Monday, November 22, 2010

துயரத்துக்கு வாக்கப்பட்ட இந்தோனேசியா

இந்தோனேசியாவுக்கு இது சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். பூமி எப்போது அதிரும்? எரிமலை எப்போது வெடிக்கும்? கணித்துச் சொல்ல முடியாதவாறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது காலம். மின்னல் தாக்கிய இடத்தில் இடி வீழ்ந்ததைப் போல் திணறி நிற்கின்றனர் மக்கள்.

சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நாடுகளில் மிகப் பெரியது இந்தோனேசியா. சுமார் 15,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது அந்நாடு. எரிமலைகளுக்கும் அங்கே பஞ்சமில்லை. அதனால் அங்கே இயற்கைப் பேரிடர்கள் அவ்வப்போது வந்து போகும். பூமி அதிரலாம். அல்லது எரிமலை வெடிக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்தே வரலாம். அந்த நாட்டு மக்களின் உயிரை உலுக்கும் கவலை இது தான்.




அக்டோபர்’ 10 இறுதியில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு என்று பதிவாகி இருந்தது அந்த அதிர்வு. அதைத் தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.




பூகோள ரீதியில் இந்தோனேசியா ஆபத்தான வளைவில் அமைந்திருக்கிறது. எனவே அழையா விருந்தினர் போல அவ்வப்போது அங்கே இயற்கை பேரிடர் வருவது வாடிக்கையாயிற்று. இதற்கு என்ன காரணம்?

புவி அமைப்பியல் படி இந்தோனேசியா அமைந்திருக்கும் பூமியின் பரப்பில் அதிகமான தட்டுக்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உராய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஐரோப்பா ஆசியாக் கண்டத்தின் தெற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்திருக்கிறது இந்தோனேசியா. தெற்குப் பகுதியில் உள்ள ஆசியக் கண்டத்தின் தகடும், மேற்குப் பக்கத்தில் இந்தியக் கண்டத்தின் தகடும் மோதுகின்றன. அதனால் விளிம்பில் இருக்கும் இந்தோனேசியாத் தீவுகள் அதிர்வுக்குள்ளாகின்றன என்கிறார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பயன்பெறும் புவி அமைப்பியல் துறையின் பேராசிரியர் Dr.R.R. கிருஷ்ணமூர்த்தி.

Arc Of Fire என்று சொல்லப்படும் “நெருப்பு வளைய”ப் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் இயற்கைப் பேரிடர்கள் (பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்பு) அடிக்கடி ஏற்படுகின்றன என்கிறார் தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகக் கட்டவியல் துறைத் தலைவர் பேராசிரியர் Dr. செந்தமிழ்க்குமார்.

2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்குப் பிறகு சில முன்னெச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அக்டோபர்’10 - ல் ஆழிப் பேரலை வந்த போது அந்த முன்னெச்சரிக்கைக் கருவிகளால் எந்தப் பயனும் இல்லை.

ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியின் அமைப்பு சூட்சுமம் நிறைந்தது. கடல் நீர் மட்டத்தின் மேலுள்ள கருவி, கடலுக்கடியில் புவியின் மேலுள்ள கருவியோடு தொடர்பு கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கடலின் தரைமட்டத்தில் எந்த அதிர்வு வந்தாலும் அது உடனே மிதவைக் கருவிக்குச் சமிக்ஞையை அனுப்பும். பிறகு, அங்கிருந்து அதிர்வின் நிலை செயற்கைக் கோளுக்கு அனுப்பப்படும். பின்னர் அது கண்காணிப்பு மையத்துக்கு வந்து சேரும்.

கடலின் மேற்பரப்பில் உள்ள மிதவைக் கருவிகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலும், மக்களுடைய கவனக்குறைவான செயல்களால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அந்நிலையில அந்தக் கருவிகள் செயலிழந்து போகும். எனவே, முன்னெச்சரிக்கைச் சமிக்ஞை வந்து சேருவதில் தடை ஏற்படலாம் என்கிறார் முனைவர்.R.R. கிருஷ்ணமூர்த்தி.




ஆசிய வட்டாரத்தின் பிற நாடுகளைப் போலல்லாமல் இந்தேனேசியா கடலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் வந்து சேருவதற்குரிய கால அவகாசம் அங்கே குறைவு.

