Saturday, September 5, 2009

திரு.ராஜ சேகர ரெட்டி நினைவாஞ்சலி.




முதலில் நம்புவதற்குச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் காணவில்லை. நக்சல்கள் கடத்தியிருக்கலாம் என்று ஊகங்களை வெளியிட்டன ஊடகங்கள். அப்போதிருந்தே என் மனம் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. ஓர் ஆளுமை மிகுந்த தோற்றம். எவரையும் எளிதில் வசீகரித்து விடும் இயல்பான தன்மை. எப்போதும் சிரிக்கும் அதரங்கள். அவற்றுக்குப் பொட்டிட்டாற் போன்று கருணையுள்ள கண்கள். எடுத்த கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பது பற்றிய விசாலமான தொலைநோக்குப் பார்வை. இப்படித் தான் அவர் அறிமுகமானார் எனக்கு.

2006 ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகர் சபை ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவருடன் சில அமைச்சர்களும். ஒரு கலந்துரையாடலுக்குப் பிறகு அவருடனான நேர்காணல். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீண்டது அந்தப் பேட்டி. ஆனால் அந்த இனிமையான பொழுதை நினைக்க நினைக்க இன்றும், என்றும் நெஞ்சினிக்கும்.

வழக்கமாக இந்திய அரசியல் தலைவர்கள் காட்டும் மனோபாவம் திரு.ஒய் எஸ் ஆரிடத்தில் இல்லை. கருத்தரங்கு மண்டபத்திலேயே நேர்காணல். அதற்கென பிரத்யேக அறை எதுவும் இல்லை. எங்களைச் சுற்றிலும் நின்ற தொழில் முனைவர்கள் தங்களுக்குள் ஏதோதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் நேர்காணல் மிகச் சரியாகக், கச்சிதமாக அமைந்தது. வந்த பதில்களும் பிசிறில்லாத அக்மார்க் சுருக்.

வினாக்களை வசீகரமான புன்னகையோடு உள் வாங்கிக் கொண்டு, ஆந்திராவில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை அவர் பட்டியலிட்டார். கையில் எந்தப் புள்ளி விவரமும் இல்லை. சிங்கப்பூரில் இருந்து தொழில் செய்ய நாடுபவர்கள் எந்நேரமும் என் அலுவலகத்தின் கதவுகளைத் தட்டலாம். அவர்களுக்காக வந்து வாசல் திறப்பது நானாகக் கூட இருக்கலாம் என்றார்.

அது நிதர்சனமான சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட நித்திய வார்த்தைகள். பிறகு, ஆந்திராவில் முதலீடு செய்த சில சிங்கப்பூர்த் தொழில் முனைவர்களிடம் பேசிக் கொண்ட போது அவர்கள் ஒய் எஸ் ஆரின் கருத்தை மெய்ப்பித்தார்கள்.

இன்று அந்தத் திருவாளரின் அகால மரணம் ஆந்திர மாநில அரசியலில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மெய்யான உண்மை. மருத்துவம் படித்த திரு.ஒய் எஸ் ஆரின் வாழ்க்கைப் பாதை மலர் விரிப்பில் வளர்ந்த நந்தவனம் அல்ல. முட்களும், புயல்களும் நிறைந்த போர்ககளமாகவே இருந்தது. 1978 ல் தமது 29 ஆம் வயதில் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் துணையமைச்சர். இது வெறும் தொடக்கம் தான். இவர் தான் ஒய் எஸ் ஆர் என்று அண்ணாந்து பார்க்க வைத்த அவருடைய சாதனைகள் சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தளிர்விடத் தொடங்கின.

ஆந்திர அரசியலில் யாரும் அசைக்க முடியாத வல்லமை தமக்குண்டு என்ற திரு.சந்திரபாபு நாயுடுவின் ஆசைக்கு ஆப்படித்தது திரு.ஒய் எஸ் ஆரின் பாதயாத்திரை. 2003 ல் அவர் மேற்கொண்ட அந்தப் பயணம் தெலுங்கு தேச ஆட்சிக்கு வைத்தது மிகப் பெரிய வேட்டு. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவர் சுற்றிச் சுழன்று கடந்த தூரம் 1400 கி.மீ.

அதைத் தொடர்ந்து 2004 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திரு.ஒய் எஸ் ஆர் ஆட்சிக்கு வருகிறார். அதிலிருந்து அவர் தன் ஆளுமையைக் கூட்டி எடுத்த விஸ்வரூபம் இந்திய அரசியலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. காங்கிரஸ் தலைமையை அவரிடமே திடப்படுத்தி வைத்தது.

