Monday, November 24, 2008

கவிஞர் யுகபாரதிக்கு வாழ்த்து.



(நவம்பர்) 23.11.08 கவிஞர் யுகபாரதியின்
திருமணம் இனிதே நடந்தேறியது.
மணமக்கள் வாழ்வாங்கு வாழப்
பிரார்த்தனையும், வாழ்த்தும்.
அவருடைய திருமண அழைப்பிதழின்
பின்பகுதியில் இடம்பெற்றுள்ள
கவிதையின் ஒலிவடிவம்

Friday, November 21, 2008

காத்து கறுப்பு


காத்து கறுப்பு
ஏனோ தெரியலை
அடிக்கடி வந்து
போகிறது
தீக்குளித்த
கறுத்தம்மாவின்
நினைவு।
சுழன்றடித்த
காற்றின் வேகத்தில்
மின் கம்பியில்
மோதி
உயிர் விட்ட
காகத்தைக் கண்ட
கணந்தொட்டு....:(

Thursday, November 20, 2008

நாய்ப்பாசம்



நாய்ப்பாசம்.

பரபரப்பான நெடுஞ்சாலை.

எதையோ எதையோ
தேடும் முனைப்பில்
காத்து நிற்கும்
வாகனங்கள்।

பச்சை
ஒளிரும் வேளை
பாய்ந்து வந்தது
வீதியோர ராஜா।

மருண்ட அதன் விழிகளில்
வாகனங்களின்
எதிரொலி।

சடுதியில் சாலை புகுந்து
நெஞ்சோடு சேர்த்தணைத்தான்
ராஜாவை
வீதியோரச் சின்னமணி।

வசையின் இசையோடு
நடுச்சாலையில்
அரங்கேறியது
உயிர்களிடத்தில்
அன்பு செய்.


Wednesday, November 19, 2008

நரை



நரை


முதுமை
முகவரியின்
முதல் வரி.

அந்தி(ம)க் கதிரின்
ஆரம்ப
நிறப்பிரிகை.

ஒழுகும் ஆயுளை
உணர்த்தும்
ஒளிக் கீற்று.

தழும்பும் இளமை
தடம் மாறாமல்
தடுக்கும் சமிக்ஞை.

தடுமாறிய தருணங்களை
மீள்பார்த்துச்
சரிபார்க்கச் சொல்லும்
மனக்கணக்கு.

காலன் பதிவேட்டில்
புதுக்கணக்குக்கான
ஆதிச் சுழி.

Tuesday, November 18, 2008

கொழந்த


கொழந்த :)

ட்ரிங்.. .. .. ட்ரிங்.. .. ..

வாழ்த்துகள்.

மகிழ்ச்சி.

என்ன குழந்தை?
....

யாரை மாதிரி?
...

தாத்தா?
....

பாட்டி?
....

அம்மம்மா?
...

அம்மா?
....

அப்பா?
...

பின்னே யாரு மாதிரி?

கொழந்த மாதிரி :)

Monday, November 17, 2008

கரையே(ற்)றுவாரா ஒபாமா !?



"மாற்றம்" என்ற மந்திரச் சொல் அமெரிக்க வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் போட்டிருக்கிறது. அண்மைய அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்பார். அமெரிக்கப் பொருளியலின் இமாலயச் சரிவு உலகளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒபாமா அதை எப்படிச் சரிக்கட்டப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. புஷ் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 700 பில்லியன் உதவித் தொகை ஓர் ஆறுதலைத் தந்ததே தவிர பொருளியலில் தேறுதலைத் தரவில்லை.

ஒபாமா அலுவலகத்துக்குள் நுழைந்த முதல் நாளே அவருக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவு சிக்கலான பொருளியல் சவால்களைச் சமாளிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இருக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதென்றால், தினமும் பத்தாயிரம் வீடுகள் வங்கிகளால் மீட்டுக் கொள்ளப்பட்டு பின்பு ஏலத்தில் விடப்படுகின்றன.

