Thursday, December 29, 2011

உலக உலா 2011 - 1



பயங்கரத் துயரம், வடியாத சோகம், மக்களாட்சிக்கான புரட்சி, அரசியல் மாற்றம் என்று கலவையான சுவடுகளை விட்டுச் செல்கிறது 2011. ஜப்பானின் நிலநடுக்கமும், ஆழிப் பேரலையும் மனித வாழ்வை பெரும் கேள்விக்குள்ளாக்கின. ஆழிப் பேரலையால் தாக்கப்பட்ட FUKUSHIMA அணுஉலையிலிருந்து வெளியான கதிரியக்கம் உலக நாடுகளின் அணுக் கொள்கைகளை மறுபரிசிலனைக்கு உட்படுத்தச் செய்தது. துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம் எண்ணற்ற உயிர்களைக் காவு வாங்கியது. பாகிஸ்தானிலும் தென் கிழக்காசியாவிலும் ஏற்பட்ட வெள்ளம் வர்த்தகத்தை முடக்கிப் போட்டது.



வடகிழக்கு ஜப்பானில் நிலம் கொஞ்சம் நெட்டி முறித்தது. அதிர்வின் அளவு 8.9 ரிக்டர். கூடவே சேர்ந்து வந்தது மிரட்டலைத் தந்த ஆழிப் பேரலை. ஜப்பானின் பசிபிக் கரையோரம் பத்து மீட்டர் உயரத்துக்குச் சீறிப் பாய்ந்தன பேரலைகள். வலைக்குள் சிக்கிய மீன்களை கரையிழுக்கும் மீனவர்கள் போல, நிலத்தில் இருந்த வீடுகள், பயிர்கள், வாகனங்கள் என வழியில் கண்ட அத்தனையையும் வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றது கோரப் பேரலை. பலியான உயிர்களின் எண்ணிக்கை 15000 க்கும் அதிகம். பலரின் சடலங்கள் கூட கிட்டவில்லை.



நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீ மூண்டது. வடக்கு சென்டாய் நகரில் ஒரு பெரிய நீர்முகப்புப் பகுதியும் தீக்கு இலக்கானது. தலைநகர் தோக்கியோவையும் விட்டு வைக்கவில்லை நிலநடுக்கம். வீடுகள், அலுவலகங்கள், உயர்மாடிக் கட்டடங்கள், நாடாளுமன்றம் என்று எல்லா இடங்களும் அதிர்ந்தன. அங்கிருந்து சுமார் 240 கிலோமீட்டர் வடக்கே இருக்கும் Fukushima அணுஉலையையும் கபளீகரம் செய்தது ஊழித் தாண்டவம் ஆடிய ஆழிப் பேரலை.

அணுஉலைக்குக் கடுமையான சேதம். அவ்வட்டாரத்தில் இருந்த பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கதிரியக்கக் கசிவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. ஜப்பான் அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டது.



பாதிக்கப்பட்ட அணுஉலைகளை கோரத் தாண்டவம் ஆடிய கடல் நீரைக் கொண்டே சாந்தப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போவது போல் தோன்றியது. Ukraine னின் chrenobyl அணுஉலையை மூடியது போல fukushima அணுஉலையையும் மூடி விடலாமா என்று கூட யோசித்தது ஜப்பான். ஆனால் அயராத முயற்சி அணுக்கசிவையும் அடக்கும் என்பதை நிரூபித்தது ஜப்பான். நாளடைவில் அணுகசிவின் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தண்ணீரில் வீசிய கல் உண்டாக்கும் வட்டம் போல, Fukushima அணுஉலைகளின் தாக்கம் உலக அளவில் அச்ச அலையைத் தோற்றுவித்தது. உலக நாடுகள் அணுஉலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பல நாடுகளில் போராட்டம் நடந்தன. இந்தியாவின் கூடங்குளத்தில் அது இன்னும் தொடர்கிறது. இது கதிரியக்கத்தால் வந்த பயமல்ல. மக்களின் கண்ணீரில் விளைந்த அச்சம்.