தொடர்ந்து எந்த காங்கிரஸ் முதல்வரும் ஐந்தாண்டு பதவியைப் பூர்த்தி செய்ய முடியாது என்ற ஆந்திர அரசியல் சரித்திரத்தை மாற்றிக் காட்டிய பெருமை திரு.ஒய் எஸ் ஆருக்கு உண்டு. காலஞ்சென்ற நீலம் சஞ்சீவ ரெட்டி, காசா பிரமானந்த ரெட்டி ஆகியோருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணை ஏறிய பெருமையும் ராஜசேகர ரெட்டிக்கு உண்டு.

இது வெறுமனே அரசியல் சாதுர்யத்தால் விளைந்த வெற்றியல்ல. மக்களின் ஆதரவும், அவர்களின் அன்பும் கட்டியெழுப்பிய வாக்கு வங்கி, வாங்கித் தந்த வெற்றி என்பதை ஒய் எஸ் ஆரின் எதிரிகள் கூட சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்.

திரு. ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டால் இரண்டு விஷயங்களைத் தவிர்க்க இயலாது.

1.அவர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது போல இலவசத் திட்டங்கள் இதுவரை ஆந்திர அரசியல் பாராத புதுக் கணக்கு. அவற்றால் அரசின் நிதி ஊதாரித்தனமாகச் செலவிடப்படவில்லை என்பது நிதர்சனம். இலவசம் பெற்ற ஏழைகள் தங்கள் வாழ்வில் எற்றம் தந்த நாயகராக அவரைப் போற்றுகிறார்கள் என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கலாம். ஏழை, எளியவர்ள், விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி, மின்சாரம் போன்றவற்றை வழங்கி அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தார்.

2. ஆந்திராவில் பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அதில் அரசுக்குக் கிடைத்த வருமானம் சுமார் 1500 கோடி ரூபாய். இதைவிட அதிகமான தொகையை முதல்வரும் அவர் சார்ந்த கட்சித் தலைவர்களும் அடித்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

திரு.ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் ஏற்படுத்தி இருக்கும் அதிர்வலை இந்திய அரசியலுக்குப் புதுசு. செய்தி கேட்ட சுமார் 80 பேர் அதிர்ச்சியில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தானாகவே மாய்த்திருக்கிறார்கள். வாழ்ந்த வரை நல்லவராக வாழ்ந்தார் என்பதற்கு உதாரணமாக இந்த இழப்புகள் சுட்டிக் காட்டப்படலாம்.

இவையெல்லாவற்றையும் தாண்டி திரு.ராஜசேகர ரெட்டியின் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் அவர் போன்ற நல்ல தலைவர்கள் இன்னும் அதிகமானவர்களை உருவாக்குவதன் மூலமே ஆந்திர அரசியல் அல்ல, இந்திய அரசியல் சுபிட்சம் பெறும் என்ற உண்மையும் அதில் அடங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

Friday, March 20, 2009

கவிதையே தெரியுமா?

படிமம், குறியீடு என இரண்டு வார்த்தைகள் உண்டு. நான் புதுக்கவிதையில் குறியீடு பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். படிமம் என்பது அரூபத்தை நுண்பொருளை அதாவது கண்ணுக்கு தெரியாததை காட்டுவது. குறியீடு என்பது கேமரா போல கண்ணுக்கு தெரிவதை மனதிற்கு புரிவதைப் போலச் சொல்வது.

இந்த குறியீடு என்பது 20-ம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய புரட்சியில் தான் கண்டுபிடித்தார்கள். இலக்கியத்தில் இது முக்கியமான கண்டுபிடிப்பு. விஞ்ஞானத்தில் வானொலி, தொலைக்காட்சி போல.
என்னை புதுக்கவிதை எழுதுபவன் என்கிறார்கள். நான் இளங்கலை வகுப்பு படிக்கும் போது மரபு வெறியன். என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சர்ரியலிசம் என்ற வார்த்தையைச் சொன்னார். ரியலிசம் தெரியும், கம்யூனிசம் தெரியும், அதென்ன சர்ரியலிசம்? என்று கேட்டேன். அது 1954ம் ஆண்டு. புதுக்கவிதை வராத காலம். புதுக்கவிதை தகாத காலம்.

“ரியலிசம் என்பது நாம் பழகுவது. இந்தச் சமூகம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பது. ஒருவரைப் பார்த்தால் வணக்கம் சொல்வது போல. சர்ரியலிசம் என்பது மனது என்ன நினைக்கிறதோ அது. உதடு வணக்கம் சொன்னாலும், மனதிற்குள் இவன் ஏன் வந்தான்?னு நினைப்பது.”

