் தன்மை பாதிக்கப்படும்.

அண்மைய நாட்களில் பரவலாகப் பேசப்படும் தாராளமயம், தடையற்ற வர்த்தகம் ஆகியன ஒபாமா சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சிக்குக் கசப்பான கொள்கைகள். பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்கும் திறன் பெற்ற நிபுணர்களைத் தன்னோடு இணைத்திருப்பதன் மூலம் நிலைமையை ஓரளவு சரி செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். அவருடைய குழுவில் பொருளியல் தாராள மயத்தை ஆதரிக்காத நிபுணர்களும், வயதில் குறைந்த ஆலோசகர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் மனப்போக்குப் பொதுவாக, Micro Economics எனப்படும் நுண் பொருளியலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் நிறுவனங்களுக்கான சுமைகள் மேலும் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை, அந்தச் சுமையால் கிடைக்கக் கூடிய லாபம் சாதாரண மக்களுக்குப் போய்ச் சேரக்கூடிய ஒரு வாய்ப்பும் இருக்கின்றது.

ஒபாமா ஆசிய வட்டார அரசியலில் அதிக நாட்டமுடையவர். எனவே, இங்குள்ள நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை அவர் வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மற்ற அமெரிக்க அதிபர்களைப் போலல்லாமல் இவருக்கு ஆசியாவின் அனுபவம் அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசியாவுக்குச் சாதகமான பல விஷயங்களைச் செய்வார். குறிப்பாக வர்த்தகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sunday, November 16, 2008

இல்லத்தரசி - ஒலிக் கவிதை



(கவிஞர் யுகபாரதியின் கவிதை ஒலிவடிவிலும்)

இனி நான் எதற்காகவும்
காத்திருக்கத் தேவையில்லை
கிடைத்துவிட்டாள்

இதுவரை சேமித்த கனவுகளை
அவளுக்காகச் செலவழிப்பேன்
அவளுக்கு அவள் விரும்பும்
செல்லப் பெயரைச் சூட்டுவேன்

கோபத்தில் இருப்பதுபோல்
பாவனை செய்து அவள்
கொஞ்சுவதை வியப்பேன்
குறுஞ் சிரிப்பில் மேலும்மேலும்
அவள் அழகுகளைக் கெளரவிப்பேன்

யார் யாரெல்லாம்
என்னைக் கவர்ந்தார்களோ
அத்தனை பேரையும்
அவளிடமிருந்து பெறுவேன்

என் காதல் நாட்களை நானும்
ரசிக்கத் தொடங்குவேன்

அவளுக்கு என் மீது பிரியம்
மிகுந்திருப்பதால்
அவளுக்குப் பிரியமில்லா விஷயங்களைத்
தவிர்ப்பேன்

முழுமையாக என்னை
ஒப்படைக்கத் தொடங்கிவிட்டேன்

இதன் மூலம் நான்
சொல்ல விரும்புவது
எனக்கு எழுதிய காதல் கடிதங்களை
நீங்களே அன்புகூர்ந்து
கிழித்துவிடுங்கள்... அல்லது
வேறு யாருக்காவது
கொடுத்து விடுங்கள்.

ஆக்கம் - கவிஞர் யுகபாரதி.

இந்தக் கவிதையின் ஒலிவடிவம்

பணமே பலம் !



எப்போதும் நம்முடைய சேமிப்புகளை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் பல்வேறு இடங்களில் பிரித்து வைப்பது விவேகமான முடிவு। அண்மையப் பொருளியல் நெருக்கடி பற்றித் தெரிந்ததும் பலர் அத்தகைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்। அதனால் என்ன பயன்? பல இடங்களில் முதலீடுகளைப் பிரித்து வைப்பதன் மூலம் நமக்கு ஏற்படக் கூடிய அதிக இழப்புகளைக் குறைக்கலாம்।

இவ்வாறு முதலீடுகளைப் பிரித்து வைப்பது முதலீட்டுக் கொள்கையின் பொன்னான விதியாகும்। அதாவது ஒரே இடத்தில் ஒரு பொருளையோ, வீட்டையோ, நகையையோ வாங்காமல் பல்வேறு இடங்களில், பல்வேறு தளங்களில் முதலீடுகளைப் பரப்பி வைப்பது. ஏதும் சிக்கலான சூழலில் ஒன்று விலை குறைந்தாலும் இன்னொன்று அந்த இழப்பைச் சரி செய்யும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தரும்.

அண்மைய காலங்களில் நடுத்தர மக்களிடம் பங்குச் சந்தை அதிக கவனயீர்ப்பைப் பெற்றிருக்கிறது. அதில் முதலீடு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற முடியும் என்பது அவர்களுடைய ஆர்வத்தின் அடிப்படை ஊற்று. அத்தகைய லாபத்தைப் பெறுவதற்குப் பங்குச் சந்தை பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பங்குச் சந்தை பற்றிப் பலவிதமான புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். அதை ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொண்டு பங்குச் சந்தையின் ஆழ, அகலங்களைத் தெரிந்து கொண்டு, பிறகு அங்கு அடியெடுத்து வைத்தால் நம்முடைய பணத்துக்குப் பலம். அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் 50000 ரூபாய் இருக்கிறது. அதை இரண்டு வருடத்தில் பன்மடங்காக்கி விடலாம் என்ற தப்பெண்ணத்தில் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல பங்குச் சந்தையில் கால் பதித்தால் நஷ்டம் நமக்குத் தான். இத்தகைய முடிவுக்கும் சூதாட்டத்தில் கலந்து கொள்வதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நன்மையைத் தரும். மாறாக, நண்பர்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சில நேரங்களில் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

இன்றைய சூழலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாமவர்கள் பங்குச் சந்தையின் நெளிவு, சுளிவுகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு அங்கு முதலீடு செய்பவர்கள். இந்தக் குழுவினர் நூற்றில் பத்துப் பேராகத் தான் இருப்பர். மீதமுள்ள 90 பேர் நண்பர்கள் சொன்னார்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று கேட்பார் பேச்சைக் கேட்டு முதலீடு செய்பவர்கள். சந்தையில் இழப்பு வரும் போது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான். காரணம், சந்தைச் சூழல் அறிந்தவர்கள் எப்போது வெளியேற வேண்டுமோ அப்போது கச்சிதமாக வெளியேறி விடுவார்கள். ஆனால், இரண்டாம் வகையினர் சந்தையின் போக்கு பற்றி உண்மை நிலையைத் தெரியாததால், அது பற்றி அறியாததால் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கும் முகவர்களும் இருக்கிறார்கள். அவர்களில், நம்பகமானவர்களின் ஆலோசனையோடு முதலீடு செய்வது சிறந்தது. அவர்களுடைய அனுபவமும், உள்ளுணர்வும் இலாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதில் துணை நிற்கலாம். ஆனால் யார் எப்படி என்ன செய்தாலும் நாம் அதை ஓரிரு முறை ஆராய்ந்து அது சரியானதா? அந்த முடிவை எடுக்கலாமா? நம்முடைய மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை வைத்துத்தான் இறுதி முடிவெடுப்பது உசிதம். காரணம், பிறருக்கென்று யோசிக்காமல், தனக்கென யோசிக்கும் போது நம்முடைய உள்ளுணர்வு சரியானதை நமக்குச் சொல்லாம். அதிக இழப்பு ஆரோக்கியத்துக்கு ஆகாது. எனவே, முதலீடு செய்வதற்கு முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்துச் செய்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.

Saturday, November 15, 2008

விழிமின்! எழுமின்!!



விழிமின்! எழுமின்!!

குண்டு, குழியில்லாச்
சாலைகள்।

குப்பைக் கூளமில்லா
வீதிகள்.

கொசுக்களில்லாச்
சேரிகள்.

