Showing posts with label நினைவாஞ்சலி. Show all posts
Showing posts with label நினைவாஞ்சலி. Show all posts

Saturday, March 24, 2012

வானொலிக் குயில் "ராஜேஸ்வரி சண்முகம்"


http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html



சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படியொரு பேரதிர்வு


மூத்த ஒலிபரப்பாளர், கிரிக்கெட் வருணனையாளர்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின்

மடல் வழியே மனம் தாக்குமென்று.


மின்மடல் 'Subject' கண்டதும், ராஜேஸ்வரி அம்மா பற்றிய

கலையுலகப் பகிர்வு என்று தான் நினைத்தேன்.

ஆனால், அதனினும் கடினமாக இருந்தன

உள்ளே பொதிந்திருந்த வார்த்தைகள்.


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையில்

அந்தக் குயிலின் குரலைக் கேட்டுக் கேட்டு

அலாதி ஆனந்தம் கொண்ட தலைமுறையில் அடியேனும் ஒருவன்.

என்னை விட அந்தக் குயிலிசையில்

கட்டுண்டு கிடந்தவர்கள் என் அம்மாவும், அக்காவும்.


மாண்புக்குரிய B.H அவர்களும், ராஜேஸ்வரி அம்மாவும்

இணைந்து படைத்த நிகழ்ச்சிகளுக்குத்

தனி ரசிகர் வட்டம் எப்போதும் உண்டு.

அந்த வட்டத்துக்குள் நெருக்கியடித்தபடி நானும் அடக்கம்.



எப்படியும் ஒருமுறையாவது அவரைச் சந்தித்து

விட வேண்டும் என்ற ஆவல்.

கரை மீறிய அலையாய்....எப்போதும் நெஞ்சில்....


2001 - 2002  ஆம் ஆண்டுகளில் www.worldtamilnews.com

சிந்தாதிரிப்பேட்டை அலுவலகத்துக்கு "அம்மா" வந்தார்கள்.

பரவச அனுபவத்தோடு பார்க்க மட்டுமே முடிந்தது.

பேச வாய் எழவில்லை சிறிது நேரம்.

முறையான அறிமுகப்படலம் முடிந்த பிறகு

இயல்பாக அருகே வந்து வாஞ்சையோடு

வாழ்த்துச் சொல்லி ஆசிர்வதித்தார்கள்.

இன்றும் பசுமையாய் அந்நினைவு

நெஞ்சில் நிலாவெளிச்சம் தருகிறது.


பிரசாந்த் நடித்த "மஜ்னு" திரைப்படத்தின்

பாடல் ஒலிநாடா வெளிவந்த வேளை அது.

ராஜேஸ்வரி அம்மா. மூத்த ஒலிபரப்பாளர் அப்துல் ஜப்பாருடன்,

நானும் இணைந்து அறிமுக நிகழ்ச்சி படைத்தது

என் ஒலிபரப்புப் பயணத்தில் மறக்க முடியாத மைல் கல்.


அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவரை

மீண்டும் காணும் பாக்கியம் வாய்க்கவில்லை.

இறைவன் இம்மண்ணில் அவருக்கு விதித்திருந்த

காலக்கெடு நிறைந்திருக்கலாம்.

அவர் விட்டுச் சென்ற எண்ணச் சுவடுகள்

காற்றுள்ள வரை வான வீதியில் வீசிக்கொண்டே இருக்கும்....

நல்லெண்ணம் விதைக்கும் தென்றலாய்......



எல்லாருக்கும் பொதுவான இறைவன் அவரையும்,

அவருடைய பணிகளையும் பொருந்திக் கொள்ளட்டும்.


Saturday, April 24, 2010

"தேனீ" உமருக்கு அங்கீகாரம் கிடைக்குமா?



உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. உலகம் முழுக்கவிருந்து தமிழ் அறிஞர்களும், தமிழை நேசிப்பவர்களும் அணி திரண்டு வரப் போகிறார்கள் அந்த மாநாட்டுக்கு. சில நல்ல விஷயங்களை முன்னரே அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவது நன்மையளிக்கும் என்பதால் இந்தப் பதிவு.

