Saturday, December 31, 2011

“முத்து மழை”



* அபூர்வமாய்
வாய்த்தது
அடைமழைத்
தருணம்.

* நெஞ்சிலும் ஓயாத
சத்த மழை.

* விரித்த குடையோடு
வீதியில் வருகிறாய்....:)

* சடுதியில்
சர்வ நாடியும்
ஒடுங்கிப் போயின
சாதுவாய்....!

* மழையை ரசிப்பதா?

* உன்னை ரசிப்பதா?

* மாறி மாறி
யோசிக்கும் என்னையே
பரிகசிப்பதா?

* வியப்பில்
வியர்த்த வேளை

* குறும்பாய்த்
தலை சாய்த்துக்
கூடவே
குடை சாய்த்தாய்…..!

* பட்டுத் தெறித்த
மழைத் திவலைகளில்
ஒரு துளி
இறங்கியது
என்
நெற்றியில்….

* சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளியாய்ச்
சிலிர்த்துப் போனது
மனசு.

* இப்போது
முத்து மழை.
.
.
.
.
.
.

* இனி எப்போது
முத்த மழை?!...:)

Thursday, December 29, 2011

உலக உலா - 2011 - 3



பொருளாதார ரீதியாக கிரீஸ் ஏற்படுத்திய தாக்கம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் பிரதிபலித்தது. அமெரிக்கப் பொருளியல் நலிவு எப்படி உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதுபோல கிரீஸின் நலிவு ஐரோப்பா மட்டுமின்றி, ஆசிய நாடுகளையும் பாதித்தது. கிரீஸின் இந்நிலையால் யூரோ நாணயத்தின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்தது. ஐரோப்பிய ஒன்றியம் அதை விரும்பவில்லை. அத்தகைய சூழலில் கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டிய நிலை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மோசமான பணவீக்கம், பயமுறுத்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு, மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன், வேலையின்மை என முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியில் கிரீஸ் தவித்தது. இனி மீள முடியுமா? என்ற பயத்திலும், சோகத்திலும் மக்கள் கவலைப்பட்டனர்.



கிரீஸ் மீதிருந்த நம்பிக்கையில் கடன் கொடுத்து வந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் கடனைத் திருப்பிக் கேட்கத் தொடங்கின. கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயத்தில் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்தனர்.

கிரீஸில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடிச் சுழல் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பாதித்தது, இந்தப் பிரச்சனையை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. எனினும் இந்த நெருக்கடி நிலை தொடரும் என்பதே இப்போதைய கணிப்பு.



வடகொரியத் தலைவர் கிம் ஜோங் இல் இவ்வாண்டு இறுதியில் மரணமடைந்தார். வடகொரியாவின் அணுஆயுத கொள்கையால் அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்பை சந்தித்தவர் கிம். எனினும் எதிர்ப்புகளை மீறி அணுசக்தி திட்டங்களை வடகொரியாவில் நிறைவேற்றினார்.

நீரிழிவு மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் கிம் ஜோங் இல். ரயிலில் பயணம் செய்த வேளை நெஞ்சு வலியால் அவர் மரணமடைந்ததாக அறிவித்தது வடகொரிய அரசு.



அதையடுத்து அவரது மகன் கிம் ஜோங் உன் தலைவர் பதவிக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. தற்போது பதவிக்கு வந்துள்ள கிம் ஜோங் உன் 3-வது தலைமுறையைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு முதலே கிம் ஜோங் உன் தலைமைப் பதவிக்குத் தயார்ப்படுத்தப்பட்டு வந்தார். மிக முக்கிய ராணுவ, உள்துறை பதவிகள் அவருக்குத் தரப்பட்டிருந்தன.


அமெரிக்காவின் நிம்மதிக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் ஒசாமா பின் லாடன். பாகிஸ்தானில் இருந்த அவரை அமரிக்க ராணுவம் கொன்றது. அல் காயிதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கடந்த 2001 - செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின் லாதன் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். அமெரிக்காவின் நீண்ட கால தேடுதல் வேட்டை இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. எனினும், பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்த வருடம் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர் தென் சூடானிய மக்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு தனி நாடு அந்தஸ்த்தைப் பெற்றது தென் சூடான்.