கூவமில்லாத
சென்னை.

சுவர் கண்ட
இடமெல்லாம்
"நீர்" பாய்ச்சா
இளசுகள்.

எச்சரிக்கையோடு
எச்சில் உமிழும்
பெரிசுகள்.

விதிகளை மதிக்கும்
மக்கள்.

நேரந்தவாறா
மாநகரப் பேருந்து.

காலந்தவறாத
மின் தொடர் வண்டி.

கடமை தவறாத
காவலர்கள்.

கண்ணியம் காக்கும்
காதலர்கள்.

ஆழிப் பேரலை
அச்சமில்லா
மெரீனா.

நன்கொடையில்லாக்
கல்லூரிச் சீட்டு.

சேலை அணிந்து வரும்
கல்லூரிச் சிட்டு.

வாரிசுகளை ஓரங்கட்டும்
அரசியல்வாதி.

தகுதி பார்த்து
வாக்களிக்கும்
திருமான் பொதுஜனம்!

செய்மதி ஊடகத்தில்
செந்தமிழ் உரையாடல்!

சுந்தரத் தமிழில்
சுதந்திர வாழ்த்து!

இப்படிப் பட்டியலிட
இன்னும் பல
நல்ல விடயங்கள்!

விழிக்கும் தருணம் வரை
அழகாய்த் தான்
இருந்தது
என் பாரதம்।

Friday, November 14, 2008

துடிதுடிக்கும் இதயம்


துடிதுடிக்கும் இதயம்

நாளொன்றுக்கு
இலட்சம் முறை
துடிக்கிறதாம்
மனித இதயம்.

உன்னை
நினைக்குந்தோறும்
அதிமாகும்
துடிப்பை
அளப்பதெப்படி?

Monday, November 10, 2008

குசல நிலா


குசல நிலா


நீ

என்

அருகில் இல்லை

என்ற தைரியத்தில்

அறைக்குள் வந்து

குசலம் விசாரித்துச்

செல்கிறது

நிலா.

Sunday, November 9, 2008

இரண்டாம் பிரவுசர் போர்!

புகழ்பெற்ற தேடல் நிறுவனமான கூகிள், தேடுவதுடன் திருப்தியடையாமல், வலை மேய்வதற்கு உதவும் பிரவுசர் (உலாவி) மென்பொருள் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. க்ரோம் என்ற பெயர் கொண்ட இந்த இலவச பிரவுசர் 100 நாடுகளில் 43 மொழிகளில் அதிரடியாக வந்து இறங்கிவிட்டது.

கூகிள் இந்த மென்பொருளை அறிமுகப்படுத்திய விதமே வினோதமாக இருந்தது. அம்புலி மாமா படக் கதை மாதிரி ஒரு காமிக் புத்தகம் போட்டு க்ரோமின் பெருமைகளைப் பட்டியலிட்டார்கள். சுருக்கம்: இந்தப் புதிய பிரவுசர், புல்லட் வேகத்தில் வேலை செய்யும். பாதுகாப்பானது. மிக்- 27 விமானம் மாதிரி அடிக்கடி க்ராஷ் ஆகாது. இணையத்திலிருந்து வரும் ஆணைத் தொடர்கள், பிரவுசருக்குள் சிறைப்பட்டிருப்பதே தெரியாமல் உங்கள் கம்ப்யூட்டரிலேயே நேரடியாக ஓடுவது போல் இருக்கும்.

க்ரோம் உண்மையிலேயே பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. எடையைக் குறைக்கப் பட்டினி கிடந்த சினிமா நடிகை மாதிரி கச்சிதமாக உடலை வைத்திருக்கிறது. வேகமாகவும் ஓடுகிறது. மற்ற குண நலன்கள் எல்லாம் போகப் போகத்தான் தெரியவரும். அதற்குள்ளாக இண்டர்நெட் பண்டிதர்கள் ""ஆகா! இரண்டாம் பிரவுசர் போர் ஆரம்பித்து விட்டது'' என்று உற்சாகத்துடன் பாப்கார்ன், தண்ணீர் பாக்கெட் எடுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முன் வரிசையில் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.

அதென்ன இரண்டாம் பானிபட் போர் மாதிரி பேசுகிறார்கள் என்றால், பல காலமாகவே உலாவி மென்பொருள்கள் மார்க்கெட்டில் ரத்தக் களறியாக சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கின்றன. ஏனெனில் வலை மனை விளம்பரம் என்பது பல டாலர், பல்லாயிரம் டாலர், பல கோடி நூறாயிரம் டாலர் பிசினஸ்! இப்போதெல்லாம் பெருவாரியான கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்கள் பிரவுசரில்தான் வாழ்கிறார்கள். தகவல் தேடுவது, அஞ்சல் அனுப்புவது, சினிமா பார்ப்பது, செய்தித்தாள் படிப்பது, வரன் தேடுவது எல்லாமே அதற்குள்தான் நடக்கிறது. ஏற்கனவே வலைத் தேடல் பிசினஸ் முழுவதையும் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் கூகிள், தன் தொகுதியின் புறம்போக்கு நிலம் பூராவையும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் அரசியல்வாதி போல் அலப்பறை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலாவியையும் கூகிள் கைப்பற்றி விட்டால் அவர்களைப் பிறகு அசைத்துக் கொள்ளவே முடியாது!

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் டிம் பெர்னர்ஸ் லீ என்ற ஆங்கிலேயர் இணையத்தின் www எனப்படும் வெவ்வெவ்வேயைக் கண்டுபிடித்தார். அந்த வலை வெளியில் சுதந்திரமாக உலவுவதற்கான முதல் பிரவுசரையும் வடிவமைத்தார். ஆனால் சுமார் 1994 வரை இண்டர்நெட் என்பது ஷேவ் செய்ய நேரமில்லாத இஞ்சினீயர்களுக்கு மட்டுமே உரிய சொத்தாக இருந்தது. பிறகு சாதாரண மக்களும் அதில் புகுந்து புறப்பட்டு நெட் என்பது ஒரு நுகர்வோர் இயக்கமாகவே மாறிய பிறகு, எங்கும் பச்சை டாலர் வாசனை வீச ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் மைக்ரோசாஃப்ட் போன்ற மாபெரும் பிராணிகள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பார்த்தன. அங்கே ஏற்கனவே நெட்ஸ்கேப் என்று ஒரு நாயர் கடை சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்ததைக் கண்டன.

நெட்ஸ்கேப்தான் வெற்றிகரமான முதல் உலாவி, அதற்கு முன்னும் வயோலா, மிடாஸ், சாம்பா என்று மனம் போனபடி எழுதப்பட்ட உலாவிகள் பல இருந்தாலும் அவை அற்ப ஆயுளே வாழ்ந்தன. நெட்ஸ்கேப்பின் முக்கிய கவர்ச்சி, ஒரு வலைப் பக்கத்தை டவுன் லோடு செய்ய ஆரம்பித்த உடனேயே அது பகுதி பகுதியாகத் திரையில் தெரிய ஆரம்பிக்கும். பழைய பிரவுசர்களில் முழுப் பக்கமும் நம் கம்ப்யூட்டருக்கு வந்து சேரும் வரை சிவ சிவா என்று ருத்திராட்சத்தை உருட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும்.

இன்றைக்கு இணையத்தின் இணை பிரியாத நண்பர்களான குக்கி பிஸ்கோத்துகள், ஃப்ரேம்கள், ஜாவா ஸ்க்ரிப்ட் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்தும் நெட்ஸ்கேப் கண்டுபிடித்தவையே. நெட்ஸ்கேப் பிரபலமடைந்து மாலை நேரத்துக் கையேந்தி பவன் இட்லி போல் சூடாக விற்பனையாகியது. இதைப் பார்த்துவிட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்று ஒரு உலாவியைத் தயாரித்து விற்க ஆரம்பித்தது.