பூகம்பத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை முன் பூகம்பம், முதன்மைப் பூகம்பம், பின் பூகம்பம் எனப்படும். முன் பூகம்பத்தை உணரும் போது தான் கடலுக்கடியில் உள்ள கருவி செயல்படத் தொடங்கும். சீஸ்மீக்ராப் எனப்படும் பூகம்பத்தை அளக்கும் கருவியாக இருந்தாலும், ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியாக இருந்தாலும் இதுவே நடைமுறை. சில தருணங்களில் முன் பூகம்பம் முன்னெச்சரிக்கையைத் தாமதமாகத் தான் வந்தடையும். அதற்குள், முதன்மைப் பூகம்பம் வந்து விடும். நில அதிர்வின் வேகம் அதிகமாக இருப்பதால் முதன்மைப் பூகம்பம் சீக்கிரமாக வந்து விடும். அதை முன்னெச்சரிக்கைக் கருவிகள் உணரும் முன்னரே ஆழிப் பேரலைகள் கரையைக் கடந்து விடும் என்கிறார் பேராசிரியர். Dr. செந்தமிழ்க்குமார்.

அக்டோபர்’10 இரண்டாம் வாரத்தில் வந்த ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியது இந்தோனேசிய அரசாங்கம். வெந்த புண்ணில் வெடியை வைத்தது போல வந்தது இன்னொரு சோதனை.




சென்ற மாத இறுதியில் ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பூமித்தட்டுடைய நகர்வை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்றையொன்று அழுத்தும் விதமான நகர்வு(Convergence). இன்னொன்று ஒன்றையொன்றை விட்டுப் பிரியும் நகர்வு (Divergence). இவற்றுள் கன்வெர்ஜன் என்பது ஒன்றையொன்று அழுத்தும் போது அதிக அழுத்தம் ஏற்படும். அப்போது பூமி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். அந்நிகழ்வு பூகம்பமாகவோ அல்லது எரிமலையாகவோ வெளியே வரும்

டைவர்ஜன் - ஒன்றை ஒன்றை விட்டு விலகுவது எப்போதாவது நடக்கும். அதன் விளைவாகப் பெரிய பெரிய பள்ளத்தாக்குகள் எல்லாம் உருவாகும்.



நவம்பர்’10 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின. இன்னும் கூட புகைந்து கொண்டே இருக்கிறது மெராப்பி. நூற்றுக்கு மேற்பட்ட எரிமலைகளின் எச்சரிக்கை நிலையைக் கண்காணிப்பு அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.

எரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

எரிமலை சீற்றத்துடன் இருக்கும் போது சல்பர் பார்டிகிள்ஸ் எனப்படும் கந்தகத் துகள்கள் வெளியாகும். அவை காற்றில் பரவி விமானத்தின் இயந்திரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சில வேளைகளில் வானில் விமானத்தின் ஓடுபாதையைத் தாண்டியும் புகை மண்டலம் ஆக்கிரமிக்கும் போது பேரிழப்புகள் ஏற்படலாம்.

வானில் ஒன்பதிலிருந்து பத்து கிலோ மீட்டர் உயரத்தில் தான் விமானத்தின் ஓடுபாதை அமைந்திருக்கிறது. ஆனால் எரிமலையால் உண்டாகும் புகை மண்டலம் 20, 30 கிலோ மீட்டர் உயரம் வரை பரவக்கூடும். அதனால் வெப்ப மாற்றம் ஏற்படும் சாத்தியமும் உண்டு.

புவி அமைப்பியல் படி எந்நேரமும் இயற்கைப் பேரிடரைச் சந்திக்கும் நாடாக இருக்கிறது இந்தோனேசியா. அதை உணர்ந்துள்ள அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகிறது. எனினும் இயற்கைப் பேரிடர்கள் எப்போதும் சொல்லி விட்டு வருவதில்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.

Sunday, November 14, 2010

நாணயப் போர்....



உலகப் பொருளியல் சந்தையில் கடும் பரபரப்பு. காரணம் - Currency War என்னும் "நாணயப் போர்". உலகின் அனைத்து நாடுகளும் தங்களுக்கென தனி நாணயத்தை நிர்ணயித்துள்ளன. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்தந்த நாடுகளின் அல்லது பொதுவான ஒரு நாணயத்தில் அந்தப் பரிவர்த்தனை அமையும்.

கடந்த பத்தாண்டுகளில் உலக நாடுகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன. ஏற்றுமதி, இறக்குமதியின் அடிப்படையில் வரும் இலாபத்தைக் கொண்டு அந்தப் பிரிவு அமைந்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன உலகின் மற்ற நாடுகளிடமிருந்து அதிகமான பொருட்களை தருவிக்கின்றன. அது அவர்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை விட அதிகம். எனவே அவை வர்த்தகப் பற்றாக்குறையுடைய நாடுகள் (Deficit Countries) என்றழைக்கப்படுகின்றன.

மறுமுனையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், பிற நாடுகளிடமிருந்து குறைந்த அளவிலேயே பொருட்களைத் தருவிக்கின்றன. எனவே அவற்றை வர்த்தக உபரியுடைய நாடுகள் (Surplus Countries) என்று சொல்லலாம்.



உதாரணமாகச் சீனா, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறது. அதன் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதியை விட அதிகமாக இருந்ததென்றால் அது வர்த்தக உபரி. அதாவது வெளியிலிருந்து அதிகப் பணம் நாட்டுக்குள் வருகிறது. அதே சமயம், ஒரு நாடு, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை வாங்குகிறது. ஆனால் அதன் சொந்தப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதியாகவில்லை என்றால் அது வர்த்தகப் பற்றாக்குறை.



அண்மையில், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சிறு தேக்கம். சீனா தனது நாணய மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சீறுகிறது அமெரிக்கா. சீனாவின் இந்தப் போக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமெரிக்க நிறுவனங்கள் திண்டாடுகின்றன. அதனால் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு என்று புலம்புகிறது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மறுக்கிறது சீனா. தன் நாணயத்தின் மதிப்பை ஏற்றினால் உள்நாட்டில் வேலையின்மை பெருகும். மக்களின் வாழ்க்கைத் தரம் வாட்டம் காணும். அதனால் நாணய மதிப்பை உயர்த்தும் போக்கை வேகமாகச் செய்ய மாட்டோம் என்று உடும்புப் பிடியாகச் சொல்கிறது சீனா.

உலகின் மற்ற பல நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். பெரும்பாலான மற்ற நாடுகளில் அப்படியல்ல.

உதாரணமாக, அமெரிக்கன் டாலர், யூரோ, ஜாப்பனீஸ் யென் இவற்றை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விழுக்காடு தொகை கொண்டு சிங்கப்பூர் டாலருக்கான மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சீன நாணயத்துக்கான மதிப்பை அங்குள்ள அரசாங்கம் தான் நிர்ணயம் செய்கிறது. மாறாக, சந்தையின் போக்கு அதை நிர்ணயிப்பதில்லை.

வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு நாணய மதிப்பைக் குறைப்பது அல்லது போட்டி போட்டுக் கொண்டு நாணயத்தின் மதிப்பைக் கூட்டாமல் இருப்பது நாணயப் போர் (Currency War) என்று சொல்லப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு பொருளியல் மந்தநிலையில் அதிகம் அடிவாங்கியது அமெரிக்கா. அந்தச் சரிவிலிருந்து அது இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்புத் தொடர்ந்து குறைந்து கொண்டே போவது அந்நாட்டைக் கடுமையான கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

நாணயப் போரால் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் சில நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டன. நாட்டின் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது. வேலை வாய்ப்புகள் குறைந்து விடக்கூடாது என்ற அச்சம் அதற்குக் காரணம்.

தாய்லந்து, பிரேசில் ஆகிய நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பு வடாமல் இருப்பதற்காகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. வர்த்தகத்தில் என்ன லாபம் வந்தாலும் அதில் 2 விழுக்காடு வரி கட்ட வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தது பிரேசில். 15 பெர்சன்ட் வித் ஹோல்டிங் அறிமுகம் செய்தது தாய்லந்து. அதாவது அங்கே முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் போது அதில் 15 விழுக்காட்டைத் தாய்லந்து அரசாங்கம் எடுத்து வைத்துக் கொள்ளும்.

உலகின் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் நிதிச் சந்தையில் மிகப் பெரும் சந்தேகச் சுழல். தொடர்ந்து அமெரிக்க நாணயத்தைக் கையிருப்பாக (Reserve Currency) வைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு வகையில் முதலீடு செய்யலாமா? என்ற யோசனையில் இருக்கிறார்கள் சில முதலீட்டாளார்கள். தனிநபர்கள் மட்டுமல்ல, சில நாடுகளுக்கும் அமெரிக்க டாலர் மீது இருந்த நம்பிக்கை சரியத் தொடங்கியிருக்கிறது. உலக அளவில் பெருமளவு வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையில் நடந்தாலும் ஒரு நம்பிக்கையின்மை தொக்கி நிற்கிறது.

எப்போதும் அமெரிக்கா டாலரிலேயே முதலீடு செய்யும் இந்தியா, ஈராண்டுகளுக்கு முன்பு தடாலடியாக ஈரோவில் முதலீடு செய்யத் தொடங்கியது. காரணம் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான வீழ்ச்சி. யூரோ அமெரிக்க டாலரை வீழ்த்தி விட்டு மேலே வந்து விடும் என்ற நம்பிக்கையும் அதற்குக் காரணம். ஆனால் இவ்வாண்டுத் தொடக்கத்தில் கீரிஸில் தகராறு வந்த போது யூரோவின் மீதான நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று.