1930 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா மிகப் பெரிய பொருளியல் சரிவைச் சந்தித்திருக்கிறது. அதன் விளைவு, வேலையின்மை விகிதம் 10 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. முன்பு அது ஆறு விழுக்காடாக இருந்தது. பதவி விலகும் அதிபர் புஷ், 10.3 டிரில்லியன் டாலர் கடன் சுமையை அமெரிக்க மக்களின் தலையில் சுமத்திச் செல்கிறார். தமது எட்டு ஆண்டு கால ராஜபோகத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போமா? நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் வருடத்தில் 300 நாட்கள் அவர் வேலை செய்தால் 7,15,000 வருடங்களுக்குப் பிறகு தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார். இப்பவே கண்ணைக் கட்டுதா?

இந் நிலையில், அமெரிக்க மக்களுக்குத் தேவை இமாலய மாற்றம். தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக ஒபாமா வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். அவை நடுத்தர மக்களுக்கும், வறுமையில் வாடுவோருக்கும் மிகுந்த பயனளிக்கும் என்பது எதிர்பார்ப்பு.

உதாரணத்திற்கு, Un Employment Insurance வேலையில்லாதோருக்குக் காப்பீடு, தனி நபர் வருமான வரிக் குறைப்பு, செலுத்த முடியாத கடன் தொகைக்குப் பகரமாக வங்கிகள் வீடுகளைப் பிடுங்கிக் கொள்வதால் நஷ்டத்தில் தவிப்போருக்கு உதவுவது போன்ற பல திட்டங்களைச் சொல்லலாம். இவை நடுத்தர மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் உதவித் திட்டம் வரையப்படும் என்று கூறியிருக்கின்றார் ஒபாமா. அதே சமயம், இதற்கு ஏற்படும் செலவை ஈடுகட்டுவதற்கு இந்தச் சுமையை நிறுவனங்களின் தலையில் சுமத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். அவருடைய புதிய பொருளாதாரக் கொள்கையைப் பார்க்கும் போது அதிகமான வரிச் சலுகைகள் நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் வேலை இழந்தோர் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம். பொருளியல் நிலைத்தன்மை ஏற்படாதவரை அந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்கப் பணிகளை வெளிக்குத்தகைக்கு விடுவதன் மூலம் அங்குள்ள வேலைச் சந்தை அதிகம் பாதிக்கப்படுகிறது என்பது (Democratic Party) ஜனநாயகக் கட்சியின் வாதம். ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்ட பிறகு அதற்கு அவர்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை பலனளிக்குமா என்பது கேள்விக்குறி.

Out sourcing எனப்படும் வெளிக்குத்தகைக்குப் பணிகளை ஒப்படைத்திருக்கும் நிறுவனங்களுக்குரிய வரிச்சலுகையை அகற்றப் போவதாகச் சொல்கிறார் ஒபாமா. அப்படி அகற்றப்படும் போது அதிகமான அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கிறார். ஒரு கோணத்தில் அது சரி. ஆனால் மறுகோணத்தில், இதனால் ஏற்படும் விளைவுகளென்ன தெரியுமா? வரிச்சலுகை குறையும் போது அமெரிக்க நிறுவனங்களுக்கான லாபம் பாதிக்கப்படுகிறது. அல்லது (Production Cost) உற்பத்திச் செலவு உயர்த்தப்படுகின்றது. அதன் எதிர்வினையாக அமெரிக்கப் பொருட்களின் போட்டித் தன்மை பாதிக்கப்படும்.