ஓலைச் சுவடிகளில் உறைறந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக உருமாறி புத்தகமாகி, இன்று விரல் நுனியில் வித்தை காட்டும் கணினியில் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையைத் தமிழில் தட்டச்சியது நானாக இருக்கலாம். அதற்கு வழியமைத்தவர்கள் எத்தனை பேரோ?


இணையத்திலும், இதயத்திலும் தமிழுக்கென்று தனி ஆசனம் தந்து காத்து வருபவர்கள் நம் போற்றுதலுக்குரியவர்கள். கணினி உலகில் விரிந்து, பரந்து விருட்சமாய் வியாபித்து நிற்கும் அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த தகைமையுடையோர்களில் ஒருவர் “யுனிகோட் உமர் தம்பி”.

தாம் மறைந்தாலும் தம் தாய் மொழி இவ்வுலகில் ஜீவிக்க வேண்டும் என்ற உமர் தம்பியின் தீரா வேட்கை இன்று நம் கண் முன் கணினித் தமிழாய் காட்சி தருகிறது. அதுவே அவருடைய வெற்றிக்கு சாட்சி.

யார் இந்த உமர்? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? அவருக்கும், எனக்கும் முன், பின் அறிமுகம் உண்டா? இப்படியான கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். உண்மையைச் சொன்னால் உமர் தம்பி உயிர் நீத்த அந்தக் கணம் (2006 ஜுலை 12) வரை அவருடைய முகவரியின் முதல் வரி கூட எனக்குத் தெரியாது.

2003 ன் இறுதியில் அலுவல் நிமித்தம் ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்தேன். அங்கே சில நண்பர்கள் தமிழில் தட்டச்சி இணையக் கடலில் நீந்திக் களிப்பதைக் கண்ட போது சிலிர்த்துப் போனேன். ஆகா! இப்படி ஒரு தருணத்துக்காகத் தானே இத்தனை நாள் ஏங்கிக் கிடந்தேன். நண்பர்களிடம் கேட்டுத் தமிழில் தட்டச்சுவது எப்படி? என்று மட்டும் தெரிந்து கொண்டேன். 2004 ன் தொடக்கத்தில் இந்தியா வந்து அடுத்த ஈராண்டுகள் அங்கு தங்கியிருந்து பணியாற்றிய சில வேளைகளில் அது எனக்குக் கை கொடுத்தது. இருந்த போதிலும் அப்போது இணையத்தில் அதிகமாகத் தமிழில் தட்டச்சும் வாய்ப்புகளை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழல்.

காலம் 2006 ஆகக் கனிந்தது. பணி நிமித்தம் நான் இடம் பெயர்ந்தது சிங்கப்பூருக்கு. அலுவல் முடிந்த பிறகு எனக்குப் பேராதரவாய் நின்றது இணையப் பெருங்கடல். என்னதான் ஆங்கிலத்தில் உரையாடினாலும், அதையே அன்னைத் தமிழில் தொடரும் போது அலாதி ஆனந்தம். எதிர் கொள்பவர்களை எளிதில் இறுக அணைத்து வாஞ்சையோடு வாரிக் கொள்ளும் சுகானுபவம் தமிழ் வழிப் பரிமாறலில் கிட்டும். அப்படித் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் ஒருநாள், உமர் தம்பியின் மரணச் செய்தி காதுகளில் முட்டியது. யார் இவர்? ஏன் இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்? என்ற கேள்விகள் மனதில் உருக் கொண்டு, கருக்கொள்ள விரல்கள் தானாகவே தேடத் தொடங்கின உமர் தம்பியின் நதி மூலத்தை.

இணையத்தில் இன்று நான் தமிழில் தட்டச்சுவதற்கு அவரும் ஒரு விதையாகத் தன்னைத் தந்திருக்கிறார் என்று அறிய வந்த போது மனம் முழுக்க மகிழ்ச்சிப் பந்தல். அதே சமயம் அத்தனை எளிய, பெரிய, ஞானம் நிறைந்த நல்ல மனிதரோடு பரிச்சயமில்லாமல் போய் விட்டோமே என்ற விம்மல் இதயத்தில் எழுந்து எழுந்து அடங்கியது.