உலக நாடுகள் அமெரிக்க டாலரைத் தங்கள் நம்பிக்கைக்குரிய நாணயமாக (Reserve Currency) வைத்துள்ளன. கணிசமான அமெரிக்க டாலரைச் சீனாவும் தன் நம்பிக்கைக்குரிய நாணயமாக வைத்திருக்கிறது. எனவே நாணயப் போர் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை அச்சுறுத்திச் சாதிக்க முடியாது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக சைனீஸ் யுவான் 21 விழுக்காடு மேலே போயிருக்கிறது. அதே நேரம், அமெரிக்காவுடைய வர்த்தகப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிப் போனதே தவிர குறையவில்லை. இன்னொன்று, அமெரிக்கா 90 நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது. அதனால் சீனாவைக் குற்றம் சொல்லிச் சாதிக்க முடியாது. அமெரிக்காவில் நடந்த அண்மையத் தேர்தலின் போது மக்களிடம் குறை சொல்ல ஓர் ஆள் தேவை. அதற்குச் சீனாவைப் பலியாடாக்கி விட்டது.

ஆசிய வட்டாரத்தில் வேகமான பொருளியல் வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடு சீனா. அதன் நாணயமான யுவானை உலக நாடுகள் (Reserve Currency) நம்பிக்கைக்குரிய நாணயமாக்கும் காலம் கனியுமா?

சீன நாணய மதிப்பு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படாமல், சந்தை சக்திகளால் தீர்மானிக்கும் ஒரு நிலை வந்தால் அது சாத்தியமாகலாம். அமெரிக்கன் டாலர், யூரோ, யுவான் ஆகியன Reserve Currency ஆகலாம். காரணம் சீனாவில் பண வீக்கம் அதிகமானால் அதை அவர்களால் தாங்க முடியாது. அதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் சீன யுவான் Reserve Currency ஆகலாம் என்பது பொருளியல் நிபுணர்களின் முன்னுரைப்பு.

உலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் அண்மையில் நடந்தது. நாணயப் போர் பற்றிய கிலியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. நாணயத்தின் மதிப்பை நாங்களாகக் குறைக்க மாட்டோம். அதைச் சந்தைச் சக்திகளே தீர்மானிக்கலாம். நடப்பு வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறையை தேசிய உற்பத்தியுடைய பங்காக வைத்துக் கொள்வோம் என்பன அந்த மாற்றங்கள். ஆனால் இவை நடைமுறைக்கு வர இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவை.

உலக நாடுகள் தங்கள் நாணய மதிப்பின் பரிவர்த்தனை விகிதத்தைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனைத்துலகப் பண நிதியம் (IMF) 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாணய மாற்று மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அதன் முக்கியக் குறிக்கோள். ஆனால் இப்போதுள்ள சூழலில் அனைத்துலகப் பண நிதியம் மட்டும் தனித்து எதையும் செய்து விட முடியாது. ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.

அனைத்துலகப் பண நிதியத்தைப் பொறுத்தவரையில் வளரும் நாடுகளுக்கு தற்போது பெரிய முக்கியத்துவம் இல்லை. அது பெரிய முட்டுக்கட்டை. அண்மையில் நடந்த G 20 மாநாட்டில் கூட இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆசிய நாடுகளுக்குக் கூடுலாக ஆறு விழுக்காடு ஓட்டிங் பவர் கொடுக்கிறதுக்காக முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படியொரு சூழல் வந்தால் நல்ல முன்னேற்றம் வர வாய்ப்புண்டு.

ஜி 20 அமைச்சர் நிலைக் கூட்டத்துக்குப் பிறகு நாணயப் போர் பற்றிய பதற்றம் ஓரளவு தணிந்து வருகிறது. ஆனால் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி ஆகியன இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு மேலும் வலுச் சேர்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

(ஹஜ்) பயணிகளின் கனிவான கவனத்திற்கு....




இவ்வாண்டு 2010 ஹஜ் பயணத்தை மேற்கொண்டவர்களின் நலன் கருதி புதிய சேவையை இந்திய அரசு மக்காவில் தொடங்கியுள்ளது.

புனிதப் பயணம் சென்றவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய அரசு, மக்காவில் முதன் முறையாக 24 மணி நேர தொலைபேசிச் சேவையைத் தொடங்கியுள்ளது.

மக்காவில் உள்ள இந்தியன் ஹஜ் மிஷனை +966 (02) 5496000 அல்லது +966 (02) 5458000 ஆகிய எண்களில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலதிகத் தகவல்களுக்கு... http://www.cgijeddah.com/Default_CGI.aspx