துருக்கியின் கிழக்குப் பகுதியில் உள்ள வான் நகரில் பூமி கொஞ்சம் புரண்டு படுத்தது. சோம்பல் முறித்த வேளையின் வீரியம் 7.2 ரிக்டர். விளைவு, கடுமையான நிலநடுக்கம். குர்து இன மக்கள் அதிகம் வாழும் அப்பகுதியில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன. ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். மூன்று மணி நேரத்துக்குள் 8 முறை துள்ளி விளையாடியது நிலம்.



இவ்வாண்டு பாகிஸ்தானுக்கு சோதனை காலம். வெள்ளி தோறும் அங்கே தீபாவளி தான். தலையில் துண்டு போண்டுத் தொழுகைக்குச் செல்வோரையும் தீவிரவாதிகளின் குண்டுகள் விட்டு வைப்பதில்லை. வாரந்தோறும் ஆரவாரமாய் ஒலித்து ஒலித்து ஓய்கிறது அப்பாவிகளின் அடங்கா ஓலம். எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.



இந்நிலையில், தெற்கு பாகிஸ்தானில் பெய்த கனத்த மழை, வெள்ளைப் பெருக்கை அழைத்து வந்தது. 4 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். பல உயிர்கள் தண்ணீரில் சடலமாகின. சிந்து மாநிலத்தில் வழக்கத்தைவிட 142 விழுக்காடு அதிகம் பொழிந்தது வானம். வெள்ளப்பெருக்கு காரணமாக 21 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.



வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உலக நாடுகளும், தன்னார்வ அமைப்புகளும் உதவ முன் வந்தன. எனினும் வர்த்தகத்தில் ஏற்பட்ட பின்னடைவு சரியாக இன்னும் அவகாசம் தேவை என்பதே இப்போதைய நிலை.



பாகிஸ்தானைத் தொடர்ந்து, தாய்லந்திலும் நூற்றாண்டு காணா வெள்ளம். பாய்ந்து வந்த நீர் குடித்து ஏப்பம் விட்ட உயிர்களின் எண்ணிக்கை 300 க்கும் அதிகம். பல்லாயிரம் பேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். தாய்லாந்தின் வட, மத்தியப் பகுதிகளைச் சுற்றிச் சூழ்ந்தது வெள்ளம். தண்ணீர் படிப்படியாக அதிகரித்துத் தலைநகர் பேங்காக்கைத் தொட்டது. அங்குள்ள ஒரு விமான நிலையத்திலும் புகுந்தது வெள்ளம். தடுப்பு முயற்சிகள் பெரிய பலனைத் தரவில்லை. தலைநகர் பேங்காக் தண்ணீரில் மிதந்தது. தென் கிழக்கு ஆசியாவில் வேகமாக நவீனமடைந்து வரும் பேங்காக் அந்த இக்கட்டான நிலையைக் கையாளத் திணறியது.



மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியது தாய்லந்து அரசாங்கம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தாய்லந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற Yingluck Shinawatra விரைந்து செயல்பட்டார். இயற்கையும் கை கொடுத்ததால் தப்பிப் பிழைத்தது தாய்லந்து.



நோபெல் அமைதிப் பரிசு வழங்கும் நாடு நார்வே. இவ்வாண்டு அதன் அமைதிக்கு வேட்டு. காரணம், ஜூலை 22 ல் நாள் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு, அதைத் தொடர்ந்து Utoyo தீவில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம். இவையிரண்டும் ஐரோப்பாவை மட்டுமல்ல உலகையே ஓர் உலுக்கு உலுக்கியது. தலைநகர் ஆஸ்லோவில் அரசாங்க அலுவலகங்களைக் குறிவைத்துக் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதற்கடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ அருகில் உள்ள Utoyo தீவில் காத்திருந்தது மற்றுமோர் அதிர்ச்சி. அங்கே ஆளும் தொழிற் கட்சியின் இளையர் அணியினரின் கூட்டம் நடந்தது. அங்கே வந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.