நான் இளங்கலை, முதுகலை பயின்ற தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. பிறந்தது 1953 ஜுன் 15. இப்பூவுலகை விட்டு நீங்கியது 2006 ஜுலை 12 ஆம் நாள். நான் பயின்ற அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியில் அவரும் இளங்கலை விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். எனவே கல்லூரி அவர் என் முன்னோடி. நானறியாமலேயே எங்களுக்குள் இருக்கும் ஒரே தொடர்பு இது மட்டும் தான்.

இளங்கலை மட்டுமல்ல, இலக்ட்ரானிக்ஸ் (Electronics) என்னும் மின்னணுவியலில் பட்டயப் (Diploma) டிப்ளோமா படிப்பையும் முடித்தவர். 1983 ஆம் ஆண்டில் தமது சொந்த ஊரிலேயே வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்தார் உமர்.

கல்வி பயிலும் காலத்திலேயே 1977 ஏப்ரல் மாதம் அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் பெளஸியா (Fouzia). இத்தம்பதியருக்கு மூன்று மகன்கள்.

மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர் உமர். அந்தத் தேடலின் நீட்சியாக, ஒருமுறை தாம் பயின்ற அதிராமபட்டினம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி ஊரிலிருப்போர் கேட்கும் விதத்தில் உரையாடல்களை ஒலிபரப்பினார்.

1984 ல் துபாயில் உள்ள Alfuttaim Group of Companies ல் மின்னணு சாதனனங்களை பழுது நீக்கும் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.

உமர், முறையாக எந்தக் கல்லூரியிலும் கணினித் தொழில் நுட்பத்தை பயிலவில்லை. துபையில் பணிசெய்த போது தமது ஓய்வுக் காலத்தைக் கணினி குறித்த தாகத்தையும், தேடலையும் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார். படிப்படியாக கணினித் தொழில்நுட்பத்தில் தேர்ந்தார். Network administrator, SAP implementation team Head, Kiosk programmer என்று பல்வேறு துறைகளில் தடம் பதிக்க அவருக்கு அந்த ஞானம் போதுமானதாக இருந்தது. பதினேழு ஆண்டுகள் துபையில் பணி செய்த உமர், 2001 செப்டம்பரில் விருப்ப ஓய்வு பெற்றுத் தாயகம் திரும்பினார்.

அத்துடன் நின்று விடவில்லை அவருடைய அறிவுத் தேடல். ஊரிலிருந்து கொண்டே தமது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்துப் பராமரித்து வந்தார்.

இப்படிப் பல்வேறு வேலைகளைத் திறம்படச் செய்து கொண்டிருந்த வேளையில் கணினியில் கன்னித் தமிழுக்கு அணி செய்யும் பணியையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உமருக்குள் எழுந்தது. அந்தப் பணியில் தாம் ஈடுபட்டது மட்டுமல்ல. நாளைய தலைமுறையும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தம் போன்று ஒரே கருத்துடையவர்களையும் திரட்டி அவர்களுக்குரிய ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

எடுத்துக்காட்டுக்குச் சில...

தேனீ இயங்கு எழுத்துரு

உமர் தம்பி ஒருங்குறித் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான தேனி இயங்கு எழுத்துருவை அறிமுகம் செய்தார்.

ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களை சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன.WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது.மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும்.

தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றி பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழ் இணைய அகராதி

கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்தார். அதன்பொருட்டு தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார். அதன் உருவாக்கத்தில் உமருக்குத் தமிழ் உலக உறுப்பினரும், talktamil.4t.com இணையத் தள நிர்வாகியான மஞ்சுவும் தோள் கொடுத்தார்.

தமிழ் மணம், தமிழ் உலகம் குழுமம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும், கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.

உதாரணத்துக்குச் சில...
• AWC Phonetic Unicode Writer
• தமிழுக்காக Online RSS creator - can be used in offline as well
• எண்களாகத் தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
• தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
• எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
• ஒருங்குறி மாற்றி
• க்னூ பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்
• தேனீ ஒருங்குறி எழுத்துரு
• வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
• வைகை இயங்கு எழுத்துரு
• தமிழ் மின்னஞ்சல்
• தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
• Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
• தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.

இணையத்தில் தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பலவகையான தமிழ்நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயனாளர்கள் அறிவர்.