அடுத்த நாலைந்து வருடம், இண்டர்நெட்டே இரண்டு கட்சியாகப் பிரிந்து அடித்துக் கொண்டது. இரண்டு பிரவுசர்களுக்கும் சின்னச் சின்னதாக நிறைய வித்தியாசங்கள். ஒன்றில் ஒழுங்காகத் தெரியும் வலைப் பக்கம் மற்றதில் கொத்து பரோட்டாவாக வரும். வலை மனை வடிவமைக்கும் கலைஞர்கள் இரண்டுக்கும் தனித் தனியாக டிசைன் செய்து நொந்து போனார்கள். இப்படி ஆரம்பித்ததுதான் முதலாவது பிரவுசர் போர்!

விரைவிலேயே நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்டின் அடி மடியில் கை வைத்தது: ""இனி இண்டர்நெட்தான் எல்லாமே. ஜனங்கள் நெட்டிலேயே சாப்பிட்டு நெட்டிலேயே தூங்கி, குழந்தை கூடப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். எனவே உங்கள் கம்ப்யூட்டருக்கு பிரவுசர் மட்டும் இருந்தால் போதும்; விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டமே தேவையில்லை, தண்டச் செலவு'' என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த அடாவடியைக் கேட்டு பில்கேட்ஸ் சினந்தார்; கண் சிவந்தார். தற்காப்புக்கு சிறந்த வழி, எதிராளியின் வீடு புகுந்து அடிப்பதுதான் என்று முடிவு செய்தார். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை முற்றிலும் இலவச இணைப்பாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார்! விண்டோஸ் வாங்கினால் பிரவுசர் சும்மா கிடைக்கிறது என்றதும் ஜனங்கள் சாரி சாரியாக இந்தப் பக்கம் திரும்பி வர ஆரம்பித்தார்கள். மைக்ரோசாஃப்ட், மெத்தையில் இலவம் பஞ்சுக்குப் பதிலாக டாலர் நோட்டுகளைத் திணித்துக் கொண்டு தூங்கும் பிராணி. ஆனால் நெட்ஸ்கேப்பிற்கோ, பிரவுசர் விற்கிற காசுதான் ஒரே வருமானம். அங்கே அணை போட்டதும் திணறிவிட்டது.

நெட்ஸ்கேப்பின் மார்க்கெட் பங்கு வேகமாகச் சுருங்க ஆரம்பித்து, கடைசியில் உலர்ந்து வற்றியே பொய்விட்டது. போட்டியாளர்களை ஒழிப்பதற்காக மைக்ரோசாஃப்ட், தன்னுடைய விண்டோஸ் மார்க்கெட்டை வைத்துக் கொண்டு விளையாடுகிறது என்று கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் "மைக்ரோசாஃப்ட் ஒரு சர்வாதிகாரி, அதை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை' என்றெல்லாம் வீர உரைகள் ஆற்றினாலும், இறுதித் தீர்ப்பில் பில் பில் கேட்ûஸ நாளு தோப்புக்கரணம் போடச் சொல்லிவிட்டு விடுதலை செய்துவிட்டார்கள் இப்படி முடிவுக்கு வந்தது முதலாம் பிரவுசர் போர்.

ஆனால் போரில் தோற்றோடி வேற்று நாட்டில் தஞ்சமடைந்த சில வீர இளைஞர்கள், ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபத்தில் அமர்ந்து ஓசைப்படாமல் மற்றொரு பிரவுசர் எழுத ஆரம்பித்தார்கள். அகில உலகையும் ஜெயித்த மமதையில் மைக்ரோசாஃப்ட்டும் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டது; பல காலத்துக்கு எக்ஸ்ப்ளோரரில் புதிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தேக்கம் கொடுத்துவிட்டது. 2004 வரை இந்த நிலை நீடித்தது. அந்த வேளையில்தான் "தீ நரி' ( Fire Fox) என்ற புதிய பிரவுசர் திடீரென்று மார்க்கெட்டில் நுழைந்து படபடவென்று சுட ஆரம்பித்தது!

ஃபயர் ஃபாக்ஸில் பல புதிய சாகசங்கள் இருந்தன. ஒரே ஜன்னலுக்குள்ளேயே சைடு ஜன்னல்கள் திறந்து ஏக காலத்தில் பல வலைப் பக்கங்களை மேய்வது, எங்கே சுற்றி அலைந்தாலும் விட்ட இடத்துக்கு டகாலென்று திரும்பி வரும் புக் மார்க் வசதி, நாராசமான ரீமிக்ஸ் பாட்டுகளை சுலபமாக டவுன்லோடு செய்யும் வசதி, நாம் டைப் செய்யும் போதே ஸ்பெல்லிங்கை சரி பார்த்து க், த், ப் எல்லாம் சரியாகப் போடச் செய்வது என்று பல புத்திசாலித்தனமான ஐடியாக்கள்.

இவ்வளவு இருந்தும் மைக்ரோசாஃப்டை முழுவதும் மார்க்கெட்டிலிருந்து பெயர்க்க முடியவில்லை. அவர்களும் எக்ஸ்ப்ளோரரில் மேற்படி வசதிகள் பலவற்றைக் கொண்டு வந்து ஏழாவது பதிப்பாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அடுத்ததாக எட்டாவது பதிப்பும் அநேகமாகத் தயாராகி விட்டது. கூகிள் வேறு இப்போது க்ரோம் என்ற புதிய உலாவியைக் கொண்டு வந்திருப்பதால் மும்முனைப் போட்டி இருக்கும். ஜாலிதான்! ஒருவரை ஒருவர் மிஞ்சுவதாகப் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவார்கள். அடுத்த இரண்டு வருடத்தில் வலை உலாவிகள் அடையாளமே தெரியாமல் மாறப்போகின்றன.

மென்பொருள் ஏகலைவர்களின் மானசீக குருவான மார்க் ஆண்ட்ரீஸன் போன்றவர்கள், நம்மாழ்வார் அரங்கனைப் பாடியது போல் பரவசப்பட்டுப் போய் க்ரோம் உலாவியின் புகழ் பாடுகிறார்கள். கூடிய சீக்கிரம் இது விண்டோûஸயே புறமுதுகிடச் செய்யப்போகிறது என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த மாதிரி பில்லியன் டாலர் போர்களின் முடிவில் யார் மிஞ்சுவார்கள் என்பதை இப்போதே சொல்வது கடினம். எக்கச்சக்கமான பண பலம், விளம்பரம், சதி வேலைகள், குருட்டு நம்பிக்கை, ராப்பகலான உழைப்பு எல்லாம் கலந்த வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஹை டெக் லாட்டரி இது.

நன்றி : ராமன் ராஜா & தினமணிக்கதிர்.

Saturday, November 1, 2008

பெத்த மனசு




கல்யாணமான 30 வருடங்களில் ராமு சொன்ன அந்த யோசனை ராஜியை உலுக்கியெடுத்தது. அவன் அப்படிச் சொல்வான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த மாதம் தான் பேறுகாலத்துக்கு வந்த மகள் கணவன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறாள். மகனுக்குக் கல்யாணம் முடிந்து இன்னும் முழுதாக மூன்று மாதங்கள் கூட நிறையவில்லை. அதற்குள்....

ராமுவின் வார்த்தைகள் அவள் விழிகளை நனைத்து விட்டன.

நீண்ட பெருமூச்சுடன் அவளை நெருங்கிய ராமு ஒனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்பா என்றான். வெறித்தபடி பார்த்தாள் ராஜி.

நாம ஒண்ணும் அசலூருக்குப் போகலை, இதோ இங்கன இருக்குற மூணாவது வூட்டுக்குத் தான் போறோம்.