Utoya தீவைச் சுற்றி உள்ள நீர்ப் பகுதியில் காவல் துறையினர் மாண்டவர்களைத் தேடினர். துப்பாக்கிச் சூடு நடந்த போது நீரில் குதித்த 300 க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினரும், அருகில் வசித்தவர்களும் காப்பாற்றினர்.



துப்பாக்கிச் சூட்டை நடத்திய நார்வேயைச் சேர்ந்த Anders Breivik பின்னர் சரணடைந்தார். 'இந்தத் தாக்குதல் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால் அவசியமானது!' என்று பிரெவிக் கூறியிருந்தார். அசம்பாவிதச் சம்பவத்துக்கு முன்னதாகவே 1500 பக்கங்களுக்கு அதிமான நீண்ட, விரிவான சுய விளக்க அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதில் கொலைச் சதித்திட்டம் பற்றி விரிவாக விளக்கியிருந்தார். பின்னர் நார்வே காவல்துறை அவரைக் கைது செய்தது.



தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகையே மாற்றி அமைத்தன ஆப்பிள் மின்னணுச் சாதனங்கள். அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் இவ்வாண்டு இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 56. நீண்ட காலம் கணையப் புற்றுநோயால் அவதிப்பட்ட அவருக்கு நான்கு முறை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியத் தயாரிப்புகளான I Pod, I Phone, I Pad ஆகிய சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனையில் முகிழ்த்தவை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் அனைத்திற்கும் அவருடைய தலைமைத்துவம் அவசியமாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் பொறுப்பேற்ற பிறகுதான் ஆப்பிள் நிறுவனம் இசை சார்ந்த மின்னணுப் பொருள் தயாரிப்புகளின் பக்கம் தன் பார்வையைக் குவித்தது. சிக்கலான தொழில்நுட்பத்தை பாமரனும் பயன்படுத்த வழி செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதன் விளைவாக நிறுவனத்தின் புகழை உலகறியச் செய்த பெருமை அவரைச் சாரும். மிகக் குறுகிய காலத்தில் பலரது கவனத்தை ஈர்த்த ஸ்டீவ் ஜாப்ஸின் அகால மரணம் மின்னணு, தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உலா தொடரும்...:)

Saturday, December 24, 2011

முழு “நீல”ப்படம்



•நாயகனை
ஓரக் கண்ணால்
பார்ப்பதே பேரழகு
தாத்தா காலத்தில்....

•நாயகனும் நாயகியும்
தொட்டுத் தொட்டுப்
பேசுவதே பேராச்சர்யம்
அப்பா காலத்தில்...

•தளுக்குறதுக்கும்
குலுக்குறதுக்கும்
தனித் தனி நாயகி
இது தமையன் காலம்....

•படம் முழுக்கப்
அந்தப் பொறுப்பையே
நாயகி
பாந்தமாச் செய்யுறா
என் காலத்தில்...

•படங்கள் யாவும்
நீளம் என்பது
திரிந்து
எல்லாமே
“நீலமாகி விடுமோ?”
வருங்காலத்தில்.... :(

Wednesday, December 7, 2011

இட ஒதுக்கீடு



“நீரே தாகம் தணிக்கும்” என்கிறான் ஒருவன்.

“இல்லை பானியே தணிக்கும்” என்கிறான் மற்றொருவன்.

“இல்லையில்லை; Water தான் தணிக்கும்” என்கிறான் இன்னொருவன்.

மூவரும் அடித்துக் கொண்டு சாகிறார்கள், தாகம் தணியாமலே.

இது தான் மதவாதிகளின் கதை.

பொருள் ஒன்று தான்;

பெயர் தான் வேறு வேறு
என்பதைப் புரிந்து கொள்ளாத

அறியாமையே சண்டைக்குக் காரணம்.

இறைவனை அறியாதவனே
இறைவன் பெயரால் சண்டையிடுகிறான்.

சண்டையிடுகிறவன்
உண்மையான மதவாதியல்லன்.

அவன் வெறும் ‘மதம்’ பிடித்தவன்.

வலையில் தண்ணீர் அகப்படாது.

மதம் பிடித்தவனிடம் மகேசன் அகப்படமாட்டான்.