உமர் தம்பி, அவருடைய செயல்பாடுகள் பற்றி இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில...

www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17

http://www.pudhucherry.com/pages/umar.html

http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803

http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://www.pudhucherry.com/

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e

வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html

நிரலிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip

http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip

http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip

இணையத் தமிழுக்கு உமர் தம்பி ஆற்றிய பங்களிப்புப் பட்டியல் இன்னும் நீளமானது. எல்லாவற்றையும் இங்கே தொகுத்துக் கொடுப்பது சாத்தியமல்ல. காலம் உமர் தம்பிக்கு வழங்கிய தவணை 2006 ஜுலை 12 ல் முடிந்திருக்கலாம். அறிவியாலால், தாம் கொண்ட அறிவால் அவர் வளர்த்து விட்ட நல்ல மனிதர்கள் இன்றளவும் இணையத்திலும், இதயத்திலும் தமிழைக் கொண்டு வந்து சேர்க்க அயராது பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

செம்மொழி மாநாட்டில் கணினித் தமிழுக்கு அணி சேர்க்கும் விதத்தில் சில நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. அதில் உமர் தம்பியின் இணையத் தமிழ்ப் பங்களிப்புக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இணைய மாநாட்ட ஒருங்கிணைத்து நடத்தும் “உத்தமம்” அமைப்பு உமர் தம்பியின் பங்களிப்புகளைப் பற்றி அரசாங்கத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். அவருடய கணினித் தமிழ்ப் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதைச் செய்வதன் மூலம் பெருமையடைப் போவது உமர் தம்பியல்ல. அன்னைத் தமிழ் தான்.

தாய்மொழிக்கு ஒரு பெருமை வரும் என்றால் அதைத் தயங்காமல் செய்யும் தமிழக அரசு. இணையத் தமிழ்ப் பயனாளர்களின் இந்தக் கோரிக்கைக்கும் செவி சாய்க்குமா?.....

நிச்சயம் சாய்க்கும் என்பது நம்பிக்கை.

Saturday, September 5, 2009

திரு.ராஜ சேகர ரெட்டி நினைவாஞ்சலி.




முதலில் நம்புவதற்குச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் காணவில்லை. நக்சல்கள் கடத்தியிருக்கலாம் என்று ஊகங்களை வெளியிட்டன ஊடகங்கள். அப்போதிருந்தே என் மனம் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. ஓர் ஆளுமை மிகுந்த தோற்றம். எவரையும் எளிதில் வசீகரித்து விடும் இயல்பான தன்மை. எப்போதும் சிரிக்கும் அதரங்கள். அவற்றுக்குப் பொட்டிட்டாற் போன்று கருணையுள்ள கண்கள். எடுத்த கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பது பற்றிய விசாலமான தொலைநோக்குப் பார்வை. இப்படித் தான் அவர் அறிமுகமானார் எனக்கு.

2006 ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகர் சபை ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவருடன் சில அமைச்சர்களும். ஒரு கலந்துரையாடலுக்குப் பிறகு அவருடனான நேர்காணல். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீண்டது அந்தப் பேட்டி. ஆனால் அந்த இனிமையான பொழுதை நினைக்க நினைக்க இன்றும், என்றும் நெஞ்சினிக்கும்.

வழக்கமாக இந்திய அரசியல் தலைவர்கள் காட்டும் மனோபாவம் திரு.ஒய் எஸ் ஆரிடத்தில் இல்லை. கருத்தரங்கு மண்டபத்திலேயே நேர்காணல். அதற்கென பிரத்யேக அறை எதுவும் இல்லை. எங்களைச் சுற்றிலும் நின்ற தொழில் முனைவர்கள் தங்களுக்குள் ஏதோதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் நேர்காணல் மிகச் சரியாகக், கச்சிதமாக அமைந்தது. வந்த பதில்களும் பிசிறில்லாத அக்மார்க் சுருக்.