கல்யாணம் முடிஞ்ச சின்னஞ்சிறுசுக, நாம கூட இருந்தா சங்கோஜப் படுவாங்க. அதான். உனக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம்.

சொல்லி முடித்த கணவனின் முகத்தைக் கனிவோடு பார்த்தாள் ராஜி.

ஒங்க விருப்பம் தானே என்னோடதும் என்பதற்கான தன்னிறைவு அதில் இருந்தது.

Friday, October 31, 2008

ஒளியேற்றுவாரா ஒபாமா


ஒளியேற்றுவாரா ஒபாமா...!?
அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் அங்குள்ள பங்குச்சந்தையில் வீசியது நிதிச் சூறாவளி. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் பல நொடித்துப் போயின. இன்னும் சில நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இணையக் காத்திருக்கின்றன. அதன் விளைவு இன்று உலக நாடுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்? அமெரிக்க அரசாங்கத்தின் பண நிதிக் கொள்கை. அதை எவ்வளவு தாராளமயப்படுத்த முடியுமோ அந்தளவுக்குத் தாரளமயமாக்கியது அமெரிக்க அரசு. அது மட்டுமல்ல நிதிச் சந்தையில் ஆரம்பத்தில் இருந்த கடுமையான கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கியது. அதனால் வங்கிப் பரிமாற்றத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் அடியோடு மாறிப்போனது. நிதி நிறுவனங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தலைமை வங்கி வழிகாட்டுவது வழக்கம். ஆனால், தாராளமயம் - அந்த வழிகாட்டலில் நெளிவு,சுளிவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால், அவரவர் தங்களுடைய சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வங்கிப் பரிவர்த்தனை செய்கிற சூழல் உருவானது.

ஒரு நாட்டின் நிதிநிலை வலுவடைய, பொருளியல் சமநிலை அவசியம். அதற்கு, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். அந்தச் சூழலை உருவாக்குவதற்காகவே தாராளமயக் கொள்கையைக் கடைபிடித்தது அமெரிக்கா. அங்குள்ள ரிசர்வ் வங்கி ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான வட்டியில், வணிக வங்கிகளுக்குப்(Commercial Banks) பணத்தை வாரி வழங்கியது. அதனால், கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை எல்லை மீறியது. அது மட்டுமா? தலைமை வங்கியிடமிருந்து அதிகமான கடனைக் குறைந்த வட்டிக்கு வாங்கி வாடிக்கையாளர்களுக்குச் சுலபமாகக் கொடுத்தார்கள். அவர்களால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா? அதற்கான தகுதி இருக்கிறதா? இல்லையா? என்ற அடிப்படைக் விசாரணையில்லாமல் நொடித்துப் போனவர்களுக்குக் கூட கடனைத் தாராளமாகக் கொடுத்தார்கள். அது பொருளாதாரச் சந்தையில் ஒரு செயற்கையான வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

அண்மைய எண்ணெய் விலையேற்றம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்திருக்கிறது. எல்லாப் பொருட்களின் விலைகளும் உச்சத்தைத் தொட்டன. வாங்கிய கடன்களைத் திரும்பக் கொடுப்பதா? அன்றாட வாழ்க்கைச் செலவைக் கவனிப்பதா? என்ற போராட்டம் அவர்களுடைய மனதில் எழுந்தது.

இந்தச் சூழலில், தாங்கள் வாங்கிய கடனுக்குரிய தவணைத் தொகை செலுத்துவதை அவர்கள் தள்ளிப் போடத் தொடங்கினர். அதன் எதிர்விளைவாக, இதுவொரு தனிமனிதப் பிரச்சினை என்றில்லாமல் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்து அமெரிக்கப் பொருளாதாரத்தையே நெருக்கடிக்குள்ளாக்கியது.

அமெரிக்க முதலீட்டுச் சந்தை, உலகச்சந்தையோடு இரண்டறப் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆகவே, அமெரிக்கப் பொருளாதாரம் கீழே விழும்போது, மற்ற உலக நாடுகளின் நிதிச்சந்தைகளும் பாதிக்கப்படுவது இயல்பானது.

பொருளியலில் ஏற்பட்ட தடுமாற்றம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே மிகப் பெரிய தலைவலியாக மாறியது. அவசரமாக விழித்துக் கொண்ட அமெரிக்க அரசாங்கம் நிதிச் சூறாவளியை எதிர்கொள்ள 700 பில்லியன் டாலரைக் கொடுத்தது. ஆனால் அது யானைப் பசிக்குச் சோளப் பொறியாக மட்டுமே அமைந்தது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கக் குறைந்தபட்சம், இரண்டரை அல்லது மூன்று டிரில்லியன் டாலர் வரை உதவி தேவை என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து. வரும் நவம்பர் 15ல், பொருளாதார ஆலோசனை பற்றிய கூட்டம் நடக்கவிருக்கிறது. அதன் மூலம் ஏதாவது விடிவு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனவே, தொய்வடைந்திருக்கும் அமெரிக்க நம்பிக்கையைப் பழைய நிலைக்குக் கொண்டு வர உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வெல்லப் போவது யார்? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்து ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது குடியரசுக் கட்சியா? ஜனநாயகக் கட்சியா?. இவர்களில் யார் வென்றாலும் அது பொருளியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

யார் வெல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து பங்குச் சந்தை மாற்றங்கள், பொருளாதாரக் குறியீடுகள், உலகப் பொருளாதாரம், நிதிச்சந்தைகள் ஆகிய அனைத்தும் மாற்றத்தை எதிர்நோக்குவது நிச்சயம். ஏனென்றால், தற்போதைய அமெரிக்கத் தலைமைத்துவத்தின் நம்பிக்கை மிக மோசமாகச் சரிந்துள்ளது. ஜான் மெக்கைன் வந்தால், தற்போதுள்ள அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பல கொள்கைகளை அப்படியே தொடர்ந்து மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே சமயம், ஒபாமா அதிபரானால், ஒரு முழுமையான மாற்றம் ஏற்படும். அது அமெரிக்க வெளியுறவு, பொருளாதாரம், இராணுவம் என அத்தனை துறைகளிலும் முழுமையான மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. அதனால் சந்தையின் நம்பிக்கை மேலும் பலப்படும். ஆகவே, ஜான் மெக்கைனை விட பராக் ஒபாமா வந்தால் அமெரிக்கா நம்பிக்கை பலப்படும். தற்போதுள்ள பொருளியல் சமனற்ற நிலை மீட்சியடையும் வாய்ப்புகள் அதிகம் என்பது பொருளியல் நிபுணர்களின் ஆரூடம். பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, October 29, 2008

நிறை மாதம்



நிறை மாதம்.

குறை மாதம்

ஆனாலும்

நிறை மாதம்

சம்பளக்காரர்களுக்கு

ஃபெப்ருவரி.

Tuesday, October 21, 2008

மழை நன்றி



மழை நன்றி.


குடை மறந்த
மழை நாள்.

நனைந்தபடியே
நுழைந்தேன்
இல்லத்துள்.

என்ன நீங்க
கொஞ்சம் நின்னு
வரக்கூடாதா?
கேட்டாள் மனைவி.

சேலைத் தலைப்பால்
துவட்டினாள்
அம்மா.

Friday, October 17, 2008

எண்ணத்துப்பூச்சி


எண்ணத்துப்பூச்சி

கதைத்துக்
கொண்டிருந்தோம்
பூங்காவில்.


பறந்து வட்டமடித்த
வண்ணத்துப்பூச்சி
நெருங்கியது
உன் குழலருகில்.

என்ன புதுமையிது?!

வியக்கையில்
அசராமல் சொன்னாய்

இனம்
இனத்தோடு தானே சேரும்.