அண்மைய நாட்களில் பரவலாகப் பேசப்படும் தாராளமயம், தடையற்ற வர்த்தகம் ஆகியன ஒபாமா சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சிக்குக் கசப்பான கொள்கைகள். பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்கும் திறன் பெற்ற நிபுணர்களைத் தன்னோடு இணைத்திருப்பதன் மூலம் நிலைமையை ஓரளவு சரி செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். அவருடைய குழுவில் பொருளியல் தாராள மயத்தை ஆதரிக்காத நிபுணர்களும், வயதில் குறைந்த ஆலோசகர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் மனப்போக்குப் பொதுவாக, Micro Economics எனப்படும் நுண் பொருளியலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் நிறுவனங்களுக்கான சுமைகள் மேலும் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை, அந்தச் சுமையால் கிடைக்கக் கூடிய லாபம் சாதாரண மக்களுக்குப் போய்ச் சேரக்கூடிய ஒரு வாய்ப்பும் இருக்கின்றது.

ஒபாமா ஆசிய வட்டார அரசியலில் அதிக நாட்டமுடையவர். எனவே, இங்குள்ள நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை அவர் வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மற்ற அமெரிக்க அதிபர்களைப் போலல்லாமல் இவருக்கு ஆசியாவின் அனுபவம் அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசியாவுக்குச் சாதகமான பல விஷயங்களைச் செய்வார். குறிப்பாக வர்த்தகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sunday, November 16, 2008

இல்லத்தரசி - ஒலிக் கவிதை



(கவிஞர் யுகபாரதியின் கவிதை ஒலிவடிவிலும்)

இனி நான் எதற்காகவும்
காத்திருக்கத் தேவையில்லை
கிடைத்துவிட்டாள்

இதுவரை சேமித்த கனவுகளை
அவளுக்காகச் செலவழிப்பேன்
அவளுக்கு அவள் விரும்பும்
செல்லப் பெயரைச் சூட்டுவேன்

கோபத்தில் இருப்பதுபோல்
பாவனை செய்து அவள்
கொஞ்சுவதை வியப்பேன்
குறுஞ் சிரிப்பில் மேலும்மேலும்
அவள் அழகுகளைக் கெளரவிப்பேன்

யார் யாரெல்லாம்
என்னைக் கவர்ந்தார்களோ
அத்தனை பேரையும்
அவளிடமிருந்து பெறுவேன்

என் காதல் நாட்களை நானும்
ரசிக்கத் தொடங்குவேன்

அவளுக்கு என் மீது பிரியம்
மிகுந்திருப்பதால்
அவளுக்குப் பிரியமில்லா விஷயங்களைத்
தவிர்ப்பேன்

முழுமையாக என்னை
ஒப்படைக்கத் தொடங்கிவிட்டேன்

இதன் மூலம் நான்
சொல்ல விரும்புவது
எனக்கு எழுதிய காதல் கடிதங்களை
நீங்களே அன்புகூர்ந்து
கிழித்துவிடுங்கள்... அல்லது
வேறு யாருக்காவது
கொடுத்து விடுங்கள்.

ஆக்கம் - கவிஞர் யுகபாரதி.

இந்தக் கவிதையின் ஒலிவடிவம்

பணமே பலம் !



எப்போதும் நம்முடைய சேமிப்புகளை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் பல்வேறு இடங்களில் பிரித்து வைப்பது விவேகமான முடிவு। அண்மையப் பொருளியல் நெருக்கடி பற்றித் தெரிந்ததும் பலர் அத்தகைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்। அதனால் என்ன பயன்? பல இடங்களில் முதலீடுகளைப் பிரித்து வைப்பதன் மூலம் நமக்கு ஏற்படக் கூடிய அதிக இழப்புகளைக் குறைக்கலாம்।

இவ்வாறு முதலீடுகளைப் பிரித்து வைப்பது முதலீட்டுக் கொள்கையின் பொன்னான விதியாகும்। அதாவது ஒரே இடத்தில் ஒரு பொருளையோ, வீட்டையோ, நகையையோ வாங்காமல் பல்வேறு இடங்களில், பல்வேறு தளங்களில் முதலீடுகளைப் பரப்பி வைப்பது. ஏதும் சிக்கலான சூழலில் ஒன்று விலை குறைந்தாலும் இன்னொன்று அந்த இழப்பைச் சரி செய்யும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தரும்.

