Monday, October 24, 2011

பயணம்.




 ஞானத் தேடலில்
எடுத்து வைக்கும்
முதல் அடி.

 பிரியமுள்ளவர்களைப்
பிரிந்து பின்
சேருவதை உணர்த்தும்
பால பாடம்.

 அன்பின்
அடர்த்தியை
அறிய வைக்கும்
ஆன்ம சோதனைக் களம்.

தொலைவு
முக்கியமல்ல.

நோக்கமே
பிரதானம்.

எங்கே போகிறோம்?
எப்போது திரும்புவோம்?
... ... ... ... ...
... ... ... ... ...
... ... ... ... ...
இப்படியான கேள்விகளிலும்


அவற்றின் பின்னே
ஒளிந்திருக்கும் விடைகளிலும்
துடித்து நிற்கிறது
உறவுகளின் உயிர்.

அறியாமை அகல
ஆன்மத் தேடலைத்
தொடங்கி வைக்கும்
ஆதிச் சுழி.

முன்னும் பின்னுமாய்
கடந்த தூரமும்
கடக்க வேண்டிய
தொலைவும்
மிச்சமிருக்கின்றன
இன்னும்…

காலக் கயிறு
சுழற்றி விட்ட
பம்பரம் போல்
சுற்றிக் கொண்டு
அலைகிறது மனது.

தொடரத் தொடரப்
பயணங்கள்...

தொலைவு கடக்கும்
துயரங்கள்.


எல்லை மீறும் பயணம்
தொல்லை சேரும் தருணம்.

கடந்து செல்லும்
காலத்தை
நினைவுப் பெட்டகத்தில்
உறைய வைக்கும்
உற்சாக அனுபவம்.

நினைவுச் சாளரம் திறந்து
நிகழ்காலத்தின்
வெளிச்ச ரேகை பரவ
உள்ளுக்குள் ஒளியேற்றும்
உன்னத உணர்வு – பயணம்.

கரை தொடும்
அலைகள்
கடலிடம் மீள்வது போல்
தினம் தினம்
தொடர்கிறது
தேடலுக்கான பயணம்.

மன அடுக்குகளின்
இடுக்குகளில்
வெளிச்சம் பாய்ச்ச
அவசியம் தேவை
பயணம்.

Friday, October 21, 2011

தனிமைக் கண(ன)ம்



அருகில்
இருந்த பொழுதுகளைக் காட்டிலும்
விலகி இருக்கும்
தருணங்களில்
அதிகம் நினைக்கப்படுகிறாய்
நீ.

கடந்து செல்லும்
நங்கையரின் நயனங்களில்
உன் தனித்துவம்
தேடித் தேடித்
தோற்றுப் போகிறேன்
நான்.

தனிமையின்
வெறுமையால்...
கடக்கும்
ஒவ்வொரு கணமும்
கனத்துப் போயிருக்கிறது
மனம்.

காற்று வெளியில்
மிதக்கும் குரல்களில்
உன் மகரந்தச்
சொற்களைத் தேடியலைகின்றன
என்
செவிப் பட்டாம்பூச்சிகள்.

வறண்ட தொண்டையை
நனைக்க வரும்
தண்ணீரின் தண்மைக்காகத்
தாகித்திருக்கிறது
என் நாவு.

தாமதிக்கும் கணங்கள்
அத்தனையும் நோவு.

விலகி இருப்பது
விவாதத்துக்கு நல்லது.
விவாகத்துக்கு அல்ல.

விரைந்து
வா தேவி!

தவறினால்…

தவிப்பில்
கரைந்து போகும்
என் ஆவி!!!


Monday, October 3, 2011

தனியே... தன்னந்தனியே... பாலஸ்தீன்...



உலக நாடுகளின் ஒட்டு மொத்தப் பார்வையும் இப்போது பாலஸ்தீன மக்கள் மீது. சுமார் அரை நூற்றாண்டாக அங்கே போர் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இப்போது சமாதானத்தின் தலைவாசல் திறக்கும் வாய்ப்பு கனிந்திருக்கிறது. உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் தன்னையும் ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது பாலஸ்தீனம். அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தனி நாடு அங்கீகாரத்துக்கான விண்ணப்பத்தை பாதுகாப்பு மன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.



நெடுங்காலமாகத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல வழிகளில் முயற்சி செய்கிறது பாலஸ்தீனம். அது இப்போது சரியான பாதையில் நகரத் தொடங்கியிருக்கிறது. வன்முறைப் போக்கிலிருந்து விலகி, அமைதியான முறையில் சரியாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது பாலஸ்தீனம். அதன் தனி நாடு கோரிக்கையை உலக நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பங்கு உலக நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு இதில் பேரானந்தம். இஸ்ரேலுக்குத் திண்டாட்டம். அதை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கோ தர்ம சங்கடம்.