Thursday, October 16, 2008

குழந்தைமை



குழந்தைமை


இடறி விழுந்த
எரிச்சலில்
ஓங்கி உதைத்தான்
தரையை...

பாவம்!

வலியின்
வலிமை
அறியுமோ
பூமி?!



Wednesday, October 15, 2008

பெயரென்ன?



பெயரென்ன


பார்த்தேன்

சிரித்தாய்.

சிரித்தேன்

சினந்தாய்.

திரும்பினேன்

திரும்பினாய்.

தொடரும்

இப்படியான

விழி மாற்றங்களுக்கு

பெயரென்ன

உன் அகராதியில்?.

Monday, October 13, 2008

விழியீர்ப்பு


விழியீர்ப்பு


நீ
பார்த்து விடக் கூடாதென
நானும்.


நான்
கண்டு விடக் கூடாதென
நீயும்.


பயமாறிப்
பரிமாறிக் கொண்டோம்
பார்வைகளை.

மையமாய்
நம் விழிகள்
சந்தித்தன
ஒரு புள்ளியில்.

விளைந்த
விழியீர்ப்பு விசையை
அளக்கக் கருவியுமுண்டோ? !.

Saturday, October 11, 2008

‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க!


இராக் தலைநகர் பக்தாத். சூரியன் சற்று கீழிறங்கி வந்தது போல் வெயிலின் உக்கிரம். மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.ஒருநாள் அவனுக்கு அசரீரி கேட்கிறது. ‘நீ ஆடுகளை மேய்ப்பதற்காக படைக்கப்பட்டவனல்ல’.

செய்தி சிந்தையில் விழுந்ததும் அவனுடைய உள்ளம் தீவிரத்தேடலில் ஈடுபடத் துடித்தது. வேகமாக வீடு திரும்புகிறான். மகனின் அவசரக் கோலத்தைக் கண்ட தாய் கேட்கிறார். என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்பி விட்டாய்? ஆடுகளை மேய்க்கும் போது தான் கேட்ட செய்தியை தாயிடம் கூறுகிறான் அந்தத் தனயன். மகிழ்ந்தன இரு உள்ளங்கள்.

சிறுகச் சிறுகத் தான் சேமித்து வைத்திருந்த பொற்காசுகளை மகனிடம் கொடுக்கிறார். அவை தவறிவிடக் கூடாது என்பதற்காக அவருடைய சட்டையின் அடிப்பகுதியோடு சேர்த்து அந்தக் காசுகள் அடங்கிய பையைத் தைத்து விடுகிறார். அசரீரியாய் ஒலித்த குரலைக் கேட்டு உண்மையான அறிதலைத் தேடிப் புறப்பட்டுகிறான் அந்தச் சிறுவன்.

மிக நீண்ட கடல் பயணம். அவன் பயணிக்கும் கப்பலைக் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கிறார்கள். பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல். சித்தம் கலங்கிய அவர்கள், சொத்துக்கள் அனைத்தையும் கள்வர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இறுதியாக, அந்தக் கும்பலில் ஒருவன் கேட்கிறான். இன்னும் யாரிடமாவது பெறுமதி மிக்க பொருட்கள் இருக்கின்றனவா? துணிச்சலுடன் ஒலிக்கிறது ஒரு பிஞ்சுக்குரல். பயணிகள் எல்லோரிடமும் கேட்டுக் கேட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டீர்கள். என்னை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள்? ஆனால், என்னிடம் 40 பொற்காசுகள் உள்ளன என்றான். திருடர்களுக்கு தேள் கொட்டிய உணர்வு.

அந்தச் சிறுவன் நம்மை ஏமாற்றவே இவ்வாறு பொய்யுரைக்கிறான் என்றான் கும்பலில் இருந்த ஒருவன். இல்லை. நிச்சமாக இல்லை! என் சட்டையின் பின் பகுதியில் 40 பொற்காசுகள் தைத்து வைக்கப்பட்டுள்ளன என்றான் உறுதியாக. திருட வந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தீவிர ஆலோசனைக்குப் பிறகு அந்தச் சிறுவனை தங்கள் தலைவரிடம் அழைத்துச் சென்றனர். ஏனப்பா இந்தச் சிறுவனை அழைத்து வந்திருக்கிறீர்கள்? தலைவன் கோபமாகக் கேட்டான். தன்னிடம் 40 பொற்காசுகள் இருப்பதாக இவன் கூறுகிறான். எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்களே சோதித்துப் பாருங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வியப்பு மேலிட, அவர்கள் சொல்வது உண்மைதானா? என்று தலைவன், சிறுவனிடம் கேட்கிறான். அவனும் அதை ஆமோதிக்கிறான். அப்படியானால் அந்தப் பொற்காசுகளை எடுத்துத் தா என்று அவன் கேட்க, அந்தச் சிறுவன் சற்றும் தாமதிக்காமல் அவற்றை கொள்ளைக் கும்பல் தலைவனின் கையில் கொடுக்கிறான். சிறுவனின் நேர்மை, உண்மையின் மீது அவன் கொண்ட நம்பிக்கை, தனக்குப் பாதகம் நேர்ந்தாலும் பரவாயில்லை, எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என்ற அவனது உணர்வு. இவை அந்தக் கொள்ளைக் கும்பல் தலைவனை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது.

கேட்டவுடனேயே உண்மையைச் சொல்லும் துணிச்சல் எங்கிருந்து வந்தது உனக்கு? தலைவன் கேட்கிறான். என் அன்னையிடமிருந்து என்று பதில் சொன்ன அந்தச் சிறுவன், ‘உண்மை’யின் பின்புலத்தை விவரிக்கிறான். அசரீரியின் குரல் கேட்டுத் தான் மேற்கொள்ளூம் இந்தப் பயணம் உண்மையான அறிவைத்தேடும் முயற்சி. எந்தச் சூழலிலும் உண்மையைப் பேசத் தயங்காதே என்று என் தாய் எனக்குப் போதித்து அனுப்பினார். அந்த மந்திரச் சொல் தான் உண்மையைப் பேசும் தைரியத்தை எனக்குத் தந்தது என்றான். சிறுவனுக்கு இருக்கும் ஞானம் தங்களுக்கு இல்லாமல் போய் விட்டதே என்று திருடர்கள் தலைகுனிந்தனர். இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குரிய அந்தச் சிறுவன் யார் தெரியமா? ஜீலான் நகரில் பிறந்து ஆன்ம ஞானத்தேடலில் ஆழமான சுவடு பதித்த ‘‘கெளதுல் அ:லம்” அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அலைஹி தான்.

மறைந்தும் இறவாப் புகழுடன் வாழும் அந்த இறைநேசருடைய வரலாற்றைப் பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணி போல பதியச் செய்தவர் இந்தியாவின் தலைமகன் நம் பெருமைக்குரிய APJ அப்துல் கலாம்.



அண்மையில் மூன்று நாள் அதிகாரத்துவ பயணமாக அவர் சிங்கப்பூர் வந்திருந்தார். அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் கல்விக்காக இந்தியர்களால் நடத்தப்படும் ‘பவன் அனைத்துலகப் பள்ளி’க்கு அவர் விஜயம் செய்தார். இந்தியாவில் இப்படி ஒரு சுற்றுப்பயணத்தில் குடியரசுத்தலைவரை அருகே இருந்து பார்ப்பதென்பது முயலிடம் கொம்பைத்தேடும் கதைதான். ஆனால் சிங்கப்பூரில் அப்படியல்ல.

காலை 10.30 மணிக்கு விழா தொடக்கம். குறித்த நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாதுகாப்பு வீரர்கள் ‘பின்தொடர’ பீடுநடை போட்டு வந்தார் கலாம். பிஞ்சு மலர்கள் கைகளில் பற்றியிருந்த மலர்க் கொத்துகளை அன்புடன் வாங்கிக் கொண்டு அவர்களோடு சினேகத்துடன் உரையாடினார். அதன் பிறகு அவர் ஆற்றிய சிறப்புரையில் தான் அப்துல் காதிர் ஜீலானியின் வாழ்க்கையை எளிமையாக எடுத்துரைத்தார்.

புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர் C.V.ராமன், காந்திஜி ஆகியோரின் பெற்றோர் அவர்களுக்கு வழங்கிய போதனைகளையும் மேற்கோள் காட்டி வளரும் தலைமுறைக்குத் தேவையான வாழ்க்கைப் பாடத்தை அவர் நடத்தினார். உரை நிகழ்த்திய தருணத்தில் எங்கும் அவர் தன்னுடைய மேதமையை பறைசாற்றவில்லை. அரங்கில் நிரம்பியிருந்த குழந்தைகள் அத்தனைபேரிடமும் தனித்தனியே உரையாடுவது போன்று தனது பேச்சின் பாணியை அவர் வகுத்துக் கொண்டார்.

தொடக்கத்தில் குழந்தைகளைப் பார்த்து அவர் கேட்டார். நான் பாடம் நடத்துவதில் உங்களுக்கு விருப்பமா? அல்லது கதை சொல்வதில் ஆர்வமா?. அரங்கு முழுவதும் அமைதி. ஆசிரியை ஒருவர் பாடம் நடத்துங்கள் என்றார். நீங்கள் ஆசிரியர், மாணவர்களுக்கு வழி விடுங்கள் என்று விரைந்து மறுமொழி கூறினார். பின்னர் அவர் உரையாற்றிய விஷயங்கள் தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பச் செய்திகள். சுமார் 45 நிமிடம் அவருடைய சொற்பெருக்கு குழந்தைகளைக் குதூகலிக்க வைத்தது. இறுதியில் 25 குழந்தைகள் அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறக்காத்திருந்தனர்.

துடுக்கு நிறந்த ஒரு மாணவன் கேட்டான். நீங்கள் ஏன் வாழ்க்கைத் துணையைத் தேர்தெடுக்கவில்லை? சிரித்துக்கொண்டே கலாம் சொன்னார் உங்களுக்காவது நல்ல துணை அமைய நான் பிரார்த்திக்கிறேன்.

உங்களில் எத்தனை பேர் மருத்துவராக விருப்பம்? எத்தனை பேர் விஞ்ஞானியாகப் போகிறீர்கள்? அரசியல்வாதியாகப் போவது எத்தனை பேர்? என்று தொடர்ச்சியாகக் கேட்டுக் குழந்தைகளின் பதிலைப் பெற்றுக் கொண்டார்.அரசியல்வாதியாக விரும்பிய குழந்தைகளிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். நாட்டு முன்னேற்றத்தில் எங்கள் பங்கைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்று அவர்கள் கூற, வெரிகுட் என்றார்.

இறுதியாக மூன்று விஷயங்களை வலியுறுத்தினார். உண்மையையே பேசுங்கள், அதிலேயே நிலைத்து நில்லுங்கள், இதயத்திலுள்ள தயக்கங்களை வெளியே தள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெற்றி உங்களைத் தேடி வரும் என்றார்.

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைக்க கலாம் வந்திருந்தார். ஆனால் அங்கு குழுமியிருந்தவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வயதினர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதும் ‘உண்மையை’ அவர் முன்னிலைப் படுத்தினார். இப்போது இந்தப் பிஞ்சு உள்ளங்களிலும் அதையே விதைத்துச் சென்றிருக்கிறார்.

எல்லாக் குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் அதற்குரிய நேரம் இப்போது இல்லை. எனவே www.presidentofindia.nic.in என்ற இணையப் பக்கத்தில் உங்கள் கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்களுக்கான பதில் வந்து சேரும் என்றார்.

விடைபெற்றுச் சென்றவுடன் மாணவர்களிடம் கேட்டேன், இந்த விழா எப்படி இருந்தது? ‘இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படி ஒரு எளிமையான தலைவர் அவர்களுக்கு வாய்த்திருக்கிறார். நாங்கள் எதிர்பார்த்தை விட மிக நெருக்கமாக எங்களை வசீகரிக்கும் விதத்தில் அவர் பேச்சு இருந்தது. இனிமேல் எங்களுக்கான ‘ரோல்மாடல்’ உதாரண புருஷர் அப்துல் கலாம் தான்’ என்றனர்.

சிங்கப்பூர் பயணத்தில், தன்னைப்போலவே இன்னும் பலர் நாட்டுக்குத் தேவை என்ற எண்ணத்தை இளையோர் உள்ளங்களில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அப்துல் கலாம்.


(இது 01.02.2006 ல் எழுதப்பட்ட ஆக்கம்)

விசாரிப்பு




விசாரிப்பு


எப்படி இருக்கிறீங்க?
நல்லா இருக்கிறேன்.

நீங்க எப்படி?
நானும் தான்.

உச்சரித்துக் கொண்டன
உதடுகள்.

ஓரமாய் நின்று
கெக்கெலித்தது
உள் மனம்.

Friday, October 10, 2008

நிழல் யுத்தம்.




நிழல் யுத்தம்.

குறுகலான சந்து.

எதிரெதிர் திசையில்

நம் பயணம்.

மோதிவிடக் கூடாதென்ற
அவதானத்தில்
விலகியே செல்கிறோம்.

சட்டென
முட்டிக் கொள்கின்றன
பாழாய்ப் போன
நிழல்கள்.

யார் வந்து
மருந்திடுவார்
நம் காயங்களுக்கு?

Thursday, October 9, 2008

மாயவலை



மாயவலை

நான்

வீதி வரும்

வேளை பார்த்து

வாசலில்

காத்திருப்பாய்.

ஏய்!

அங்க பாரு

உன் ஆளு.

கிசுகிசுப்பாள்

தோழி

உன் காதோரம்.

என் காலடி

ஓசைக்கு

உன் விழியீர்ப்பைக்

கொடுத்து விட்டு

ஜடையை எடுத்து

ஒயிலாய்ப் பின்னுவாய்

ஒண்ணுமறியா

அப்பாவி போல்.

அதை விட

வலிமையான

வலை

உண்டோ உலகில்?

Wednesday, October 8, 2008

வானம்



வானம்

நிலா

இளவரசி

உலா வர

விரிக்கப்பட்ட

நீலக்கம்பளம்.

Tuesday, October 7, 2008

வேர்



வேர்

சினந்த முகத்தோடு

சட்டெனக் கேட்டாய்

நீ வேறு?

நான் வேறா?

இல்லையில்லை.

நீ தான்

என் வேர்!

Monday, October 6, 2008

தனியனா



தனியனா

தனியாக
இருக்கும் போது
எனை வந்து பார்
என்றார் மேலதிகாரி.

பாவம்!

நீ (மு)ப்போதும்
என்னுடன்
இருக்கிறாய்
என்பது
எப்படித் தெரியும்
அவருக்கு? :)

Saturday, October 4, 2008

ஏக்கம்



ஏக்கம்

ஓடிக் களைத்த
வினாடியில்
சாலையில் ஒதுங்கியது.

கனிவுடன்
எலும்பெடுத்துப் போட்டான்
இறைச்சிக் கடைக்காரன்.

நன்றி சொல்ல வழியின்றி
மருகித் தவிக்கிறது
வாலறுந்த நாய். :)

Friday, October 3, 2008

பூங்கோபம்



பூங்கோபம்

அந்தப் பூவின் மீது
கடுங்கோபம்
எனக்கு.

இருக்காதா பின்னே?

உன்னை விட அழகாய்
கோபப்பட முடியுமென்று
என்னிடமே
மல்லுக்கு நிற்கிறது!