சூடானிலிருந்து பிரிந்து தென் சுடான் தனி நாடாவதா? வேண்டாமா? என்பது தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஜனவரியில் நடந்தது. அதனடிப்படையில், இவ்வாண்டு ஜுலை 9 தனி நாடாக அறிவிக்கப்பட்டது தென் சூடான். பெரும்பாலும் கிறிஸ்தவர்களும் ஆப்பிரிக்காவின் பூர்வ குடியினராகவும் அமைந்திருக்கின்ற தென் சூடானிய மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.



சூடான் இரண்டாகப் பிரிந்த பின்னரும், வடக்கு – தெற்கு சூடான் இடையே நாட்டின் எண்ணெய் வளங்களை பகிர்ந்து கொள்வது, எல்லைகளை வகுத்துக் கொள்வது, கடன் சுமையைப் பகிர்ந்து கொள்வது போன்ற பலவித சவால்கள் ஏற்படும் என்று தெரிகிறது.
முக்கால்வாசி எண்ணெய் வளம் தென் சூடானில் உள்ளது. இதனால் பல குழுக்களுக்கிடையே அவ்வப்போது பிரச்னைகளும் மூண்டு வருகின்றன. எனினும் இருக்கும் வளங்களை பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர் தென் சூடானியர்கள்.

******* ******* ******* ******* ******* ******* ******* *******
இந்த வருடம் இரண்டு அரச திருமணங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தன.



பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் லண்டனில் இவ்வாண்டு நடைபெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டனின் எலிசபெத் அரசியார் தொடங்கி வைத்தார்.

அரச குடும்பத்தின் திருமணத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது லண்டன் மாநகர். திருமண நிகழ்வு முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சாரட் வண்டியில் வலம் வந்தனர். வழிநெடுகிலும் குழுமியிருந்த மக்களிடம் கையசைத்தபடி வாழ்த்துக்களைப் பெற்றனர். இந்தத் திருமணத்தையொட்டி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் லண்டன் வீதிகளில் திரண்டிருந்தனர்.

அரச குடும்பத்தின் திருமண நிகழ்வை தொலைக்காட்சிகள், இணையத்தளம் மூலம் ஏறத்தாழ இரண்டு பில்லியன் மக்கள் கண்டு களித்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்தினரும், அனைத்துலகப் பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தமது தந்தை இளவரசர் சார்ல்ஸுக்குப் பிறகு பிரிட்டிஷ் மன்னர் பட்டத்துக்கான வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் இளவரசர் வில்லியம்.



ஆசியாவிலும் ஓர் அரசத் திருமணம். ஆடம்பரமின்றி எளிமையாக நடந்து முடிந்தது பூட்டான் மன்னரின் திருமணம். இமய மலைப்பகுதி நாடுகளில் ஒன்று பூட்டான். அதன் மன்னர் ஜிக்மி கெய்சர் நம்கியால்க்கும், 21 வயது கல்லூரி மாணவி ஜெட்சென்பெமாவுக்கும் மன்னர் அரண்மணையில் திருமணம் நடந்தது. தலைநகர் திம்புவில் உள்ள புனாஹா கோட்டையில், பௌத்த பாராம்பரியப்படி இந்தக் கல்யாணம் நடைபெற்றது. பூட்டான் பிரதமர் ஜிக்மிதைன்லி உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.



உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதித்தது. 2001 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதியது இந்தியா. முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்தியா. 28 ஆண்டுகளுக்கு முன்பு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திக் கோப்பையைக் கைப்பற்றியது.

முதன் முறையாக உலகக் கோப்பையை நடத்தும் பிரதான நாட்டின் அணி கோப்பையை வென்றுள்ளது. இலங்கை 1996ஆம் ஆண்டு வெல்லும்போது அது போட்டியை நடத்தும் துணை நாடாக இருந்தது.

ஸ்ரீநாத் சாதனை சமன்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், உலக கோப்பை அரங்கில் 23 போட்டிகளில் பங்கேற்று 44 விக்கெட்களை வீழ்த்தினார். அதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், அதிக வீரர்களை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முன்னிலை பெற்றார். முன்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துடன் 34 போட்டிகளில் பங்கேற்று அந்த இலக்கை எட்டினார்.

ஆறாவது வீரர்

இலங்கையின் தில்ஷான், இம்முறை 9 போட்டிகளில் மொத்தம் 500 ரன்கள் எடுத்தார். அதன் மூலம், பத்தாவது உலக கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

உலக கோப்பை அரங்கில், இம்மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் அவர். முன்னதாக இந்தியாவின் சச்சின் (673 ரன்கள், 2003), ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (659 ரன்கள், 2007), இலங்கையின் மகிள ஜெயவர்தனா (548 ரன்கள், 2007), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (539 ரன்கள், 2007), இந்தியாவின் சச்சின் (523 ரன்கள், 1996) உள்ளிட்டோர் அந்த இலக்கை எட்டினர்.