வினாக்களை வசீகரமான புன்னகையோடு உள் வாங்கிக் கொண்டு, ஆந்திராவில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை அவர் பட்டியலிட்டார். கையில் எந்தப் புள்ளி விவரமும் இல்லை. சிங்கப்பூரில் இருந்து தொழில் செய்ய நாடுபவர்கள் எந்நேரமும் என் அலுவலகத்தின் கதவுகளைத் தட்டலாம். அவர்களுக்காக வந்து வாசல் திறப்பது நானாகக் கூட இருக்கலாம் என்றார்.

அது நிதர்சனமான சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட நித்திய வார்த்தைகள். பிறகு, ஆந்திராவில் முதலீடு செய்த சில சிங்கப்பூர்த் தொழில் முனைவர்களிடம் பேசிக் கொண்ட போது அவர்கள் ஒய் எஸ் ஆரின் கருத்தை மெய்ப்பித்தார்கள்.

இன்று அந்தத் திருவாளரின் அகால மரணம் ஆந்திர மாநில அரசியலில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மெய்யான உண்மை. மருத்துவம் படித்த திரு.ஒய் எஸ் ஆரின் வாழ்க்கைப் பாதை மலர் விரிப்பில் வளர்ந்த நந்தவனம் அல்ல. முட்களும், புயல்களும் நிறைந்த போர்ககளமாகவே இருந்தது. 1978 ல் தமது 29 ஆம் வயதில் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் துணையமைச்சர். இது வெறும் தொடக்கம் தான். இவர் தான் ஒய் எஸ் ஆர் என்று அண்ணாந்து பார்க்க வைத்த அவருடைய சாதனைகள் சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தளிர்விடத் தொடங்கின.

ஆந்திர அரசியலில் யாரும் அசைக்க முடியாத வல்லமை தமக்குண்டு என்ற திரு.சந்திரபாபு நாயுடுவின் ஆசைக்கு ஆப்படித்தது திரு.ஒய் எஸ் ஆரின் பாதயாத்திரை. 2003 ல் அவர் மேற்கொண்ட அந்தப் பயணம் தெலுங்கு தேச ஆட்சிக்கு வைத்தது மிகப் பெரிய வேட்டு. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவர் சுற்றிச் சுழன்று கடந்த தூரம் 1400 கி.மீ.

அதைத் தொடர்ந்து 2004 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திரு.ஒய் எஸ் ஆர் ஆட்சிக்கு வருகிறார். அதிலிருந்து அவர் தன் ஆளுமையைக் கூட்டி எடுத்த விஸ்வரூபம் இந்திய அரசியலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. காங்கிரஸ் தலைமையை அவரிடமே திடப்படுத்தி வைத்தது.

தொடர்ந்து எந்த காங்கிரஸ் முதல்வரும் ஐந்தாண்டு பதவியைப் பூர்த்தி செய்ய முடியாது என்ற ஆந்திர அரசியல் சரித்திரத்தை மாற்றிக் காட்டிய பெருமை திரு.ஒய் எஸ் ஆருக்கு உண்டு. காலஞ்சென்ற நீலம் சஞ்சீவ ரெட்டி, காசா பிரமானந்த ரெட்டி ஆகியோருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணை ஏறிய பெருமையும் ராஜசேகர ரெட்டிக்கு உண்டு.

இது வெறுமனே அரசியல் சாதுர்யத்தால் விளைந்த வெற்றியல்ல. மக்களின் ஆதரவும், அவர்களின் அன்பும் கட்டியெழுப்பிய வாக்கு வங்கி, வாங்கித் தந்த வெற்றி என்பதை ஒய் எஸ் ஆரின் எதிரிகள் கூட சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்.

திரு. ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டால் இரண்டு விஷயங்களைத் தவிர்க்க இயலாது.

1.அவர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது போல இலவசத் திட்டங்கள் இதுவரை ஆந்திர அரசியல் பாராத புதுக் கணக்கு. அவற்றால் அரசின் நிதி ஊதாரித்தனமாகச் செலவிடப்படவில்லை என்பது நிதர்சனம். இலவசம் பெற்ற ஏழைகள் தங்கள் வாழ்வில் எற்றம் தந்த நாயகராக அவரைப் போற்றுகிறார்கள் என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கலாம். ஏழை, எளியவர்ள், விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி, மின்சாரம் போன்றவற்றை வழங்கி அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தார்.