பறக்கும் போது சப்தமிடும் வண்டு,

பூவில் அமர்ந்து தேனருந்தும் போது

மெளனமாகி விடுகிறது.

இறைவனை அடையாதவனே சர்ச்சைகள் செய்கிறான்.

அடைந்தவன் மௌனமாகி விடுகிறான்.

எல்லாப் பூவிலும் தேன் இருக்கிறது என்பதை

அறிந்த தேனீ மலர்களுக்குள் பேதம் பாராட்டுவதில்லை.

ஒருவன் மந்திரை இடித்து விட்டு மஸ்ஜித் கட்டுகிறான்.

மற்றொருவன் மஸ்ஜிதை இடித்து விட்டு மந்திர் கட்டுகிறான்.

இதயமே இறைவனின் மெய்யான ஆலயம்.

போலி மதவாதிகள் மெய்யாலயத்தை இடித்து விட்டுப்

பொய்யாலயத்தைக் கட்டுகிறார்கள்.

கடவுள் பக்தன் கடப்பாரை ஏந்த மாட்டான்.

பூக்கள் தொடுக்கும் நாரையே ஏந்துவான்.

இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதை அறிந்தவன்

அவனுக்கு இட ஒதுக்கீடு செய்வானா?

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதைப்

பார்க்கத் தெரிந்தவன் பிற உயிர்களைப் பகைப்பானா?

கவிஞர் பர்ஃக் எப்பொழுதோ எழுதிய கவிதை இது :

நீ

மறைந்திருப்பதால் தான்

மஸ்ஜித் மந்திர் சண்டைகள்.

நீ மட்டும்

வெளிப்பட்டு விட்டால்

எல்லாமே

நீயென்றாகி விடும்.


நன்றி : மகரந்தச் சிறகு - கவிக்கோ அப்துல் ரகுமான்

Friday, December 2, 2011

இணையில்லா இறைவா!



இணையில்லா
இறைவா!

அன்புக்கு
நீயே ஆதாரம்.

அசதியின்
அவசரத்தில்
அதை மறந்தால்
வாழ்வே சேதாரம்.

கருணைக்கு
நீயே மூலாதாரம்.

அந்த
நம்பிக்கையே
இகபர வாழ்வின்
ஜீவாதாரம்.

மண்ணில்
மன்பதைகளை
மாண்புறக் காப்பவனே!

இமைப் பொழுதும்
எனை
என் பொறுப்பில்
சாட்டி விடாதே!

கார்மேகக்
கருணையாளனே!


அசத்தியம் முறித்து
சத்தியம் வெல்ல
நீயே
கணை.

உன்
கனி விழிப்
பார்வையின்
கண்ணியில்
என்னையும்
பிணை.

உன் வழி
வாழும்
நல்லடியார் குழுவில்
என்னையும்
இணை.

இகமதில்
அகமதில்
முஹம்மதின்
துணையோடு
கதிபெற
இப்போதும்
முப்போதும்
எப்போதும்
நீயே
துணை.

Monday, October 24, 2011

பயணம்.




 ஞானத் தேடலில்
எடுத்து வைக்கும்
முதல் அடி.

 பிரியமுள்ளவர்களைப்
பிரிந்து பின்
சேருவதை உணர்த்தும்
பால பாடம்.

 அன்பின்
அடர்த்தியை
அறிய வைக்கும்
ஆன்ம சோதனைக் களம்.

தொலைவு
முக்கியமல்ல.

நோக்கமே
பிரதானம்.

எங்கே போகிறோம்?
எப்போது திரும்புவோம்?
... ... ... ... ...
... ... ... ... ...
... ... ... ... ...
இப்படியான கேள்விகளிலும்


அவற்றின் பின்னே
ஒளிந்திருக்கும் விடைகளிலும்
துடித்து நிற்கிறது
உறவுகளின் உயிர்.

அறியாமை அகல
ஆன்மத் தேடலைத்
தொடங்கி வைக்கும்
ஆதிச் சுழி.

