Saturday, March 24, 2012

வானொலிக் குயில் "ராஜேஸ்வரி சண்முகம்"


http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html



சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படியொரு பேரதிர்வு


மூத்த ஒலிபரப்பாளர், கிரிக்கெட் வருணனையாளர்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின்

மடல் வழியே மனம் தாக்குமென்று.


மின்மடல் 'Subject' கண்டதும், ராஜேஸ்வரி அம்மா பற்றிய

கலையுலகப் பகிர்வு என்று தான் நினைத்தேன்.

ஆனால், அதனினும் கடினமாக இருந்தன

உள்ளே பொதிந்திருந்த வார்த்தைகள்.


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையில்

அந்தக் குயிலின் குரலைக் கேட்டுக் கேட்டு

அலாதி ஆனந்தம் கொண்ட தலைமுறையில் அடியேனும் ஒருவன்.

என்னை விட அந்தக் குயிலிசையில்

கட்டுண்டு கிடந்தவர்கள் என் அம்மாவும், அக்காவும்.


மாண்புக்குரிய B.H அவர்களும், ராஜேஸ்வரி அம்மாவும்

இணைந்து படைத்த நிகழ்ச்சிகளுக்குத்

தனி ரசிகர் வட்டம் எப்போதும் உண்டு.

அந்த வட்டத்துக்குள் நெருக்கியடித்தபடி நானும் அடக்கம்.



எப்படியும் ஒருமுறையாவது அவரைச் சந்தித்து

விட வேண்டும் என்ற ஆவல்.

கரை மீறிய அலையாய்....எப்போதும் நெஞ்சில்....


2001 - 2002  ஆம் ஆண்டுகளில் www.worldtamilnews.com

சிந்தாதிரிப்பேட்டை அலுவலகத்துக்கு "அம்மா" வந்தார்கள்.

பரவச அனுபவத்தோடு பார்க்க மட்டுமே முடிந்தது.

பேச வாய் எழவில்லை சிறிது நேரம்.

முறையான அறிமுகப்படலம் முடிந்த பிறகு

இயல்பாக அருகே வந்து வாஞ்சையோடு

வாழ்த்துச் சொல்லி ஆசிர்வதித்தார்கள்.

இன்றும் பசுமையாய் அந்நினைவு

நெஞ்சில் நிலாவெளிச்சம் தருகிறது.


பிரசாந்த் நடித்த "மஜ்னு" திரைப்படத்தின்

பாடல் ஒலிநாடா வெளிவந்த வேளை அது.

ராஜேஸ்வரி அம்மா. மூத்த ஒலிபரப்பாளர் அப்துல் ஜப்பாருடன்,

நானும் இணைந்து அறிமுக நிகழ்ச்சி படைத்தது

என் ஒலிபரப்புப் பயணத்தில் மறக்க முடியாத மைல் கல்.


அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவரை

மீண்டும் காணும் பாக்கியம் வாய்க்கவில்லை.

இறைவன் இம்மண்ணில் அவருக்கு விதித்திருந்த

காலக்கெடு நிறைந்திருக்கலாம்.

அவர் விட்டுச் சென்ற எண்ணச் சுவடுகள்

காற்றுள்ள வரை வான வீதியில் வீசிக்கொண்டே இருக்கும்....

நல்லெண்ணம் விதைக்கும் தென்றலாய்......



எல்லாருக்கும் பொதுவான இறைவன் அவரையும்,

அவருடைய பணிகளையும் பொருந்திக் கொள்ளட்டும்.


Tuesday, February 28, 2012

அதிரும் உயிர்.





• வேட்டுவனின்
கவணிலிருந்து

விடுபட்ட

குறுங்கல்

ஊதிச் செல்கிறது

 விதியின் துயரத்தை....


• சிறகதிரப்

பறந்து செல்லும்

பறவையின்

ஒற்றை இறகு

காற்றில் அலைந்தபடி

சொல்லித் திரிகிறது...

இருத்தலின்

அவசியத்தை......

Sunday, January 15, 2012

தொன்மத் "தொழில்".



• குண்டூசி கூடக்
கூவிக் கூவி
விற்கப்படும்
இந்தக் காலத்திலும்

ஆர்ப்பாட்டமின்றி
அமைதியாகவே
தொடர்கிறது
உலகின்
ஆதித் "தொழில்".

• பெரு வணிகத்தின்
ஒப்பனையில்
மயங்கித் திளைக்கிறது
உலகம்.

• திகைத்துத்
தவிக்கிறது
அலங்காரமற்ற
அழகான
சிறு, குறு
வர்த்தக உலகம்.

• வணிகமாகி விட்ட
யுகத்தில்
கூவிக் கூவியே
மடமை வலைக்குள்
ஈர்க்கப்படுகிறது
மனுக் குலம்.

• அத்தனை
கூச்சலுக்கு
இடையிலும்
சலனமற்று
சப்தமின்றி
அமைதியாய்
நடக்கிறது
தொன்மத் "தொழில்".

Thursday, January 5, 2012

இறைவா!!

Iraiva! by haisathaq

இறைவா!

படைப்புகளில் எல்லாம்
சிறந்த படைப்பு
மனிதப் படைப்பு
என்றவன் நீ!.

அந்தப் படைப்புகளைப்
படைத்த நீயோ
சிறந்தவனுக்கெல்லாம்
சிறந்தவன்!!.

மனிதனின்
இதயத் துடிப்புகள்
நின்றால்
அவன் பிணம்.

ஆனால்

அதற்கும்
உயிர் கொடுத்து
எழுப்புகிறாயே
அதில் தான்
வெளிப்படுகிறது
உன் கருணை
என்னும் குணம்.

பெற்ற தாயோ
குழந்தை அழுதால் தான்
உற்று நோக்குவாள்.

ஆனால்

நாங்கள் உள்ளத்தளவு
மனம் நொந்தாலே
உற்று நோக்கக் கூடியவன்
நீ!.

ஆம்!!

நீ
பெற்ற தாயை விட
மேலான
அன்பு செலுத்தக் கூடியவன்.

இறைவா!

உதிக்கின்ற சூரியனும்
உன்னிடம்
அனுமதி கேட்டுத்தான்
உதிக்குமாமே!.

வானம் கூட
உன் அனுமதி கேட்டுத் தான்
மழை பொழியுமாமே!!

வேடிக்கையைப்
பார்த்தாயா!!!

இவை அனைத்தையும்
அனுபவிக்கக்கூடிய
மனிதன் மட்டும்
உன் அனுமதியை
நிராகரித்துத்
தான்தோன்றித் தனமாக
நடக்கிறான் இப்பூமியில்.

சூரியன் கூட
அதற்குரிய நேரத்தில்
விழித்தெழுகிறது.

ஆனால்
மனிதனோ

உன்னை வணங்குவதில்
தாமதமாகவே
விழித்தெழுகிறான்.

உன்னை வணங்கும்
விஷயத்தில்
என்றைக்கு
மனிதன் விழிப்பானோ

அன்றைக்குத் தான்
அவன் வாழ்வில்
விடியல் பிறக்கும்!!!.

ஆக்கம் : சகோதரர் S.H.அப்துல் காதர்.