தோனி "6000'

இந்திய அணித் தலைவர் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் 6000 ஓட்டங்களைக் குவித்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 42வது ஓட்டத்தைக் கடந்த போது அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 186 போட்டிகளில் பங்கேற்று இவர் 6049 ஓட்டங்களை எடுத்தார். முன்னர் சச்சின், கங்குலி, டிராவிட், அசாருத்தீன், யுவராஜ், சேவக் உள்ளிட்டோர் இச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

காம்பிர் "4000'

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 97 ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் காம்பிர், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், 4000 ஓட்டங்களைத் தொட்டார். அவர் தமது 24வது ஓட்டத்தைக் கடந்த போது, இச்சாதனையை மலர்த்தினார். 114 போட்டிகளில் 9 சதம், 25 அரைசதம் உட்பட 4073 ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 11வது இந்திய வீரர் ஆனார்.

உலக கோப்பை வெற்றியாளரான இந்திய அணிக்கு, கோப்பையுடன், மொத்தம் ரூ. 44.1 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. தோல்வியடைந்த இலங்கை அணிக்கு ரூ. 6.75 கோடி கிடைத்தது.

கடந்த ஐந்து உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றவர் சச்சின். அவர் இடம் பெற்றிருந்த இந்திய அணி இதுவரை கோப்பை வென்றதில்லை. ஆறாவது முறையாக இத்தொடரில் பங்கேற்ற சச்சின், முதன் முறையாக உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற பெருமை பெற்றார். உலகக் கோப்பை வெற்றியை இந்திய நட்சத்திர வீரர் சச்சினுக்குச் சமர்ப்பித்தது வெற்றிக் குழு.

சொந்த மண்ணில் சாதனை

சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

உலகக் கோப்பையை வென்றாலும் இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்குக் கடுமையான சறுக்கல். இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. சாதிக்குமா? காத்திருப்போம்.

நன்றி : மெய்யப்பன்.

உலக உலா - 2011 - 2



பல்லாண்டுகளாகப் பசை போட்டது போல ஆட்சிக் கட்டிலில் ஒட்டியிருந்த அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு மக்கள் போதித்த பாடம் இவ்வாண்டின் முக்கிய அரசியல் திருப்பங்களில் முதன்மையானது.

துனிசியாவில் ஆரம்பித்த ஜனநாயகப் புரட்சி எகிப்து, ஏமன், லிபியா, சிரியா என அனைத்து அரபு நாடுகளுக்கும் பரவியது. மக்களின் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.



இவ்வாண்டுத் தொடக்கத்தில் துனிசியாவின் அதிபர் பென் அலி மக்கள் புரட்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தஞ்சமடைந்த நாடு சவுதி அரேபியா. 23 ஆண்டுகள் பென் அலி ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

அரசாங்கப் பணத்தைக் கையாடியது, சட்ட விரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்தது, ஆட்சி பொறுப்பை தவறாக பயன்படுத்தியது என்று அவர் மீது பல குற்றச்சாட்டுகள். இவற்றுக்காக 66 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டது என்பது நகைமுரண்.

பென் அலியைக் கைது செய்ய அனைத்துலகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது. துனிசியாவின் புதிய அரசாங்கம் பென் அலியை ஒப்படைக்கக் கோரினால், அதற்கு பதிலளிப்பதாகச் சொல்கிறது சவூதி அரேபியா.



துனிசியாவைத் தொடர்ந்து எகிப்திலும் மக்கள் வீறு கொண்டு எழுந்தனர். 20 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த அதிபர் Hosni Mubarak பதவி விலக வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. கெய்ரோ Tahrir சதுக்கத்தில் திரண்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18 நாட்களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பைத் துறந்தார் Hosni Mubarak. ராணுவத்திடம் தமது அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு தலைநகரை விட்டு வெளியேறினார்.

கொலைக் குற்றம் செய்ததாகவும், ஊழல் புரிந்தததாகவும் அவர் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள். தாம் தவறேதும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் சொன்னார் Mubarak. தற்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.



இவ்வேளையில் அங்கு முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த இரண்டு கட்ட தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவரும். அதைப் பொறுத்தே எகிப்தின் எதிர்காலம் அமையும். இதனிடையே தற்காலிகமாகச் செயல்படும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டங்களும் நடந்து வருகின்றன.