முன்னும் பின்னுமாய்
கடந்த தூரமும்
கடக்க வேண்டிய
தொலைவும்
மிச்சமிருக்கின்றன
இன்னும்…

காலக் கயிறு
சுழற்றி விட்ட
பம்பரம் போல்
சுற்றிக் கொண்டு
அலைகிறது மனது.

தொடரத் தொடரப்
பயணங்கள்...

தொலைவு கடக்கும்
துயரங்கள்.


எல்லை மீறும் பயணம்
தொல்லை சேரும் தருணம்.

கடந்து செல்லும்
காலத்தை
நினைவுப் பெட்டகத்தில்
உறைய வைக்கும்
உற்சாக அனுபவம்.

நினைவுச் சாளரம் திறந்து
நிகழ்காலத்தின்
வெளிச்ச ரேகை பரவ
உள்ளுக்குள் ஒளியேற்றும்
உன்னத உணர்வு – பயணம்.

கரை தொடும்
அலைகள்
கடலிடம் மீள்வது போல்
தினம் தினம்
தொடர்கிறது
தேடலுக்கான பயணம்.

மன அடுக்குகளின்
இடுக்குகளில்
வெளிச்சம் பாய்ச்ச
அவசியம் தேவை
பயணம்.

Friday, October 21, 2011

தனிமைக் கண(ன)ம்



அருகில்
இருந்த பொழுதுகளைக் காட்டிலும்
விலகி இருக்கும்
தருணங்களில்
அதிகம் நினைக்கப்படுகிறாய்
நீ.

கடந்து செல்லும்
நங்கையரின் நயனங்களில்
உன் தனித்துவம்
தேடித் தேடித்
தோற்றுப் போகிறேன்
நான்.

தனிமையின்
வெறுமையால்...
கடக்கும்
ஒவ்வொரு கணமும்
கனத்துப் போயிருக்கிறது
மனம்.

காற்று வெளியில்
மிதக்கும் குரல்களில்
உன் மகரந்தச்
சொற்களைத் தேடியலைகின்றன
என்
செவிப் பட்டாம்பூச்சிகள்.

வறண்ட தொண்டையை
நனைக்க வரும்
தண்ணீரின் தண்மைக்காகத்
தாகித்திருக்கிறது
என் நாவு.

தாமதிக்கும் கணங்கள்
அத்தனையும் நோவு.

விலகி இருப்பது
விவாதத்துக்கு நல்லது.
விவாகத்துக்கு அல்ல.

விரைந்து
வா தேவி!

தவறினால்…

தவிப்பில்
கரைந்து போகும்
என் ஆவி!!!


Monday, October 3, 2011

தனியே... தன்னந்தனியே... பாலஸ்தீன்...



உலக நாடுகளின் ஒட்டு மொத்தப் பார்வையும் இப்போது பாலஸ்தீன மக்கள் மீது. சுமார் அரை நூற்றாண்டாக அங்கே போர் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இப்போது சமாதானத்தின் தலைவாசல் திறக்கும் வாய்ப்பு கனிந்திருக்கிறது. உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் தன்னையும் ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது பாலஸ்தீனம். அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தனி நாடு அங்கீகாரத்துக்கான விண்ணப்பத்தை பாதுகாப்பு மன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.



நெடுங்காலமாகத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல வழிகளில் முயற்சி செய்கிறது பாலஸ்தீனம். அது இப்போது சரியான பாதையில் நகரத் தொடங்கியிருக்கிறது. வன்முறைப் போக்கிலிருந்து விலகி, அமைதியான முறையில் சரியாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது பாலஸ்தீனம். அதன் தனி நாடு கோரிக்கையை உலக நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பங்கு உலக நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு இதில் பேரானந்தம். இஸ்ரேலுக்குத் திண்டாட்டம். அதை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கோ தர்ம சங்கடம்.