கவிதை அறிமுகம் :)

அவ்வப்போது நான்
ஏதாவது கிறுக்குவேன்.

டேய் நீ சும்மாவே அப்படித்தான்
அதுல வேற பீடிகையா...
சொல்லிக் கொண்டே
நண்பர்கள் வாங்கிப் பார்ப்பார்கள்.

இறுதியில் டேய் இது
கவிதை மாதிரி இருக்குடா என்பார்கள்.

இதோ அந்த மாதிரிகளில்
சில பார்வைக்கு.... .

சாந்தமாகப் பாருங்கள்..
அவை காந்தமாய் உங்களை இழுத்தால்
மறக்காமல் மறுமொழி தாருங்கள்.

அவை என்னை
இன்னும் கொஞ்சம் கிறுக்க வைக்கும்...

Friday, September 12, 2008

வழிகாட்டும் அறிவுச்சுடர் !

எப்படியாவது அந்த மாமனிதரை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்று சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் மனதில் பதியமிட்டேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியிருந்த காலம் அது. பேராசிரியாக, விஞ்ஞானியாக, குடியரசுத்தலைவராக, நல்ல மனிதராக இவை எல்லாவற்றையும் தாண்டி இளையர்களின் முன்மாதிரி நாயகனாக அவர் இருப்பது தான், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கான அடிப்படை வித்து.

சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்தப் பேராசியர் ஒருமுறை புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைக்க வந்தார். அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த www.worldtamilnews.com இணைய வானொலிக்காக அவரை ஒரு நேர்காணல் செய்து விட வேண்டும் என்பது மன சங்கல்பம். ஆனால் வாய்ப்பு நழுவியது. அவருடைய உரையைக் கேட்கக் கூடிய கூட்டத்தையும், அதன் பிறகு அவரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள முடிண்டியடித்த கூட்டத்தையும் தாண்டி அவரை நெருங்கி கை கொடுப்பதற்கு மட்டுமே சந்தர்ப்பம் வாய்த்தது அப்போது. நமக்கு விதிச்சது அவ்வளவு தான் போலன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.

2006 ல் சிங்கப்பூர் வந்த பிறகு என்னுடைய முதல் பணியே அந்த மாமனிதர் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய செய்தியைச் சேகரிப்பது தான். பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரியல்ல, வாயிலேயே நேரடியாக விழுந்தது போல மனதுக்குள் உற்சாகம். இந்த முறை அவரைச் சந்தித்து நாலு கேள்வியாவது கேட்டுடணும்னு மனசு கங்கணம் கட்டியது. சிங்கப்பூரின் பவன் அனைத்துலகப் பள்ளியில் நடந்த அந்த விழாவுக்கு அவர் வந்தது பேராசிரியராக அல்ல. இந்தியாவின் முதல் தலைமகனாக, குடியரசுத் தலைவராக!

அந்தப் பதவியில் உள்ள ஒருவர், சாதாரணமாக இந்தியாவில் ஏதேனும் ஒரு விழாவுக்கு வந்தாலே பொதுமக்கள் பாடு திண்டாட்டம் தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் படுத்தி எடுத்து விடுவார்கள். ஆனால் அவர் இங்கு வந்த போது, இவரா இந்தியாவின் தலைமகன்? என்று வெளிநாட்டவர் வியக்குமளவு வெகு எளிமையாக அமைந்தது அந்த விழா. பாதுகாப்புக் கெடுபிடிகள் இல்லை. யாரோ பக்கத்து வீட்டு நபர் நம்மை வந்துச் சந்தித்துப் போவது போல அமைந்தது அந்த நிகழ்வு. அப்போதும் கை குலுக்கிக் கொண்டதைத் தவிர அதிக நேரம் பேச முடியவில்லை.

வாய்ப்புகள் மறுக்கப்படும் போது, அல்லது தள்ளிப் போகும் போது அடுத்த முறை இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் எழுவது இயல்பு. அப்படியே சமாதானப்படுத்திக் கொண்டேன். அவருடைய குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடித்து தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்ற மாதம் (ஆகஸ்ட் 26,27 ’08) நாட்களில் மீண்டும் அந்த மாமனிதர் சிங்கப்பூர் வருகிறார் என்ற செய்தி சிந்தையில் தேன் பாய்ச்சியது. தகவல் கிடைத்ததும் சந்திக்கத் தேவையான அத்தனை பகீரதப் பிரயத்தனங்களையும் செய்து, இறையருளால் இம்முறை கிட்டியது அந்த மாமனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு. யாரவர்? இந்தியாவின் முன்னைய குடியரசுத் தலைவர் டாகடர். A.P.J.அப்துல் கலாம்.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதை பெ(ஏ)ற்றுக் கொள்வதற்காகவும், இங்குள்ள இந்திய வர்த்தக அமைப்புகள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அமைந்தது அவருடைய இந்தப் பயணம். சிங்கப்பூரில் அவர் தங்கியிருந்தது சுமார் ஒன்றரை நாள் மட்டுமே.

ஆகஸ்ட் 26 இரவு ஒன்பதே முக்காலுக்கு அவரைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. குறித்த நேரத்துக்குச் சரியாக வந்தார். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறை, அவருடைய அறிவொளியின் காரணமாகக் கூடுதல் அழகில் ஜொலித்தது. எளிமையின் மொத்த உருவம் உயிர் கொண்டது போல அமைந்தது அவருடைய வரவு. முகமன் சொல்லிக் கொண்டோம். தொடங்கலாமா சார்? நீங்க தயார்னா ஆரம்பிச்சிடலாம்? என்றார். அடடா? எவ்வளவு உன்னதமான மாமனிதர், முப்பது வயதைத் தொட்டு உரசிய என்னை சார் என விளித்தது சற்று சங்கோஜத்தைத் தந்தாலும், அவரைப் பற்றிய மதிப்பீடு இன்னும் உயர்ந்தது மனதுக்குள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டுச் சில கேள்விகளைக் கேட்டேன். ஒவ்வொரு கேள்வியையும் ஆழ உள்வாங்கிக் கொண்டு, ஒரு பாமரனுக்குப் பாடம் நடத்தும் தொனியில் அவற்றுக்கான பதில்களைத் தந்த போது, நான் மீண்டும் என்னுடைய பள்ளிக் காலத்துக்குப் போயிருந்தேன். கண்ணியமிக்க ஆசிரியரிடம் மண்டியிட்டுப் பாடம் கேட்கும் மாணவனைப் போல் அவர் வார்த்தைகளுக்கு முன்னால் மண்டியிட்டது மனசு. சில முரண்பாடான கேள்விகளை முடிக்கும் முன்னரே நிர்தாட்சண்யமாக மறுத்து, அதற்கான காரணங்களை விளக்கிய போது அவருடைய அறிவின் ஆழமும், அகலமும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

இறுதிக் கேள்வி அனைவருக்கும் பொதுவானது. இந்திய இளையர்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் பெரும்பான்மையான இளையர்களுக்கு நீங்க ஒரு முன்மாதிரி. அவர்களுக்குத் தாங்கள் வழங்கும் அறிவுரை என்ன?

சிங்கப்பூராகட்டும், இந்தியாவாகட்டும், உலகின் எந்தப் பகுதியில் வாழும் இளையர்களாகட்டும் அவர்களுடைய மனதில் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் நான் யாராக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கு அது. ஒரு விஞ்ஞானியா? சிறந்த மருத்துவரா? தலைசிறந்த நல்ல அரசியல் தலைவரா? வானவியல் வல்லுநரா? தொழில்நுட்ப மேதையா? நான் யாராகப் போகிறேன் என்பதற்கான இலட்சியம் வேண்டும்.