அண்மைய காலங்களில் நடுத்தர மக்களிடம் பங்குச் சந்தை அதிக கவனயீர்ப்பைப் பெற்றிருக்கிறது. அதில் முதலீடு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற முடியும் என்பது அவர்களுடைய ஆர்வத்தின் அடிப்படை ஊற்று. அத்தகைய லாபத்தைப் பெறுவதற்குப் பங்குச் சந்தை பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பங்குச் சந்தை பற்றிப் பலவிதமான புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். அதை ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொண்டு பங்குச் சந்தையின் ஆழ, அகலங்களைத் தெரிந்து கொண்டு, பிறகு அங்கு அடியெடுத்து வைத்தால் நம்முடைய பணத்துக்குப் பலம். அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் 50000 ரூபாய் இருக்கிறது. அதை இரண்டு வருடத்தில் பன்மடங்காக்கி விடலாம் என்ற தப்பெண்ணத்தில் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல பங்குச் சந்தையில் கால் பதித்தால் நஷ்டம் நமக்குத் தான். இத்தகைய முடிவுக்கும் சூதாட்டத்தில் கலந்து கொள்வதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நன்மையைத் தரும். மாறாக, நண்பர்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சில நேரங்களில் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

இன்றைய சூழலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாமவர்கள் பங்குச் சந்தையின் நெளிவு, சுளிவுகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு அங்கு முதலீடு செய்பவர்கள். இந்தக் குழுவினர் நூற்றில் பத்துப் பேராகத் தான் இருப்பர். மீதமுள்ள 90 பேர் நண்பர்கள் சொன்னார்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று கேட்பார் பேச்சைக் கேட்டு முதலீடு செய்பவர்கள். சந்தையில் இழப்பு வரும் போது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான். காரணம், சந்தைச் சூழல் அறிந்தவர்கள் எப்போது வெளியேற வேண்டுமோ அப்போது கச்சிதமாக வெளியேறி விடுவார்கள். ஆனால், இரண்டாம் வகையினர் சந்தையின் போக்கு பற்றி உண்மை நிலையைத் தெரியாததால், அது பற்றி அறியாததால் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கும் முகவர்களும் இருக்கிறார்கள். அவர்களில், நம்பகமானவர்களின் ஆலோசனையோடு முதலீடு செய்வது சிறந்தது. அவர்களுடைய அனுபவமும், உள்ளுணர்வும் இலாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதில் துணை நிற்கலாம். ஆனால் யார் எப்படி என்ன செய்தாலும் நாம் அதை ஓரிரு முறை ஆராய்ந்து அது சரியானதா? அந்த முடிவை எடுக்கலாமா? நம்முடைய மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை வைத்துத்தான் இறுதி முடிவெடுப்பது உசிதம். காரணம், பிறருக்கென்று யோசிக்காமல், தனக்கென யோசிக்கும் போது நம்முடைய உள்ளுணர்வு சரியானதை நமக்குச் சொல்லாம். அதிக இழப்பு ஆரோக்கியத்துக்கு ஆகாது. எனவே, முதலீடு செய்வதற்கு முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்துச் செய்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.

Saturday, November 15, 2008

விழிமின்! எழுமின்!!



விழிமின்! எழுமின்!!

குண்டு, குழியில்லாச்
சாலைகள்।

குப்பைக் கூளமில்லா
வீதிகள்.

கொசுக்களில்லாச்
சேரிகள்.

கூவமில்லாத
சென்னை.

சுவர் கண்ட
இடமெல்லாம்
"நீர்" பாய்ச்சா
இளசுகள்.

எச்சரிக்கையோடு
எச்சில் உமிழும்
பெரிசுகள்.

விதிகளை மதிக்கும்
மக்கள்.

நேரந்தவாறா
மாநகரப் பேருந்து.

காலந்தவறாத
மின் தொடர் வண்டி.

