Friday, September 12, 2008

வழிகாட்டும் அறிவுச்சுடர் !

எப்படியாவது அந்த மாமனிதரை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்று சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் மனதில் பதியமிட்டேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியிருந்த காலம் அது. பேராசிரியாக, விஞ்ஞானியாக, குடியரசுத்தலைவராக, நல்ல மனிதராக இவை எல்லாவற்றையும் தாண்டி இளையர்களின் முன்மாதிரி நாயகனாக அவர் இருப்பது தான், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கான அடிப்படை வித்து.

சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்தப் பேராசியர் ஒருமுறை புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைக்க வந்தார். அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த www.worldtamilnews.com இணைய வானொலிக்காக அவரை ஒரு நேர்காணல் செய்து விட வேண்டும் என்பது மன சங்கல்பம். ஆனால் வாய்ப்பு நழுவியது. அவருடைய உரையைக் கேட்கக் கூடிய கூட்டத்தையும், அதன் பிறகு அவரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள முடிண்டியடித்த கூட்டத்தையும் தாண்டி அவரை நெருங்கி கை கொடுப்பதற்கு மட்டுமே சந்தர்ப்பம் வாய்த்தது அப்போது. நமக்கு விதிச்சது அவ்வளவு தான் போலன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.

2006 ல் சிங்கப்பூர் வந்த பிறகு என்னுடைய முதல் பணியே அந்த மாமனிதர் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய செய்தியைச் சேகரிப்பது தான். பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரியல்ல, வாயிலேயே நேரடியாக விழுந்தது போல மனதுக்குள் உற்சாகம். இந்த முறை அவரைச் சந்தித்து நாலு கேள்வியாவது கேட்டுடணும்னு மனசு கங்கணம் கட்டியது. சிங்கப்பூரின் பவன் அனைத்துலகப் பள்ளியில் நடந்த அந்த விழாவுக்கு அவர் வந்தது பேராசிரியராக அல்ல. இந்தியாவின் முதல் தலைமகனாக, குடியரசுத் தலைவராக!

அந்தப் பதவியில் உள்ள ஒருவர், சாதாரணமாக இந்தியாவில் ஏதேனும் ஒரு விழாவுக்கு வந்தாலே பொதுமக்கள் பாடு திண்டாட்டம் தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் படுத்தி எடுத்து விடுவார்கள். ஆனால் அவர் இங்கு வந்த போது, இவரா இந்தியாவின் தலைமகன்? என்று வெளிநாட்டவர் வியக்குமளவு வெகு எளிமையாக அமைந்தது அந்த விழா. பாதுகாப்புக் கெடுபிடிகள் இல்லை. யாரோ பக்கத்து வீட்டு நபர் நம்மை வந்துச் சந்தித்துப் போவது போல அமைந்தது அந்த நிகழ்வு. அப்போதும் கை குலுக்கிக் கொண்டதைத் தவிர அதிக நேரம் பேச முடியவில்லை.

வாய்ப்புகள் மறுக்கப்படும் போது, அல்லது தள்ளிப் போகும் போது அடுத்த முறை இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் எழுவது இயல்பு. அப்படியே சமாதானப்படுத்திக் கொண்டேன். அவருடைய குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடித்து தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்ற மாதம் (ஆகஸ்ட் 26,27 ’08) நாட்களில் மீண்டும் அந்த மாமனிதர் சிங்கப்பூர் வருகிறார் என்ற செய்தி சிந்தையில் தேன் பாய்ச்சியது. தகவல் கிடைத்ததும் சந்திக்கத் தேவையான அத்தனை பகீரதப் பிரயத்தனங்களையும் செய்து, இறையருளால் இம்முறை கிட்டியது அந்த மாமனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு. யாரவர்? இந்தியாவின் முன்னைய குடியரசுத் தலைவர் டாகடர். A.P.J.அப்துல் கலாம்.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதை பெ(ஏ)ற்றுக் கொள்வதற்காகவும், இங்குள்ள இந்திய வர்த்தக அமைப்புகள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அமைந்தது அவருடைய இந்தப் பயணம். சிங்கப்பூரில் அவர் தங்கியிருந்தது சுமார் ஒன்றரை நாள் மட்டுமே.