துனிசியா எகிப்து போன்று ஏமனிலும் பத்து மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நாளடைவில் கலவரங்கள் மோசமானதால் ஏமன் அதிபர் Saleh தமது பதவிகளைத் துணை அதிபர் Abdrabuh Mansur இடம் வழங்குவதாக அறிவித்தார்.

அதேபோல சிரியாவிலும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளன.



அரபு நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஒருபுறம் நிகழ்ந்து வரும் வேளையில் லிபியப் போர் அவ்வட்டாரத்தில் அனலாகக் கொதித்தது. கர்னல் கடாஃபியைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்பது லிபிய அதிருப்தியாளர்களின் பிரதான நோக்கம்.



லிபியாவில் தலைவர் கடாஃபிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போர் தொடுத்தனர். அவர்களுக்கு நேட்டோ படை ஆயுதங்களைக் கொடுத்து உதவியது. அதிருப்தியாளர்கள் படிப்படியாக முன்னேறினர்.



தலைநகர் திரிப்போலி அதிருப்தியாளர்கள் வசம் விழுந்த பின் தலைவர் கடாஃபி தலைமறைவானார். நீண்ட நாள் தேடலுக்குப் பின் கடாஃபியை அவரது சொந்த ஊரான SIRTE வில் அதிருப்தியாளர்கள் கண்டுபிடித்துக் கோரமாகக் கொன்றனர். கடாஃபியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் Saifal Islamம் அதிருப்தியாளர்களிடம் அகப்பட்டார்.



அரபுநாடுகளின் மக்கள் புரட்சி இவ்வருடத்தின் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் செல்கிறது. அதே போல் அமெரிக்காவுக்கும் இவ்வாண்டு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சத்தாம் ஹுஸைன் தூக்கிலிடப்பட்ட பிறகும், நீண்ட நாட்களாக அமெரிக்கப் படைகள் ஈராக்கில் முற்றுகையிட்டு வந்தன.



அமெரிக்காவில் அதிபர் ஓபாமா பதவி ஏற்ற பிறகு ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைப் படிப்படியாக வெளியேற்றப்படும் என்று அறிவித்திருந்தார். அதே போல ஈராக்கில் உள்ள கடைசித் தொகுதி அமெரிக்கப் படையினர் இவ்வாண்டு இறுதியில் வெளியேறினர்.



இந்த வருடம் பாலஸ்தீனத்திற்கு ஒரு முக்கிய வருடம். உலக நிறுவனத்தில் "பார்வையாளர்" தகுதி மட்டுமே பாலஸ்தீனிடம் உள்ளது. தன்னை முழு உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளுமாறு அதிபர் மஹ்மூத் அப்பாஸ், செப்டம்பர் மாதம் முறையாக விண்ணப்பித்தார். உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தின் பரிசீலனைக்கு அந்த விண்ணப்பம் சென்றுள்ளது.

உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளன. இருப்பினும், அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்க்கின்றன. உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீன தனிநாட்டுக்கான கோரிக்கை விவாதிக்கப்படும்போது தன்னுடைய ரத்து அதிகாரத்தைக் கொண்டு அதனைத் தோல்வியடையச் செய்யப்போவதாக எச்சரித்திருக்கிறது அமெரிக்கா.

இந்நிலையில் சென்ற அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்திற்கு உலக நிறுவனக் கலாசார அமைப்பான UNESCO-வில் முழு உறுப்பியம் கிடைத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய எதிர்ப்புக்கு இடையில் பாலஸ்தீனத்திற்குக் கிடைத்த அரசதந்திர வெற்றி அது. தற்போது யுனெஸ்கோ தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடியும் பறக்கத் தொடங்கியுள்ளது.



அடுத்து இவ்வருடத்தின் மிகப்பெரிய திருப்பம் இந்தியாவின் அன்னா ஹசாரே ஏற்படுத்திய தாக்கம். காமென்வெல்த் விளையாட்டுகள் ஏற்பாட்டில் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை விற்பதில் ஊழல் என்று ஊழல்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே போனது.

ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார் காந்தியவாதியாகத் தம்மை அடையாளப்படுத்தும் அன்னா ஹசாரே. லோக்பால் மசோதா எனும் ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து அரசாங்கத்துடன் கபடியாடி வருகிறார். லோக்பால் மசோதாவை இந்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது இப்போதைய நெருக்கடி.