கடமை தவறாத
காவலர்கள்.

கண்ணியம் காக்கும்
காதலர்கள்.

ஆழிப் பேரலை
அச்சமில்லா
மெரீனா.

நன்கொடையில்லாக்
கல்லூரிச் சீட்டு.

சேலை அணிந்து வரும்
கல்லூரிச் சிட்டு.

வாரிசுகளை ஓரங்கட்டும்
அரசியல்வாதி.

தகுதி பார்த்து
வாக்களிக்கும்
திருமான் பொதுஜனம்!

செய்மதி ஊடகத்தில்
செந்தமிழ் உரையாடல்!

சுந்தரத் தமிழில்
சுதந்திர வாழ்த்து!

இப்படிப் பட்டியலிட
இன்னும் பல
நல்ல விடயங்கள்!

விழிக்கும் தருணம் வரை
அழகாய்த் தான்
இருந்தது
என் பாரதம்।

Friday, November 14, 2008

துடிதுடிக்கும் இதயம்


துடிதுடிக்கும் இதயம்

நாளொன்றுக்கு
இலட்சம் முறை
துடிக்கிறதாம்
மனித இதயம்.

உன்னை
நினைக்குந்தோறும்
அதிமாகும்
துடிப்பை
அளப்பதெப்படி?

Monday, November 10, 2008

குசல நிலா


குசல நிலா


நீ

என்

அருகில் இல்லை

என்ற தைரியத்தில்

அறைக்குள் வந்து

குசலம் விசாரித்துச்

செல்கிறது

நிலா.

Sunday, November 9, 2008

இரண்டாம் பிரவுசர் போர்!

புகழ்பெற்ற தேடல் நிறுவனமான கூகிள், தேடுவதுடன் திருப்தியடையாமல், வலை மேய்வதற்கு உதவும் பிரவுசர் (உலாவி) மென்பொருள் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. க்ரோம் என்ற பெயர் கொண்ட இந்த இலவச பிரவுசர் 100 நாடுகளில் 43 மொழிகளில் அதிரடியாக வந்து இறங்கிவிட்டது.

கூகிள் இந்த மென்பொருளை அறிமுகப்படுத்திய விதமே வினோதமாக இருந்தது. அம்புலி மாமா படக் கதை மாதிரி ஒரு காமிக் புத்தகம் போட்டு க்ரோமின் பெருமைகளைப் பட்டியலிட்டார்கள். சுருக்கம்: இந்தப் புதிய பிரவுசர், புல்லட் வேகத்தில் வேலை செய்யும். பாதுகாப்பானது. மிக்- 27 விமானம் மாதிரி அடிக்கடி க்ராஷ் ஆகாது. இணையத்திலிருந்து வரும் ஆணைத் தொடர்கள், பிரவுசருக்குள் சிறைப்பட்டிருப்பதே தெரியாமல் உங்கள் கம்ப்யூட்டரிலேயே நேரடியாக ஓடுவது போல் இருக்கும்.

க்ரோம் உண்மையிலேயே பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. எடையைக் குறைக்கப் பட்டினி கிடந்த சினிமா நடிகை மாதிரி கச்சிதமாக உடலை வைத்திருக்கிறது. வேகமாகவும் ஓடுகிறது. மற்ற குண நலன்கள் எல்லாம் போகப் போகத்தான் தெரியவரும். அதற்குள்ளாக இண்டர்நெட் பண்டிதர்கள் ""ஆகா! இரண்டாம் பிரவுசர் போர் ஆரம்பித்து விட்டது'' என்று உற்சாகத்துடன் பாப்கார்ன், தண்ணீர் பாக்கெட் எடுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முன் வரிசையில் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.