2. ஆந்திராவில் பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அதில் அரசுக்குக் கிடைத்த வருமானம் சுமார் 1500 கோடி ரூபாய். இதைவிட அதிகமான தொகையை முதல்வரும் அவர் சார்ந்த கட்சித் தலைவர்களும் அடித்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

திரு.ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் ஏற்படுத்தி இருக்கும் அதிர்வலை இந்திய அரசியலுக்குப் புதுசு. செய்தி கேட்ட சுமார் 80 பேர் அதிர்ச்சியில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தானாகவே மாய்த்திருக்கிறார்கள். வாழ்ந்த வரை நல்லவராக வாழ்ந்தார் என்பதற்கு உதாரணமாக இந்த இழப்புகள் சுட்டிக் காட்டப்படலாம்.

இவையெல்லாவற்றையும் தாண்டி திரு.ராஜசேகர ரெட்டியின் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் அவர் போன்ற நல்ல தலைவர்கள் இன்னும் அதிகமானவர்களை உருவாக்குவதன் மூலமே ஆந்திர அரசியல் அல்ல, இந்திய அரசியல் சுபிட்சம் பெறும் என்ற உண்மையும் அதில் அடங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

Wednesday, February 14, 2007

இரு (ம)ரணங்கள் :( :( :(

இரு மரணங்கள்அண்மையில் என்னை உலுக்கியெடுத்த மரணங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். அதில் தொடர்புடைய இருவருடனும் எனக்கு நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ எந்தத் தொடர்பும் இல்லை. நண்பர்கள் வழியாகவும், இணையத்தில் மூலமாகவும் என் இதயத்துக்குள் வந்தவர்கள் அவர்கள்.

முதலில் தேனீ ஒருங்குறி வடிவமைத்த உமர் தம்பி காக்கா....

1953 ஜுன் 15 ல் இம் மண்ணில் பிறந்து, 2006 ஜுலை 12 வரை வாழ்ந்து மறைந்தவர். சொந்த ஊர் அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டம். அங்குள்ள காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். பல்வேறு பணிகளைத் திறம்படச் செய்து இறுதியில், இணையத்தில் தமிழை இடம் பெறச் செய்வதற்கு மனப்பூர்வமாகத் தொண்டாற்றியுள்ளார். அவர் பற்றிய முழுமையான தகவல்களுக்கு....

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%...AE%AA%E0%AE%BF

அடுத்து சாகரன் என்ற கல்யாண்....

1975, ஜுலை 22 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரியில் பிறந்தவர். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சவூதி அரபியாவில் பணியாற்றினார். இணையத்தில் தமிழைப் பரப்புவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்ட பெருமகனார். சென்ற 2007 பிப்ரவரி 11 அன்று காலமானார். அவர் பற்றிய தகவல்களுக்கு....

http://www.muthamilmantram.com/showthread.php?t=18585http://www.muthamilmantram.com/showthread.php?t=18596http://icarusprakash.wordpress.com/2007/02/11/shockinghttp://pithatralgal.blogspot.com/2007/02/192.htmlhttp://valai.blogspirit.com/archive/...11/kalyan.htmlhttp://blog.thamizmanam.com/archives/84http://thulasidhalam.blogspot.com/20...g-post_12.htmlhttp://muthamilmantram.blogspot.com/...blog-post.htmlhttp://theyn.blogspot.com/2007/02/blog-post_8610.htmlhttp://balabharathi.blogspot.com/200...g-post_12.htmlhttp://masivakumar.blogspot.com/2007...g-post_12.htmlhttp://wethepeopleindia.blogspot.com...post_8206.htmlhttp://poonspakkangkal.blogspot.com/...g-post_12.htmlhttp://techtamil.blogspot.com/2007/02/blog-post.htmlhttp://vicky.in/dhandora/?p=305http://surveysan.blogspot.com/2007/0...post_4044.htmlhttp://muthukumaran1980.blogspot.com...g-post_12.htmlhttp://kuzhali.blogspot.com/2007/02/blog-post_12.htmlhttp://paransothi.blogspot.com/2007/...g-post_12.html

பிப்ரவரி 11 திங்கள் காலை அலுவலகம் புறப்பட்டு பேருந்துக்காகக் காத்திருந்த வேளை முத்தமிழ் மன்றத்தின் சுதாகர் அண்ணா அலைபேசியில் அழைத்து விவரம் சொன்னார். செய்தி கேட்டதுமே மாளாத் துயரம் இதயத்தில் மண்டியது. யாரோ முகம் தெரியாத சாகரனுக்காக ஏன் என் மனம் இப்படி அடித்துக் கொள்கிறது? விளங்கவில்லை. அன்பர் உமர் தம்பியின் மரணச் செய்தி கேட்ட கணமும் என் மனநிலை அப்படித்தான் இருந்தது.