அந்த இலட்சியத்தை அடைவதற்காக அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவு அறம் காக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர். எனவே இலட்சியத்தை அடைவதற்கான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள் என்று தேடித் தேடித் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு, விடா முயற்சி - கொண்ட குறிக்கோளை அடைவதற்கான பாதைகளை வகுத்து அவற்றில் பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்தில் சில தோல்விகள் வந்தால் அச்சப்படாமல், தோல்விக்கு ஒரு நாள் நம்மால் தோல்வியைத் தர முடியும் என்ற நம்பிக்கையோடு முன்னேற வேண்டும். தோல்வி கண்டு சேர்ந்து விடக் கூடாது. இவை அத்தனைக்கும் ஆதார சுருதி நல்லொழுக்கம். இளைய சமுதாயத்திடம் நல்லொழுக்கத்தைக் கொண்டு வர முக்கியக் காரணி நல்ல குடும்பங்கள். நான் அதற்கு ஒரு கருத்துச் சொல்வேன்.

மனதிலே நல்லொழுக்கம் இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்.

நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.

குடும்பத்தில் சாந்தி நிலவினால்
நாட்டில் சீர்முறை உயரும்.

நாட்டில் சீர்முறை உயர்ந்தால்
நம்மிடத்தில் அமைதி நிலவும்.

எனவே, மனதிலே நல்லொழுக்கம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். புன்னகையோடு சொல்லி முடித்தார் டாக்டர் அப்துல் கலாம். என் வாழ்க்கைப் பாதைதயில் சுடர்விட்டது அறிவொளிக்கதிர்.

உங்களுக்கு...? :)




Thursday, September 11, 2008

வெற்றியின் விலாசம் !

துபையின் புகழ் பெற்ற நிறுவனம் ETA Ascon Star குழுமம். பாலைவனமாக இருந்த துபையில் 1973 ல் ஒரு கட்டுமான நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் சரியான, முறையான நிர்வாகத் திறமையாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் இடையறாத உழைப்பின் காரணமாகவும் இன்று அந்நிறுவனம் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கிறது.

கட்டுமானத்துறையை மையப்புள்ளியாகக் கொண்டு இடப்பட்ட முதல் விதை அப்படியே வளர்ந்து ஆல விருட்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மின்னணுவியல், இயந்திரவியல், இயந்திரம் தூக்கிகள், கட்டுமானப் பொருட்கள், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம், சுற்றுச் சூழல் மேலாண்மை, கல்வி இப்படி அவர்கள் தடம் பதித்துள்ள துறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ETA Ascon Star குழும நிறுவனங்கள் வெறுமனே ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் மட்டும் செயல்படவில்லை. உலகின் 22 நாடுகளில் அவை கிளைகளைப் பரப்பியுள்ளன. தாங்கள் காலடி வைத்த அனைத்து நாடுகளுக்கும் மாதமொன்றுக்கு பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகின்றன. இன்று அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 67,000.


இவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்துவிட்ட போதும் தாங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது என்கிறார், ETA Ascon Star குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திரு. செய்யது முஹம்மது ஸலாஹுத்தீன். அண்மையில் சிங்கப்பூர் வந்த போது அவர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. இறைவனின் மகத்தான கருணையும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பும் தான் தங்களுக்குரிய பெருமைகளின் மூலதனம் என்கிறார் வெகு எளிமையாக. திரு.செய்யது முஹம்மத் ஸலாஹுத்தீன் அவர்களோடு உரையாடியதிலிருந்து சில துளிகள்....

பெரும்பாலான இந்தியர்கள் இன்று தொழில் துறையில் இருந்தாலும், அவர்களில் சாதனை வெளிச்சத்துக்குள் வந்தவர்கள் வெகு சொற்பம். வியாபாரம் என்பது ஒரு வகை விளையாட்டு. அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இசைந்து நம்முடைய ஆட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விளையாட வேண்டியதை ஒருவரே ஆடித் தீர்க்கலாம் என்று முனைந்து பார்ப்பது சவாலுக்குப் பொருத்தமாக இருக்கலாம். வாழ்க்கையில் வெற்றியைத் தருமா? என்பது கேள்விக்குறி.

இந்தியர்கள் எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதை முதலில் ஒழுங்கமைவுக்கு (Systemize) உட்படுத்த வேண்டும். இன்னார் இருந்தால் மட்டுமே வியாபாரம் நடக்கும் என்ற நிலையை மாற்றி, யார் வந்து அமர்ந்தாலும் இறையருளால் கல்லா நிறைய வேண்டும். ஒருவரை மட்டுமே நம்பி ஒரு வியாபாரம் இருக்கக் கூடாது. இவ்வாறான ஒழுங்கமைவுத் திட்டமிடல் (Systematic Plan) வெற்றிக்கான முதல் படி.

வியாபாரம் - அலையாடும் கடல். படகை எப்படிச் செலுத்துகிறோமோ அதைப் பொறுத்தே பயணமும் இனிதாகும். இடையில் இயற்கை இடையூறுகள் வரலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்கும் வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை தோல்வி வந்தவுடன் ஒட்டுமொத்தத் தொழிலையும் இழுத்து மூடு! என்று மனமுடைந்து போய் விடக் கூடாது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, தவறுகளைக் களைய வேண்டும்.

வெற்றியின் போதும், தோல்வியின் போதும் மனதைச் சமமமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். வெற்றிக் கோட்டைத் தொட்டவுடன் மிதப்பில் இருந்து விடாமல், இன்னும் பலர் அதைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக ஒரு மனிதன் நான்கு வயதிலேயே போதுமான கல்வியைப் பெற்று விடுகிறான். அதன் பிறகு அவன் பள்ளிக்குச் சன்று பெருக்கிக் கொள்வதெல்லாம் அவனுடைய புத்திக் கூர்மையைத் தான். அதாவது, கல்வி ஒருவருக்குப் பள்ளியில் ஆரம்பிக்கவில்லை. அது தொடங்குவது அவரவர் வீடுகளில். பெற்றோர்கள் தான் அங்கு ஆசிரியர்கள். எனவே பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்களிடமிருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேரம் பேசுவது, யாரை ஒருமையில், இருமையில், பன்மையில் அழைப்பது இவையெல்லாம் நான்கு வயதுக்குள் மனிதன் தெரிந்து கொள்கிறான். அதற்குப் பெற்றோர்களின் துணை அவசியம். உடன் பணியாற்றுபவர்களை உறவினர் போல மதிக்கும் பண்பும் பெற்றோரிடமிருந்து தான் நமக்கு வரும்.

எங்கே சென்றாலும் புத்தாக்கச் சிந்தனைகளோடு (Innovative Ideas) தொழிலில் இறங்க வேண்டும். பிறர் செய்வது போன்று இல்லாமல், அவர்களிலிருந்து எந்த வகையில் தனித்து வெளிப்படுவது என்ற சிந்தனையோடு தொழிலை முறைப்படுத்த வேண்டும்.


தனித்துச் சாதிப்பது சற்று எளிமையான காரியம். ஆனால் மற்றவரோடு சேர்ந்து உழைக்கும் போது அதில் இருக்கும் சவால்கள் அதிகம். அவற்றைத் தெரிந்து கொண்டு, சமாளிக்கும் உத்திகளைக் கற்றுக் கொண்டால் வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. அதுவே நம்மைத் தேடி வரும்.





Sunday, June 1, 2008

வழியில் விழியில் விழுந்தவை

மிக நீண்....ட இடைவெளிக்குப் பிறகு வலைமனையில்.

அன்றாட வாழ்வில் நாம்
சந்திக்கும் மனிதர்களிடமிருந்து
பெற்றுக் கொண்டவைகளையும்,
கற்றுக் கொண்டவைகளையும்
மனம் திறந்து முன் வைப்பது நோக்கம்.

பகிர்வேன்....