அதென்ன இரண்டாம் பானிபட் போர் மாதிரி பேசுகிறார்கள் என்றால், பல காலமாகவே உலாவி மென்பொருள்கள் மார்க்கெட்டில் ரத்தக் களறியாக சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கின்றன. ஏனெனில் வலை மனை விளம்பரம் என்பது பல டாலர், பல்லாயிரம் டாலர், பல கோடி நூறாயிரம் டாலர் பிசினஸ்! இப்போதெல்லாம் பெருவாரியான கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்கள் பிரவுசரில்தான் வாழ்கிறார்கள். தகவல் தேடுவது, அஞ்சல் அனுப்புவது, சினிமா பார்ப்பது, செய்தித்தாள் படிப்பது, வரன் தேடுவது எல்லாமே அதற்குள்தான் நடக்கிறது. ஏற்கனவே வலைத் தேடல் பிசினஸ் முழுவதையும் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் கூகிள், தன் தொகுதியின் புறம்போக்கு நிலம் பூராவையும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் அரசியல்வாதி போல் அலப்பறை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலாவியையும் கூகிள் கைப்பற்றி விட்டால் அவர்களைப் பிறகு அசைத்துக் கொள்ளவே முடியாது!

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் டிம் பெர்னர்ஸ் லீ என்ற ஆங்கிலேயர் இணையத்தின் www எனப்படும் வெவ்வெவ்வேயைக் கண்டுபிடித்தார். அந்த வலை வெளியில் சுதந்திரமாக உலவுவதற்கான முதல் பிரவுசரையும் வடிவமைத்தார். ஆனால் சுமார் 1994 வரை இண்டர்நெட் என்பது ஷேவ் செய்ய நேரமில்லாத இஞ்சினீயர்களுக்கு மட்டுமே உரிய சொத்தாக இருந்தது. பிறகு சாதாரண மக்களும் அதில் புகுந்து புறப்பட்டு நெட் என்பது ஒரு நுகர்வோர் இயக்கமாகவே மாறிய பிறகு, எங்கும் பச்சை டாலர் வாசனை வீச ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் மைக்ரோசாஃப்ட் போன்ற மாபெரும் பிராணிகள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பார்த்தன. அங்கே ஏற்கனவே நெட்ஸ்கேப் என்று ஒரு நாயர் கடை சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்ததைக் கண்டன.

நெட்ஸ்கேப்தான் வெற்றிகரமான முதல் உலாவி, அதற்கு முன்னும் வயோலா, மிடாஸ், சாம்பா என்று மனம் போனபடி எழுதப்பட்ட உலாவிகள் பல இருந்தாலும் அவை அற்ப ஆயுளே வாழ்ந்தன. நெட்ஸ்கேப்பின் முக்கிய கவர்ச்சி, ஒரு வலைப் பக்கத்தை டவுன் லோடு செய்ய ஆரம்பித்த உடனேயே அது பகுதி பகுதியாகத் திரையில் தெரிய ஆரம்பிக்கும். பழைய பிரவுசர்களில் முழுப் பக்கமும் நம் கம்ப்யூட்டருக்கு வந்து சேரும் வரை சிவ சிவா என்று ருத்திராட்சத்தை உருட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும்.

இன்றைக்கு இணையத்தின் இணை பிரியாத நண்பர்களான குக்கி பிஸ்கோத்துகள், ஃப்ரேம்கள், ஜாவா ஸ்க்ரிப்ட் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்தும் நெட்ஸ்கேப் கண்டுபிடித்தவையே. நெட்ஸ்கேப் பிரபலமடைந்து மாலை நேரத்துக் கையேந்தி பவன் இட்லி போல் சூடாக விற்பனையாகியது. இதைப் பார்த்துவிட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்று ஒரு உலாவியைத் தயாரித்து விற்க ஆரம்பித்தது.