பாலஸ்தீனப் பிரச்சினையை எதிர்பாராத தருணத்தில் உலக நாடுகள் மறுக்க முடியாத ஒரு புள்ளியை நோக்கித் தள்ளி இருக்கிறார் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெறுமா? அது கேள்விக்குறி. ஆனால், மஹ்மூத் அப்பாஸ் வெற்றிப் பாதையில் முதலடி எடுத்து வைத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையை வன்மையாகச் சாடுகிறது இஸ்ரேல். இம் முயற்சி அமைதிக்கான பாதையில் இடைஞ்சலை ஏற்படுத்தும் என்றும் அது வாதிடுகிறது.
உலக நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீன தனி நாட்டுக்கான கோரிக்கை விவாதிக்கப்பட வேண்டும். அப்போது தன்னுடைய வீட்டோ என்னும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தோல்வியடைச் செய்யப்போவதாக எச்சரிக்கிறது அமெரிக்கா.

இந்தப் பின்னணியில், இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையை சற்று பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலியக் குடியேற்றம் தொடங்கி விட்டதாகச் சொல்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். அப்போது பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது பாலஸ்தீனம். அங்கே பூர்வ குடிகளாக வாழ்ந்த அரபுக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அல்லது பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். பதிலுக்கு, யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அப் பகுதியில் நாளொரு சண்டை, பொழுதொரு பேச்சு வார்த்தை. இருப்பினும் அமைதி வந்தபாடில்லை.

1947 ல் உலக றநிறுவனம் பாலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. 55 விழுக்காடு நிலம் யூதர்களுக்கு, எஞ்சிய 45 விழுக்காடு பாலஸ்தீனர்களுக்கு. ஜெருசலம் நிர்வாக நகரம் என்பது ஒப்பந்தம். அதில் யூதர்களுக்குச் சம்மதம். அரபுக் குழுக்களுக்கு அதிருப்தி.

மீண்டும் இரு தரப்பிலும் மூண்டது போர். பிரிட்டனின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வரும் முன்னர் 1948 மே 14 ல் இஸ்ரேல் என்பது தனி நாடு என்று அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லைப் பகுதியில் நித்தம் நித்தம் யுத்தச் சத்தம். அன்றாடம் குண்டு வெடிப்பு, கைகலப்பு, ஆள் கடத்தல், ஆயுதப் போராட்டம்.... இவை ஏதும் இல்லாத நாள் அப்பகுதி மக்களின் வாழ்வில் திருநாள். இது தான் இப்போதுள்ள உண்மை நிலை.



பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தர அங்கே பல இயக்கங்கள் முளைத்தன. பின்னர் அவை பல சிறு சிறு குழுக்களாகக் கிளைத்தன. முன்னாள் அதிபர் யாசர் அரஃபாத் தலைமையிலான ஃபத்தாஹ், தற்போது பாலஸ்தீன வட்டாரத்தை ஆளும் ஹமாஸ் ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கங்கள்.



இவற்றுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டது இஸ்ரேல்.

யார் அமெரிக்க அதிபராக வந்தாலும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று முழங்குவார்கள். அவ்வப்போது சில பேச்சு வார்த்தைகளையும் நடத்துவர். ஆனால், அவர்கள் பதவியிலிருந்து விலகும் வரை உருப்படியாக எதுவும் நடந்திருக்காது. அதற்கு வரலாறு சாட்சி.

இத்தகைய சூழலில், பல்வேறு தடைகள், மிரட்டல்களுக்கு இடையில் தனி நாடு அங்கீகாரக் கோரிக்கையை உலக நிறுவனத்திடம் முன்வைத்திருக்கிறது பாலஸ்தீனத் தரப்பு. அதில் வெற்றி பெறும் சாத்தியம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. பாலஸ்தீனத் தரப்பின் கோரிக்கை மீது உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம். என் பல மாதங்கள் கூட ஆகலாம். அதன் பிறகே இந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரிய வரும்.

தனி நாடு அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் உலக நிறுவனத்தின் உறுப்பினரல்லாத நாடு என்ற அந்தஸ்தைப் பாலஸ்தீனத் தரப்பு பெறலாம். அது சாத்தியமானால் உலக நிறுவனத்தின் விவாதங்களில் பங்கெடுக்கும் உரிமையும் கிடைக்கலாம். பாலஸ்தீனம் என்னும் தனி நாடு உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...