மறுபுறத்தில் அன்னாவைக் கடுமையாகச் சாடுகின்றன சில ஊடகங்கள். காங்கிரசை எதிர்ப்பது மட்டுமே அவரின் குறிக்கோள். அதற்காக ஊழல் ஒழிப்பு என்ற போர்வையை அவர் போர்த்தி வருகிறார். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக அறியப்படும் பாரதிய ஜனதா அன்னாவின் போராட்டம் பற்றி மௌனம் சாதிக்கிறது. ஏனைய கட்சிகளும் கண்டும், காணாமல் இருக்கின்றன. அன்னாவுடைய போராட்டத்தின் பின்னணியில் ஆதிக்க சக்திகளின் சதி இருக்கிறது என்பது அவரை எதிர்ப்பவர்களின் வாதம். எது நிஜம்?



தமிழகத்தில் ஆட்சி மாற்றம். ஐந்து ஆண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் மாபெரும் வெற்றியைச் சுவைத்திருக்கிறது தமிழகத்தின் பிரதானக் கட்சியான அதிமுக. நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து களம் கண்ட அதிமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி. தமிழக சட்டமன்றத்துக்கு மொத்தமுள்ள இடங்கள் 234. அவற்றில் 201 இடங்களைக் கைப்பற்றியது அதிமுக அணி.

காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகளுடன் கைகோத்துக் களம் கண்ட திமுகவுக்குக் கடுமையான சறுக்கல். அந்த அணி பெற்ற இடங்கள் 31. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஜெயலலிதா நான்காவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஆட்சிக் கட்டிலுக்கு வந்த பிறகு ஏகப்பட்ட தடாலடிகள். அந்த நடவடிக்கைகள் அவருக்குப் பெருமையைத் தரவில்லை. சமச்சீர் கல்வியை அனுமதிப்பதில் பிடிவாதம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கப் போவதாக அறிவித்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கியது. இப்படி அம்மாவின் இலக்கு பரபரப்பும், பழிவாங்கலும் நிறைந்ததாக நகர்கிறது.

இந்தக் குறைகளை மக்கள் எளிதில் மறக்க வேண்டுமல்லவா? சசிப் பெயர்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. உடன் பிறவாச் சகோதரி சசிகலாவும் அவருடைய உறவினர்கள் 14 பேரும் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டனர். இது கனவா? கற்பனையா? கடைந்தெடுத்த தீர்மானமான முடிவா? தெளிவு தெரியாமல் சந்தேகப் பார்வையைச் சங்கேதமாகச் செலுத்துகின்றனர் மக்கள்.


உலா தொடரும்... :)

உலக உலா 2011 - 1



பயங்கரத் துயரம், வடியாத சோகம், மக்களாட்சிக்கான புரட்சி, அரசியல் மாற்றம் என்று கலவையான சுவடுகளை விட்டுச் செல்கிறது 2011. ஜப்பானின் நிலநடுக்கமும், ஆழிப் பேரலையும் மனித வாழ்வை பெரும் கேள்விக்குள்ளாக்கின. ஆழிப் பேரலையால் தாக்கப்பட்ட FUKUSHIMA அணுஉலையிலிருந்து வெளியான கதிரியக்கம் உலக நாடுகளின் அணுக் கொள்கைகளை மறுபரிசிலனைக்கு உட்படுத்தச் செய்தது. துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம் எண்ணற்ற உயிர்களைக் காவு வாங்கியது. பாகிஸ்தானிலும் தென் கிழக்காசியாவிலும் ஏற்பட்ட வெள்ளம் வர்த்தகத்தை முடக்கிப் போட்டது.



வடகிழக்கு ஜப்பானில் நிலம் கொஞ்சம் நெட்டி முறித்தது. அதிர்வின் அளவு 8.9 ரிக்டர். கூடவே சேர்ந்து வந்தது மிரட்டலைத் தந்த ஆழிப் பேரலை. ஜப்பானின் பசிபிக் கரையோரம் பத்து மீட்டர் உயரத்துக்குச் சீறிப் பாய்ந்தன பேரலைகள். வலைக்குள் சிக்கிய மீன்களை கரையிழுக்கும் மீனவர்கள் போல, நிலத்தில் இருந்த வீடுகள், பயிர்கள், வாகனங்கள் என வழியில் கண்ட அத்தனையையும் வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றது கோரப் பேரலை. பலியான உயிர்களின் எண்ணிக்கை 15000 க்கும் அதிகம். பலரின் சடலங்கள் கூட கிட்டவில்லை.



நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீ மூண்டது. வடக்கு சென்டாய் நகரில் ஒரு பெரிய நீர்முகப்புப் பகுதியும் தீக்கு இலக்கானது. தலைநகர் தோக்கியோவையும் விட்டு வைக்கவில்லை நிலநடுக்கம். வீடுகள், அலுவலகங்கள், உயர்மாடிக் கட்டடங்கள், நாடாளுமன்றம் என்று எல்லா இடங்களும் அதிர்ந்தன. அங்கிருந்து சுமார் 240 கிலோமீட்டர் வடக்கே இருக்கும் Fukushima அணுஉலையையும் கபளீகரம் செய்தது ஊழித் தாண்டவம் ஆடிய ஆழிப் பேரலை.

அணுஉலைக்குக் கடுமையான சேதம். அவ்வட்டாரத்தில் இருந்த பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கதிரியக்கக் கசிவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. ஜப்பான் அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டது.



பாதிக்கப்பட்ட அணுஉலைகளை கோரத் தாண்டவம் ஆடிய கடல் நீரைக் கொண்டே சாந்தப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போவது போல் தோன்றியது. Ukraine னின் chrenobyl அணுஉலையை மூடியது போல fukushima அணுஉலையையும் மூடி விடலாமா என்று கூட யோசித்தது ஜப்பான். ஆனால் அயராத முயற்சி அணுக்கசிவையும் அடக்கும் என்பதை நிரூபித்தது ஜப்பான். நாளடைவில் அணுகசிவின் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தண்ணீரில் வீசிய கல் உண்டாக்கும் வட்டம் போல, Fukushima அணுஉலைகளின் தாக்கம் உலக அளவில் அச்ச அலையைத் தோற்றுவித்தது. உலக நாடுகள் அணுஉலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பல நாடுகளில் போராட்டம் நடந்தன. இந்தியாவின் கூடங்குளத்தில் அது இன்னும் தொடர்கிறது. இது கதிரியக்கத்தால் வந்த பயமல்ல. மக்களின் கண்ணீரில் விளைந்த அச்சம்.



துருக்கியின் கிழக்குப் பகுதியில் உள்ள வான் நகரில் பூமி கொஞ்சம் புரண்டு படுத்தது. சோம்பல் முறித்த வேளையின் வீரியம் 7.2 ரிக்டர். விளைவு, கடுமையான நிலநடுக்கம். குர்து இன மக்கள் அதிகம் வாழும் அப்பகுதியில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன. ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். மூன்று மணி நேரத்துக்குள் 8 முறை துள்ளி விளையாடியது நிலம்.



இவ்வாண்டு பாகிஸ்தானுக்கு சோதனை காலம். வெள்ளி தோறும் அங்கே தீபாவளி தான். தலையில் துண்டு போண்டுத் தொழுகைக்குச் செல்வோரையும் தீவிரவாதிகளின் குண்டுகள் விட்டு வைப்பதில்லை. வாரந்தோறும் ஆரவாரமாய் ஒலித்து ஒலித்து ஓய்கிறது அப்பாவிகளின் அடங்கா ஓலம். எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.



இந்நிலையில், தெற்கு பாகிஸ்தானில் பெய்த கனத்த மழை, வெள்ளைப் பெருக்கை அழைத்து வந்தது. 4 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். பல உயிர்கள் தண்ணீரில் சடலமாகின. சிந்து மாநிலத்தில் வழக்கத்தைவிட 142 விழுக்காடு அதிகம் பொழிந்தது வானம். வெள்ளப்பெருக்கு காரணமாக 21 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.



வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உலக நாடுகளும், தன்னார்வ அமைப்புகளும் உதவ முன் வந்தன. எனினும் வர்த்தகத்தில் ஏற்பட்ட பின்னடைவு சரியாக இன்னும் அவகாசம் தேவை என்பதே இப்போதைய நிலை.