அடுத்த நாலைந்து வருடம், இண்டர்நெட்டே இரண்டு கட்சியாகப் பிரிந்து அடித்துக் கொண்டது. இரண்டு பிரவுசர்களுக்கும் சின்னச் சின்னதாக நிறைய வித்தியாசங்கள். ஒன்றில் ஒழுங்காகத் தெரியும் வலைப் பக்கம் மற்றதில் கொத்து பரோட்டாவாக வரும். வலை மனை வடிவமைக்கும் கலைஞர்கள் இரண்டுக்கும் தனித் தனியாக டிசைன் செய்து நொந்து போனார்கள். இப்படி ஆரம்பித்ததுதான் முதலாவது பிரவுசர் போர்!

விரைவிலேயே நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்டின் அடி மடியில் கை வைத்தது: ""இனி இண்டர்நெட்தான் எல்லாமே. ஜனங்கள் நெட்டிலேயே சாப்பிட்டு நெட்டிலேயே தூங்கி, குழந்தை கூடப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். எனவே உங்கள் கம்ப்யூட்டருக்கு பிரவுசர் மட்டும் இருந்தால் போதும்; விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டமே தேவையில்லை, தண்டச் செலவு'' என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த அடாவடியைக் கேட்டு பில்கேட்ஸ் சினந்தார்; கண் சிவந்தார். தற்காப்புக்கு சிறந்த வழி, எதிராளியின் வீடு புகுந்து அடிப்பதுதான் என்று முடிவு செய்தார். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை முற்றிலும் இலவச இணைப்பாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார்! விண்டோஸ் வாங்கினால் பிரவுசர் சும்மா கிடைக்கிறது என்றதும் ஜனங்கள் சாரி சாரியாக இந்தப் பக்கம் திரும்பி வர ஆரம்பித்தார்கள். மைக்ரோசாஃப்ட், மெத்தையில் இலவம் பஞ்சுக்குப் பதிலாக டாலர் நோட்டுகளைத் திணித்துக் கொண்டு தூங்கும் பிராணி. ஆனால் நெட்ஸ்கேப்பிற்கோ, பிரவுசர் விற்கிற காசுதான் ஒரே வருமானம். அங்கே அணை போட்டதும் திணறிவிட்டது.

நெட்ஸ்கேப்பின் மார்க்கெட் பங்கு வேகமாகச் சுருங்க ஆரம்பித்து, கடைசியில் உலர்ந்து வற்றியே பொய்விட்டது. போட்டியாளர்களை ஒழிப்பதற்காக மைக்ரோசாஃப்ட், தன்னுடைய விண்டோஸ் மார்க்கெட்டை வைத்துக் கொண்டு விளையாடுகிறது என்று கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் "மைக்ரோசாஃப்ட் ஒரு சர்வாதிகாரி, அதை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை' என்றெல்லாம் வீர உரைகள் ஆற்றினாலும், இறுதித் தீர்ப்பில் பில் பில் கேட்ûஸ நாளு தோப்புக்கரணம் போடச் சொல்லிவிட்டு விடுதலை செய்துவிட்டார்கள் இப்படி முடிவுக்கு வந்தது முதலாம் பிரவுசர் போர்.

ஆனால் போரில் தோற்றோடி வேற்று நாட்டில் தஞ்சமடைந்த சில வீர இளைஞர்கள், ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபத்தில் அமர்ந்து ஓசைப்படாமல் மற்றொரு பிரவுசர் எழுத ஆரம்பித்தார்கள். அகில உலகையும் ஜெயித்த மமதையில் மைக்ரோசாஃப்ட்டும் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டது; பல காலத்துக்கு எக்ஸ்ப்ளோரரில் புதிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தேக்கம் கொடுத்துவிட்டது. 2004 வரை இந்த நிலை நீடித்தது. அந்த வேளையில்தான் "தீ நரி' ( Fire Fox) என்ற புதிய பிரவுசர் திடீரென்று மார்க்கெட்டில் நுழைந்து படபடவென்று சுட ஆரம்பித்தது!