அவர்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது. இணையத்தமிழ் எங்களை இணைத்து வைத்திருக்கிறது. அது தான் இணையத்தின் சக்தி. நெருக்கமானவர்களோடு நம் தாய்மொழியில் கருத்துப் பரிமாற அவர்களும் துணை நின்றிருக்கிறார்கள் என்ற ஆதாயம் ஒன்றைத் தவிர அவர்களுக்கும் எனக்கும் உறவொன்றுமில்லை.உமர் தம்பியின் மறைவு ஏற்படுத்திய காயமே இன்னும் மறையாத நிலையில், சாகரனின் இழப்பு தமிழ் இணைய ஆர்வலர்கள் மத்தியில் மாறாத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது.

மிக இளம் வயதில் ஏற்பட்டுள்ள அந்த இருவரின் மரணங்களும் பல கேள்விகளை முன் வைக்கிறது. இணையத்தில் தமிழ் பரப்ப ஆர்வம் கொண்ட அனைவரும் தங்கள் அலுவலக நேரம் போக மீதமுள்ள ஓய்வு நேரத்தில் தான் கணிணியில் காலம் கழிக்கின்றனர். அது அவர்களுடைய மனதில் கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதோ என்ற எண்ணத்தைப் புறந்தள்ள முடியவில்லை.

இணைய வெளியில் உலவும் போது, முகம் தெரியாத நிலையில், சம சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு படிப்படியாய் தங்கள் எண்ணப் பரிமாற்றங்களால் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் வகையில் கைகோர்க்கிறார்கள். பணிச்சூழல் காரணமாக உறவுகள், நண்பர்கள் யாவரையும் விட்டு வெகுதூரம் அயல் தேசத்தில் விலகி நின்றாலும், இணையம் தான் முகமறியாத புது உறவுகளைத் தருகின்றது. அதன் விளைவு தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை எடுக்காமல் வழக்கம்போலவே உரையாடுவதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

ரியாதில் சாகரன் உறுப்பினராக உள்ள மன்றம்(தஃபர்ரக்) தான் நமது அன்பு அறிவிப்பாளர். திரு.பி.ஹெச். அப்துல் ஹமீது. திரு.அப்துல் ஜப்பார் ஆகியோரை சவூதி அரபியாவுக்கு அழைத்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் நடித்த ஆக்ராவின் கண்ணீர் என்ற ஒலிநாடகம் ரியாதில் அரங்கேறியது. அதில் பங்கேற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் திரு.அப்துல் ஜப்பார் சாகரன் பற்றிய தன் நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

நாடகத்தில் என்னுடைய உணர்ச்சிகரமான நடிப்பை அனைவரும் ரசித்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் என்னிடம் வந்து பேசிய சாகரன், அய்யா, உங்கள் வயதுக்கு நீங்கள் இவ்வளவு உணர்ச்சிப் பெருக்கு காட்டக்கூடாது. அது நடிப்பாக இருந்தாலும் சரி. உங்கள் உடல்நலனிலும் அக்கறை செலுத்துங்கள் என்றார். பாவம், சாகரன் தன் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள மறந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று சொன்னார் திரு.அப்துல் ஜப்பார்.

யாரைச் சந்தித்தாலும் தங்களைப் பற்றிய அழுத்தமான தடங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் சாகரனும், உமர்தம்பியும். அதற்கு அவர்களைப் பற்றிய இணையப் பதிவுகளே சாட்சி. அவர்கள் மறைந்தாலும் இணையக் கடலில் அவர்கள் விட்டுச் சென்ற அலை நம் இதயக் கரைகளை என்றென்றும் தொட்டுச் செல்லும்.......