ஆகஸ்ட் 26 இரவு ஒன்பதே முக்காலுக்கு அவரைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. குறித்த நேரத்துக்குச் சரியாக வந்தார். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறை, அவருடைய அறிவொளியின் காரணமாகக் கூடுதல் அழகில் ஜொலித்தது. எளிமையின் மொத்த உருவம் உயிர் கொண்டது போல அமைந்தது அவருடைய வரவு. முகமன் சொல்லிக் கொண்டோம். தொடங்கலாமா சார்? நீங்க தயார்னா ஆரம்பிச்சிடலாம்? என்றார். அடடா? எவ்வளவு உன்னதமான மாமனிதர், முப்பது வயதைத் தொட்டு உரசிய என்னை சார் என விளித்தது சற்று சங்கோஜத்தைத் தந்தாலும், அவரைப் பற்றிய மதிப்பீடு இன்னும் உயர்ந்தது மனதுக்குள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டுச் சில கேள்விகளைக் கேட்டேன். ஒவ்வொரு கேள்வியையும் ஆழ உள்வாங்கிக் கொண்டு, ஒரு பாமரனுக்குப் பாடம் நடத்தும் தொனியில் அவற்றுக்கான பதில்களைத் தந்த போது, நான் மீண்டும் என்னுடைய பள்ளிக் காலத்துக்குப் போயிருந்தேன். கண்ணியமிக்க ஆசிரியரிடம் மண்டியிட்டுப் பாடம் கேட்கும் மாணவனைப் போல் அவர் வார்த்தைகளுக்கு முன்னால் மண்டியிட்டது மனசு. சில முரண்பாடான கேள்விகளை முடிக்கும் முன்னரே நிர்தாட்சண்யமாக மறுத்து, அதற்கான காரணங்களை விளக்கிய போது அவருடைய அறிவின் ஆழமும், அகலமும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

இறுதிக் கேள்வி அனைவருக்கும் பொதுவானது. இந்திய இளையர்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் பெரும்பான்மையான இளையர்களுக்கு நீங்க ஒரு முன்மாதிரி. அவர்களுக்குத் தாங்கள் வழங்கும் அறிவுரை என்ன?

சிங்கப்பூராகட்டும், இந்தியாவாகட்டும், உலகின் எந்தப் பகுதியில் வாழும் இளையர்களாகட்டும் அவர்களுடைய மனதில் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் நான் யாராக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கு அது. ஒரு விஞ்ஞானியா? சிறந்த மருத்துவரா? தலைசிறந்த நல்ல அரசியல் தலைவரா? வானவியல் வல்லுநரா? தொழில்நுட்ப மேதையா? நான் யாராகப் போகிறேன் என்பதற்கான இலட்சியம் வேண்டும்.

அந்த இலட்சியத்தை அடைவதற்காக அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவு அறம் காக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர். எனவே இலட்சியத்தை அடைவதற்கான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள் என்று தேடித் தேடித் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு, விடா முயற்சி - கொண்ட குறிக்கோளை அடைவதற்கான பாதைகளை வகுத்து அவற்றில் பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்தில் சில தோல்விகள் வந்தால் அச்சப்படாமல், தோல்விக்கு ஒரு நாள் நம்மால் தோல்வியைத் தர முடியும் என்ற நம்பிக்கையோடு முன்னேற வேண்டும். தோல்வி கண்டு சேர்ந்து விடக் கூடாது. இவை அத்தனைக்கும் ஆதார சுருதி நல்லொழுக்கம். இளைய சமுதாயத்திடம் நல்லொழுக்கத்தைக் கொண்டு வர முக்கியக் காரணி நல்ல குடும்பங்கள். நான் அதற்கு ஒரு கருத்துச் சொல்வேன்.

மனதிலே நல்லொழுக்கம் இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்.

நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.

குடும்பத்தில் சாந்தி நிலவினால்
நாட்டில் சீர்முறை உயரும்.

நாட்டில் சீர்முறை உயர்ந்தால்
நம்மிடத்தில் அமைதி நிலவும்.

எனவே, மனதிலே நல்லொழுக்கம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். புன்னகையோடு சொல்லி முடித்தார் டாக்டர் அப்துல் கலாம். என் வாழ்க்கைப் பாதைதயில் சுடர்விட்டது அறிவொளிக்கதிர்.

உங்களுக்கு...? :)




Thursday, September 11, 2008

வெற்றியின் விலாசம் !

துபையின் புகழ் பெற்ற நிறுவனம் ETA Ascon Star குழுமம். பாலைவனமாக இருந்த துபையில் 1973 ல் ஒரு கட்டுமான நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் சரியான, முறையான நிர்வாகத் திறமையாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் இடையறாத உழைப்பின் காரணமாகவும் இன்று அந்நிறுவனம் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கிறது.

கட்டுமானத்துறையை மையப்புள்ளியாகக் கொண்டு இடப்பட்ட முதல் விதை அப்படியே வளர்ந்து ஆல விருட்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மின்னணுவியல், இயந்திரவியல், இயந்திரம் தூக்கிகள், கட்டுமானப் பொருட்கள், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம், சுற்றுச் சூழல் மேலாண்மை, கல்வி இப்படி அவர்கள் தடம் பதித்துள்ள துறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ETA Ascon Star குழும நிறுவனங்கள் வெறுமனே ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் மட்டும் செயல்படவில்லை. உலகின் 22 நாடுகளில் அவை கிளைகளைப் பரப்பியுள்ளன. தாங்கள் காலடி வைத்த அனைத்து நாடுகளுக்கும் மாதமொன்றுக்கு பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகின்றன. இன்று அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 67,000.


இவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்துவிட்ட போதும் தாங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது என்கிறார், ETA Ascon Star குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திரு. செய்யது முஹம்மது ஸலாஹுத்தீன். அண்மையில் சிங்கப்பூர் வந்த போது அவர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. இறைவனின் மகத்தான கருணையும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பும் தான் தங்களுக்குரிய பெருமைகளின் மூலதனம் என்கிறார் வெகு எளிமையாக. திரு.செய்யது முஹம்மத் ஸலாஹுத்தீன் அவர்களோடு உரையாடியதிலிருந்து சில துளிகள்....

பெரும்பாலான இந்தியர்கள் இன்று தொழில் துறையில் இருந்தாலும், அவர்களில் சாதனை வெளிச்சத்துக்குள் வந்தவர்கள் வெகு சொற்பம். வியாபாரம் என்பது ஒரு வகை விளையாட்டு. அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இசைந்து நம்முடைய ஆட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விளையாட வேண்டியதை ஒருவரே ஆடித் தீர்க்கலாம் என்று முனைந்து பார்ப்பது சவாலுக்குப் பொருத்தமாக இருக்கலாம். வாழ்க்கையில் வெற்றியைத் தருமா? என்பது கேள்விக்குறி.

இந்தியர்கள் எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதை முதலில் ஒழுங்கமைவுக்கு (Systemize) உட்படுத்த வேண்டும். இன்னார் இருந்தால் மட்டுமே வியாபாரம் நடக்கும் என்ற நிலையை மாற்றி, யார் வந்து அமர்ந்தாலும் இறையருளால் கல்லா நிறைய வேண்டும். ஒருவரை மட்டுமே நம்பி ஒரு வியாபாரம் இருக்கக் கூடாது. இவ்வாறான ஒழுங்கமைவுத் திட்டமிடல் (Systematic Plan) வெற்றிக்கான முதல் படி.

வியாபாரம் - அலையாடும் கடல். படகை எப்படிச் செலுத்துகிறோமோ அதைப் பொறுத்தே பயணமும் இனிதாகும். இடையில் இயற்கை இடையூறுகள் வரலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்கும் வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை தோல்வி வந்தவுடன் ஒட்டுமொத்தத் தொழிலையும் இழுத்து மூடு! என்று மனமுடைந்து போய் விடக் கூடாது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, தவறுகளைக் களைய வேண்டும்.

வெற்றியின் போதும், தோல்வியின் போதும் மனதைச் சமமமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். வெற்றிக் கோட்டைத் தொட்டவுடன் மிதப்பில் இருந்து விடாமல், இன்னும் பலர் அதைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக ஒரு மனிதன் நான்கு வயதிலேயே போதுமான கல்வியைப் பெற்று விடுகிறான். அதன் பிறகு அவன் பள்ளிக்குச் சன்று பெருக்கிக் கொள்வதெல்லாம் அவனுடைய புத்திக் கூர்மையைத் தான். அதாவது, கல்வி ஒருவருக்குப் பள்ளியில் ஆரம்பிக்கவில்லை. அது தொடங்குவது அவரவர் வீடுகளில். பெற்றோர்கள் தான் அங்கு ஆசிரியர்கள். எனவே பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்களிடமிருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேரம் பேசுவது, யாரை ஒருமையில், இருமையில், பன்மையில் அழைப்பது இவையெல்லாம் நான்கு வயதுக்குள் மனிதன் தெரிந்து கொள்கிறான். அதற்குப் பெற்றோர்களின் துணை அவசியம். உடன் பணியாற்றுபவர்களை உறவினர் போல மதிக்கும் பண்பும் பெற்றோரிடமிருந்து தான் நமக்கு வரும்.

எங்கே சென்றாலும் புத்தாக்கச் சிந்தனைகளோடு (Innovative Ideas) தொழிலில் இறங்க வேண்டும். பிறர் செய்வது போன்று இல்லாமல், அவர்களிலிருந்து எந்த வகையில் தனித்து வெளிப்படுவது என்ற சிந்தனையோடு தொழிலை முறைப்படுத்த வேண்டும்.


தனித்துச் சாதிப்பது சற்று எளிமையான காரியம். ஆனால் மற்றவரோடு சேர்ந்து உழைக்கும் போது அதில் இருக்கும் சவால்கள் அதிகம். அவற்றைத் தெரிந்து கொண்டு, சமாளிக்கும் உத்திகளைக் கற்றுக் கொண்டால் வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. அதுவே நம்மைத் தேடி வரும்.