பாகிஸ்தானைத் தொடர்ந்து, தாய்லந்திலும் நூற்றாண்டு காணா வெள்ளம். பாய்ந்து வந்த நீர் குடித்து ஏப்பம் விட்ட உயிர்களின் எண்ணிக்கை 300 க்கும் அதிகம். பல்லாயிரம் பேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். தாய்லாந்தின் வட, மத்தியப் பகுதிகளைச் சுற்றிச் சூழ்ந்தது வெள்ளம். தண்ணீர் படிப்படியாக அதிகரித்துத் தலைநகர் பேங்காக்கைத் தொட்டது. அங்குள்ள ஒரு விமான நிலையத்திலும் புகுந்தது வெள்ளம். தடுப்பு முயற்சிகள் பெரிய பலனைத் தரவில்லை. தலைநகர் பேங்காக் தண்ணீரில் மிதந்தது. தென் கிழக்கு ஆசியாவில் வேகமாக நவீனமடைந்து வரும் பேங்காக் அந்த இக்கட்டான நிலையைக் கையாளத் திணறியது.



மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியது தாய்லந்து அரசாங்கம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தாய்லந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற Yingluck Shinawatra விரைந்து செயல்பட்டார். இயற்கையும் கை கொடுத்ததால் தப்பிப் பிழைத்தது தாய்லந்து.



நோபெல் அமைதிப் பரிசு வழங்கும் நாடு நார்வே. இவ்வாண்டு அதன் அமைதிக்கு வேட்டு. காரணம், ஜூலை 22 ல் நாள் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு, அதைத் தொடர்ந்து Utoyo தீவில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம். இவையிரண்டும் ஐரோப்பாவை மட்டுமல்ல உலகையே ஓர் உலுக்கு உலுக்கியது. தலைநகர் ஆஸ்லோவில் அரசாங்க அலுவலகங்களைக் குறிவைத்துக் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதற்கடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ அருகில் உள்ள Utoyo தீவில் காத்திருந்தது மற்றுமோர் அதிர்ச்சி. அங்கே ஆளும் தொழிற் கட்சியின் இளையர் அணியினரின் கூட்டம் நடந்தது. அங்கே வந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.



Utoya தீவைச் சுற்றி உள்ள நீர்ப் பகுதியில் காவல் துறையினர் மாண்டவர்களைத் தேடினர். துப்பாக்கிச் சூடு நடந்த போது நீரில் குதித்த 300 க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினரும், அருகில் வசித்தவர்களும் காப்பாற்றினர்.



துப்பாக்கிச் சூட்டை நடத்திய நார்வேயைச் சேர்ந்த Anders Breivik பின்னர் சரணடைந்தார். 'இந்தத் தாக்குதல் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால் அவசியமானது!' என்று பிரெவிக் கூறியிருந்தார். அசம்பாவிதச் சம்பவத்துக்கு முன்னதாகவே 1500 பக்கங்களுக்கு அதிமான நீண்ட, விரிவான சுய விளக்க அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதில் கொலைச் சதித்திட்டம் பற்றி விரிவாக விளக்கியிருந்தார். பின்னர் நார்வே காவல்துறை அவரைக் கைது செய்தது.



தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகையே மாற்றி அமைத்தன ஆப்பிள் மின்னணுச் சாதனங்கள். அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் இவ்வாண்டு இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 56. நீண்ட காலம் கணையப் புற்றுநோயால் அவதிப்பட்ட அவருக்கு நான்கு முறை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியத் தயாரிப்புகளான I Pod, I Phone, I Pad ஆகிய சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனையில் முகிழ்த்தவை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் அனைத்திற்கும் அவருடைய தலைமைத்துவம் அவசியமாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் பொறுப்பேற்ற பிறகுதான் ஆப்பிள் நிறுவனம் இசை சார்ந்த மின்னணுப் பொருள் தயாரிப்புகளின் பக்கம் தன் பார்வையைக் குவித்தது. சிக்கலான தொழில்நுட்பத்தை பாமரனும் பயன்படுத்த வழி செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதன் விளைவாக நிறுவனத்தின் புகழை உலகறியச் செய்த பெருமை அவரைச் சாரும். மிகக் குறுகிய காலத்தில் பலரது கவனத்தை ஈர்த்த ஸ்டீவ் ஜாப்ஸின் அகால மரணம் மின்னணு, தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உலா தொடரும்...:)

Saturday, December 24, 2011

முழு “நீல”ப்படம்



•நாயகனை
ஓரக் கண்ணால்
பார்ப்பதே பேரழகு
தாத்தா காலத்தில்....

•நாயகனும் நாயகியும்
தொட்டுத் தொட்டுப்
பேசுவதே பேராச்சர்யம்
அப்பா காலத்தில்...

•தளுக்குறதுக்கும்
குலுக்குறதுக்கும்
தனித் தனி நாயகி
இது தமையன் காலம்....