ரியலிசம்மாக எழுதுவது எழுத்தல்ல. உள்மனதில் இருப்பதை எழுதுவதுதான் எழுத்து. உண்மையைச் சொன்னா அடிப்பானேன்னு பயந்தா நீ படைப்பாளியா இருக்கவே முடியாது.

முள்ன்னா குத்தும். அதுதான் அதனுடைய இயல்பு. அதற்காக முள்ளைத் திட்டக் கூடாது. ரோஜாவுக்கு என்ன மதிப்போ,அதே மதிப்புதான் முள்ளுக்கும். அது செடிக்குப் பூவுக்குப் பாதுகாப்பு. தேனீக்கு ஏன் கொடுக்கு? நீ போய் எடுப்பேன்ங்கறதாலதான். அது ஒரு பாதுகாப்பு.

புதுக்கவிதை புரியாதது என்ற குற்றச்சாட்டே புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. யாருக்குப் புரியலை என்பதே முக்கியம். திருமூலர் எல்லாருக்கு புரியுதா? தேசிக விநாயகம் பிள்ளை புரியலைன்னு அவருடன் சண்டைக்குப் போக முடியுமா?புரிந்த இடத்தில் படித்து விட்டு புரியாத இடத்தில் ஒரு வணக்கம் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். நமக்குப் புரிஞ்சாதான் படிப்போம்னா நாம எப்ப வளர்றது? நம்ம கூடவே 60 வருசம் இருக்கற மனைவியைப் புரிஞ்சுக்கிட்டோமா?
வாழ்க்கைன்னா என்னவென்று புரிந்துகொண்டிருக்கிறோமா? அது என்னன்னெ தெரியாமதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிறைய பேரிடம் கேட்டுப்பாருங்க. வாழ்ரக்கைன்னா என்ன? பதில் சொல்லத் தெரியாது. அது தெரியாமலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. ‘வாழ்க்கை என்பது என்னைப் பொறுத்தவரை. . . வாழ்க்கை என்பது என்னவென்று புரிந்து கொள்ளத் தரப்படுகிற ஒரு வாய்ப்பு.’
இலக்கணமில்லாதது புதுக்கவிதை என்பது தவறான பார்வை. மரபுக்கவிதை, புதுக்கவிதை என்கிற சொற்களே எனக்குப் பிடிக்காதது. கவிதை. . . அவ்வளவுதான்!

2000 வருசத்துக்கு முன்னால எழுதின கவிதை மாதிரித்தான் எழுதுவேன்னு பிடிவாதம் பிடிச்சா எக்ஸிபிஷன்ல போய்தான் உக்காந்துக்கணும். காலத்துக்குத் தகுந்த மாதிரி எழுதினாதான் படிப்பான். அப்பதான் நிக்கும். காலம் மாறிருச்சு. அதையே நாமளும் எழுத முடியாது. ஆங்கிலத்தில் ஒரு ஷேக்ஸ்பியர்தான். தமிழில் ஒரு கம்பன்தான். பாரதியைப் பிடிக்கும் என்பதால் பாரதிதாசன் பாரதி போலவேயா எழுதினார்? மாற்றம் ஏற்படணும். மாறாதது கல்லு. மாறுறவன்தான் மனுசன்.
நான் வெண்பா எழுதுறன்னே ஒருத்தன் உக்காந்தான்னா.அவன்தான் வெண்பாவுக்கு முதல் எதிரி. சிலேடையெல்லாம் வித்தை. கலையல்ல. கம்பியிலே ஏன் சைக்கிள் ஓட்டறே? ரோட்ல ஓட்டிட்டுப் போ! வார்த்தை விளையாட்டும் கம்பியில் சைக்கிள் ஓட்டுவதைப் போலதான். கவிதையல்ல.
ஒரு நேர்காணலில் என்னிடம் கேட்டார்கள். மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ன வித்தியாசம்? நான் சொன்னேன். மரபுக் கவிதை பெரிய வீடு. புதுக்கவிதை சின்ன வீடு. சின்ன வீட்டின்மேல் கொஞ்சம் ஈர்ப்பு அதிகமாகத்தான் இருக்கும்.