ஃபயர் ஃபாக்ஸில் பல புதிய சாகசங்கள் இருந்தன. ஒரே ஜன்னலுக்குள்ளேயே சைடு ஜன்னல்கள் திறந்து ஏக காலத்தில் பல வலைப் பக்கங்களை மேய்வது, எங்கே சுற்றி அலைந்தாலும் விட்ட இடத்துக்கு டகாலென்று திரும்பி வரும் புக் மார்க் வசதி, நாராசமான ரீமிக்ஸ் பாட்டுகளை சுலபமாக டவுன்லோடு செய்யும் வசதி, நாம் டைப் செய்யும் போதே ஸ்பெல்லிங்கை சரி பார்த்து க், த், ப் எல்லாம் சரியாகப் போடச் செய்வது என்று பல புத்திசாலித்தனமான ஐடியாக்கள்.

இவ்வளவு இருந்தும் மைக்ரோசாஃப்டை முழுவதும் மார்க்கெட்டிலிருந்து பெயர்க்க முடியவில்லை. அவர்களும் எக்ஸ்ப்ளோரரில் மேற்படி வசதிகள் பலவற்றைக் கொண்டு வந்து ஏழாவது பதிப்பாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அடுத்ததாக எட்டாவது பதிப்பும் அநேகமாகத் தயாராகி விட்டது. கூகிள் வேறு இப்போது க்ரோம் என்ற புதிய உலாவியைக் கொண்டு வந்திருப்பதால் மும்முனைப் போட்டி இருக்கும். ஜாலிதான்! ஒருவரை ஒருவர் மிஞ்சுவதாகப் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவார்கள். அடுத்த இரண்டு வருடத்தில் வலை உலாவிகள் அடையாளமே தெரியாமல் மாறப்போகின்றன.

மென்பொருள் ஏகலைவர்களின் மானசீக குருவான மார்க் ஆண்ட்ரீஸன் போன்றவர்கள், நம்மாழ்வார் அரங்கனைப் பாடியது போல் பரவசப்பட்டுப் போய் க்ரோம் உலாவியின் புகழ் பாடுகிறார்கள். கூடிய சீக்கிரம் இது விண்டோûஸயே புறமுதுகிடச் செய்யப்போகிறது என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த மாதிரி பில்லியன் டாலர் போர்களின் முடிவில் யார் மிஞ்சுவார்கள் என்பதை இப்போதே சொல்வது கடினம். எக்கச்சக்கமான பண பலம், விளம்பரம், சதி வேலைகள், குருட்டு நம்பிக்கை, ராப்பகலான உழைப்பு எல்லாம் கலந்த வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஹை டெக் லாட்டரி இது.

நன்றி : ராமன் ராஜா & தினமணிக்கதிர்.

Saturday, November 1, 2008

பெத்த மனசு




கல்யாணமான 30 வருடங்களில் ராமு சொன்ன அந்த யோசனை ராஜியை உலுக்கியெடுத்தது. அவன் அப்படிச் சொல்வான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த மாதம் தான் பேறுகாலத்துக்கு வந்த மகள் கணவன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறாள். மகனுக்குக் கல்யாணம் முடிந்து இன்னும் முழுதாக மூன்று மாதங்கள் கூட நிறையவில்லை. அதற்குள்....

ராமுவின் வார்த்தைகள் அவள் விழிகளை நனைத்து விட்டன.

நீண்ட பெருமூச்சுடன் அவளை நெருங்கிய ராமு ஒனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்பா என்றான். வெறித்தபடி பார்த்தாள் ராஜி.

நாம ஒண்ணும் அசலூருக்குப் போகலை, இதோ இங்கன இருக்குற மூணாவது வூட்டுக்குத் தான் போறோம்.

கல்யாணம் முடிஞ்ச சின்னஞ்சிறுசுக, நாம கூட இருந்தா சங்கோஜப் படுவாங்க. அதான். உனக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம்.

சொல்லி முடித்த கணவனின் முகத்தைக் கனிவோடு பார்த்தாள் ராஜி.

ஒங்க விருப்பம் தானே என்னோடதும் என்பதற்கான தன்னிறைவு அதில் இருந்தது.