•படம் முழுக்கப்
அந்தப் பொறுப்பையே
நாயகி
பாந்தமாச் செய்யுறா
என் காலத்தில்...

•படங்கள் யாவும்
நீளம் என்பது
திரிந்து
எல்லாமே
“நீலமாகி விடுமோ?”
வருங்காலத்தில்.... :(

Wednesday, December 7, 2011

இட ஒதுக்கீடு



“நீரே தாகம் தணிக்கும்” என்கிறான் ஒருவன்.

“இல்லை பானியே தணிக்கும்” என்கிறான் மற்றொருவன்.

“இல்லையில்லை; Water தான் தணிக்கும்” என்கிறான் இன்னொருவன்.

மூவரும் அடித்துக் கொண்டு சாகிறார்கள், தாகம் தணியாமலே.

இது தான் மதவாதிகளின் கதை.

பொருள் ஒன்று தான்;

பெயர் தான் வேறு வேறு
என்பதைப் புரிந்து கொள்ளாத

அறியாமையே சண்டைக்குக் காரணம்.

இறைவனை அறியாதவனே
இறைவன் பெயரால் சண்டையிடுகிறான்.

சண்டையிடுகிறவன்
உண்மையான மதவாதியல்லன்.

அவன் வெறும் ‘மதம்’ பிடித்தவன்.

வலையில் தண்ணீர் அகப்படாது.

மதம் பிடித்தவனிடம் மகேசன் அகப்படமாட்டான்.

பறக்கும் போது சப்தமிடும் வண்டு,

பூவில் அமர்ந்து தேனருந்தும் போது

மெளனமாகி விடுகிறது.

இறைவனை அடையாதவனே சர்ச்சைகள் செய்கிறான்.

அடைந்தவன் மௌனமாகி விடுகிறான்.

எல்லாப் பூவிலும் தேன் இருக்கிறது என்பதை

அறிந்த தேனீ மலர்களுக்குள் பேதம் பாராட்டுவதில்லை.

ஒருவன் மந்திரை இடித்து விட்டு மஸ்ஜித் கட்டுகிறான்.

மற்றொருவன் மஸ்ஜிதை இடித்து விட்டு மந்திர் கட்டுகிறான்.

இதயமே இறைவனின் மெய்யான ஆலயம்.

போலி மதவாதிகள் மெய்யாலயத்தை இடித்து விட்டுப்

பொய்யாலயத்தைக் கட்டுகிறார்கள்.

கடவுள் பக்தன் கடப்பாரை ஏந்த மாட்டான்.

பூக்கள் தொடுக்கும் நாரையே ஏந்துவான்.

இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதை அறிந்தவன்

அவனுக்கு இட ஒதுக்கீடு செய்வானா?

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதைப்

பார்க்கத் தெரிந்தவன் பிற உயிர்களைப் பகைப்பானா?

கவிஞர் பர்ஃக் எப்பொழுதோ எழுதிய கவிதை இது :

நீ

மறைந்திருப்பதால் தான்

மஸ்ஜித் மந்திர் சண்டைகள்.

நீ மட்டும்

வெளிப்பட்டு விட்டால்

எல்லாமே

நீயென்றாகி விடும்.


நன்றி : மகரந்தச் சிறகு - கவிக்கோ அப்துல் ரகுமான்

Friday, December 2, 2011

இணையில்லா இறைவா!



இணையில்லா
இறைவா!

அன்புக்கு
நீயே ஆதாரம்.

அசதியின்
அவசரத்தில்
அதை மறந்தால்
வாழ்வே சேதாரம்.

கருணைக்கு
நீயே மூலாதாரம்.

அந்த
நம்பிக்கையே
இகபர வாழ்வின்
ஜீவாதாரம்.

மண்ணில்
மன்பதைகளை
மாண்புறக் காப்பவனே!

இமைப் பொழுதும்
எனை
என் பொறுப்பில்
சாட்டி விடாதே!

கார்மேகக்
கருணையாளனே!


அசத்தியம் முறித்து
சத்தியம் வெல்ல
நீயே
கணை.

உன்
கனி விழிப்
பார்வையின்
கண்ணியில்
என்னையும்
பிணை.

உன் வழி
வாழும்
நல்லடியார் குழுவில்
என்னையும்
இணை.

இகமதில்
அகமதில்
முஹம்மதின்
துணையோடு
கதிபெற
இப்போதும்
முப்போதும்
எப்போதும்
நீயே
துணை.