மரபுக் கவிதையில் யாப்பை வைத்து ஏமாற்ற முடியும். புதுக்கவிதையில் ஏமாற்ற முடியாது. கருத்தை நேரடியாக சொல்லியாக வேண்டும். நாம ஒண்ணு நெனைப்போம். ஆனா எழுதும்போது யாப்பு வராது. யாப்பு சரியா இருந்தா நம்ம மனசுல இருந்தது வந்திருக்காது. மனசுல இருக்கறத எழுதணும். அழகியலுக்காக யாப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கவிதை என்றால் கண்ணுக்குக் காட்டுவதுதான். அப்ஸ்ட்ராக்டிவ்வாகச் சொல்லக் கூடாது. உடல்நலம் என்பதை சொன்னால் புரியாது. ஒரு பயில்வான் படத்தைக் காட்டுவது எளிதாகப் புரிய வைக்கும். ஒரு பெண் பார்க்கிறாள். உடனே இதயம் வலிக்கிறது. இதை எப்படிச் சொல்வது? ‘தேன் தடவிய கத்தி இதயத்தில் பாய்ந்தது போல. . . . கம்பன் மகா கவிஞன், ஆனால் அவனுக்கே இந்த கான்செப்ட் தெரியாது.

எல்லாக் கவிஞர்களும் புதுக்கவிதை எழுதுகிறார்கள். ஆனால் மரபைத் தெரிந்து கொண்டு புதுக்கவிதை எழுதலாம். சோகமாக ஒரு விஷயத்தைச் சொல்ல தூங்கலோசை. பளார்னு ஒரு விஷயத்தைச் சொல்லணும்னா செப்பலோசை. அதுக்காக எண்சீர் விருத்தத்தையே எல்லாத்துக்கும் எழுதாதீங்க. கம்பராமாயணத்தில் சூர்ப்பணகை வரும்போது கம்பன் கையாள்கிற விருத்தம் வேறு. . . தாடகையை அறிமுகம் செய்யும் போது கையாள்கிற விருத்தம் வேறு. இந்த inner form பலருக்குத் தெரியாது.

பழையதை மதியுங்கள். அங்கிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அங்கேயே நின்று விடாதீர்கள். நல்ல படைப்புக்களை எடுத்து ஆராய்ச்சி செய்யுங்கள். ஏன் அது நல்லா இருக்குன்னு. வாழ்க! வளர்க!

(‘கவிதைச் சிறகுகள்’ நடத்திய ‘கவிக்கோ அப்துல் ரகுமான் விருது’ வழங்கும் விழாவில் கவிக்கோ அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து. . .)

Sunday, December 28, 2008

பேரெழில்



என் கண்கள்
என்னைப்
பார்ப்பதை விட

உன் விழிகள்
என்னை நோக்கும்
வேளைகளில்

பேரெழிலாய்
உணர்கிறேன்
நான்.

Tuesday, December 23, 2008

கருகிய ரோஜாவும், கடைசிக் கேள்விகளும்



அண்மையில் வாசிக்கக் கிடைத்த கவிதை.
நண்பர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.

Monday, November 24, 2008

கவிஞர் யுகபாரதிக்கு வாழ்த்து.



(நவம்பர்) 23.11.08 கவிஞர் யுகபாரதியின்
திருமணம் இனிதே நடந்தேறியது.
மணமக்கள் வாழ்வாங்கு வாழப்
பிரார்த்தனையும், வாழ்த்தும்.
அவருடைய திருமண அழைப்பிதழின்
பின்பகுதியில் இடம்பெற்றுள்ள
கவிதையின் ஒலிவடிவம்

Friday, November 21, 2008

காத்து கறுப்பு


காத்து கறுப்பு
ஏனோ தெரியலை
அடிக்கடி வந்து
போகிறது
தீக்குளித்த
கறுத்தம்மாவின்
நினைவு।
சுழன்றடித்த
காற்றின் வேகத்தில்
மின் கம்பியில்
மோதி
உயிர் விட்ட
காகத்தைக் கண்ட
கணந்தொட்டு....:(

Thursday, November 20, 2008

நாய்ப்பாசம்



நாய்ப்பாசம்.

பரபரப்பான நெடுஞ்சாலை.

எதையோ எதையோ
தேடும் முனைப்பில்
காத்து நிற்கும்
வாகனங்கள்।

பச்சை
ஒளிரும் வேளை
பாய்ந்து வந்தது
வீதியோர ராஜா।

மருண்ட அதன் விழிகளில்
வாகனங்களின்
எதிரொலி।

சடுதியில் சாலை புகுந்து
நெஞ்சோடு சேர்த்தணைத்தான்
ராஜாவை
வீதியோரச் சின்னமணி।

வசையின் இசையோடு
நடுச்சாலையில்
அரங்கேறியது
உயிர்களிடத்தில்
அன்பு செய்.