பாலஸ்தீனப் பிரச்சினையை எதிர்பாராத தருணத்தில் உலக நாடுகள் மறுக்க முடியாத ஒரு புள்ளியை நோக்கித் தள்ளி இருக்கிறார் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெறுமா? அது கேள்விக்குறி. ஆனால், மஹ்மூத் அப்பாஸ் வெற்றிப் பாதையில் முதலடி எடுத்து வைத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையை வன்மையாகச் சாடுகிறது இஸ்ரேல். இம் முயற்சி அமைதிக்கான பாதையில் இடைஞ்சலை ஏற்படுத்தும் என்றும் அது வாதிடுகிறது.
உலக நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீன தனி நாட்டுக்கான கோரிக்கை விவாதிக்கப்பட வேண்டும். அப்போது தன்னுடைய வீட்டோ என்னும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தோல்வியடைச் செய்யப்போவதாக எச்சரிக்கிறது அமெரிக்கா.

இந்தப் பின்னணியில், இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையை சற்று பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலியக் குடியேற்றம் தொடங்கி விட்டதாகச் சொல்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். அப்போது பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது பாலஸ்தீனம். அங்கே பூர்வ குடிகளாக வாழ்ந்த அரபுக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அல்லது பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். பதிலுக்கு, யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அப் பகுதியில் நாளொரு சண்டை, பொழுதொரு பேச்சு வார்த்தை. இருப்பினும் அமைதி வந்தபாடில்லை.

1947 ல் உலக றநிறுவனம் பாலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. 55 விழுக்காடு நிலம் யூதர்களுக்கு, எஞ்சிய 45 விழுக்காடு பாலஸ்தீனர்களுக்கு. ஜெருசலம் நிர்வாக நகரம் என்பது ஒப்பந்தம். அதில் யூதர்களுக்குச் சம்மதம். அரபுக் குழுக்களுக்கு அதிருப்தி.

மீண்டும் இரு தரப்பிலும் மூண்டது போர். பிரிட்டனின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வரும் முன்னர் 1948 மே 14 ல் இஸ்ரேல் என்பது தனி நாடு என்று அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லைப் பகுதியில் நித்தம் நித்தம் யுத்தச் சத்தம். அன்றாடம் குண்டு வெடிப்பு, கைகலப்பு, ஆள் கடத்தல், ஆயுதப் போராட்டம்.... இவை ஏதும் இல்லாத நாள் அப்பகுதி மக்களின் வாழ்வில் திருநாள். இது தான் இப்போதுள்ள உண்மை நிலை.



பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தர அங்கே பல இயக்கங்கள் முளைத்தன. பின்னர் அவை பல சிறு சிறு குழுக்களாகக் கிளைத்தன. முன்னாள் அதிபர் யாசர் அரஃபாத் தலைமையிலான ஃபத்தாஹ், தற்போது பாலஸ்தீன வட்டாரத்தை ஆளும் ஹமாஸ் ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கங்கள்.



இவற்றுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டது இஸ்ரேல்.

யார் அமெரிக்க அதிபராக வந்தாலும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று முழங்குவார்கள். அவ்வப்போது சில பேச்சு வார்த்தைகளையும் நடத்துவர். ஆனால், அவர்கள் பதவியிலிருந்து விலகும் வரை உருப்படியாக எதுவும் நடந்திருக்காது. அதற்கு வரலாறு சாட்சி.

இத்தகைய சூழலில், பல்வேறு தடைகள், மிரட்டல்களுக்கு இடையில் தனி நாடு அங்கீகாரக் கோரிக்கையை உலக நிறுவனத்திடம் முன்வைத்திருக்கிறது பாலஸ்தீனத் தரப்பு. அதில் வெற்றி பெறும் சாத்தியம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. பாலஸ்தீனத் தரப்பின் கோரிக்கை மீது உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம். என் பல மாதங்கள் கூட ஆகலாம். அதன் பிறகே இந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரிய வரும்.

தனி நாடு அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் உலக நிறுவனத்தின் உறுப்பினரல்லாத நாடு என்ற அந்தஸ்தைப் பாலஸ்தீனத் தரப்பு பெறலாம். அது சாத்தியமானால் உலக நிறுவனத்தின் விவாதங்களில் பங்கெடுக்கும் உரிமையும் கிடைக்கலாம். பாலஸ்தீனம் என்னும் தனி நாடு உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...