Saturday, March 3, 2007

நட்புக்காலம் - முத்தாய்ப்பு



அணுகுண்டுக்கும்
புத்தகத்துக்கும்
வேறுபாடு ஒன்று தான்.

முன்னது ஒருமுறை தான்
வெடிக்கும்.
புத்தகம்
திறக்கும் போதெல்லாம்
வெடிக்கும்.

எப்போதே படித்த இந்த வரிகளின்
ஜீவிதம் இன்றும் தொடருகிறது.
இனியும் தொடரும்.....

இலட்சியக்கவி அறிவுமதியின்
நட்புக்காலம் படித்த போது
அதை முழுமையாக
உணர முடிந்தது.

பொதுவாகப் புத்தகங்களில்
சில பித்தம் கொள்ள வைக்கும்.
இன்னும் சில பித்தம் தெளிய வைக்கும்.
நட்புக்காலம் அதில் இரண்டாம் வகை.

நகரமயமாதல் சூழலில்
எங்கு நகர்ந்தாலும்
நசுங்கிப் போவோம்
என்ற நிலையில்
என் விழிகளில் பட்ட
அந்த நட்புக்காலம்
படிக்கப் படிக்கப்
புதிய பாதையைக் காட்டியது.

அது போக்குவரத்து
நெரிசலற்ற அழகான பாதை.

ஒரு படைப்பாளி தான் எண்ணியதை
வார்த்தைகளில் கொண்டு வருகிறான்.

அதைப் படிப்பவன் அது பற்றி
ஆயிரம் காரணங்களைக்
கற்பித்துக் கொள்கிறான்.

அவற்றுள் சில ஆரோக்கியமானவை.
இன்னும் பல வெறும் கற்பிதங்கள் மட்டும் தான்.

நட்புக்காலத்தின்
ஒவ்வொரு கவிதையையும்
உளப்பூர்வமாய் உணர்ந்தேன்.

அன்னை எங்களுக்கு வகிடெடுத்து விடும் வரை
அண்டை வீட்டு
அகிலா,ஆயிஷா,ஏஞ்சல்
யாவரும் என்
தோழிகளாய்த் தான் இருந்தார்கள்.

அப்போதெல்லாம்
அம்மா, அப்பா விளையாட்டு,
கள்ளன், போலீஸ், கண்ணாமூச்சி,
பாண்டியாட்டம்,சொட்டாய்ங்கல்,
ஐஸ்குச்சி, பல்லாங்குழி
என்று சகல விளையாட்டுக்களிலும்
எங்களின் இணைகள் அவர்கள் தான்.

எப்போது எங்கள் உதட்டுக்கு மேலே
கொஞ்சம் அரும்பத் தொடங்குகிறதோ,
அப்போது தான் எங்களுக்குள்
கொஞ்சம் பிரித்துணரும் தன்மையும்
எட்டிப் பார்க்கிறது.

பெண்களில்(ள்) தாவணியும் போது
அந்தத் தன்மை வலுப்பெறுகிறது.

இன்றும் என் பள்ளித் தோழியரைப் பார்க்கும் போது
மீண்டும் அந்தப் பழைய காலத்துக்குச்
செல்லும் இயந்திரம் ஒன்று கிட்டாதா?
என்ற ஏக்கம் வரும்.

நட்புக்காலத்தில்
அனைத்துக் கவிதைகளையும்
நான் வாசித்தேன்,
யோசித்தேன்,
நேசித்தேன்.

அதிலும் குறிப்பாக,
சில கவிதைகள்
என் தலையில் குட்டின.

இன்னுஞ்சில
என் கேசம் வருடின.

இன்னுஞ்சில
தூக்கம் கெடுத்தன.

மேலும் சில
தூக்கம் கொடுத்தன.

வேறுசில துக்கம் / ஏக்கம் தந்தன.

அறுசுவை அல்ல.
அதற்கு மேலும் ஒரு சுவையை
அவை எனக்குத் தந்தன.

நான் வியந்து
ரசித்த கவிதைகளாக
இவற்றைச் சொல்வேன்.....

* கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக் கண்டதும்
எப்படி
இவ்வளவு இயல்பாய்
தூங்கிவிடுகின்றன.

* பள்ளி மைதானம்
காலை வணக்கம்
காற்று கலைத்ததைக்
கண்களால்
மூடினேன்.

இது முடியக் கூடிய பட்டியல் அல்ல.
என்றும் தொடரக் கூடிய பட்டியல்....

அறிவுமதியின் நட்புக்காலத்தைப்
பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த
அத்தனை தோழமைக்கும்
இதயப் பூர்வமான நன்றி.

மீண்டும் சந்திப்போம்.
அதுவரை
கொஞ்சம் சிந்திப்போம்.....

நட்புக்காலம் 7

41) அந்த
இனிப்பை
நான் உண்கையில்

தவறி விழுந்த
ஒரு துண்டை எடுத்து
வாயில் போட்டுக் கொண்டான்
காதலன்.

ஒரு துண்டை எடுத்து
குப்பைக்கூடையில்
போட்டான்
நண்பன்.

************

42) தொடாமல் பேசுவது
காதலுக்கு
நல்லது
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.

தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த
மொழி
பேசிவிடும்.

************

43) இசைக்கருவிகளை
மீட்டி
கண்டெடுக்கிற
மெளனம்
காமம்

பேச்சுக்களைக்
கூட்டி
கண்டெடுக்கிற
இசை
நட்பு.

************

44) கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக் கண்டதும்
எப்படி
இவ்வளவு இயல்பாய்
தூங்கிவிடுகின்றன.

************

45) காதலனோடு
பேசிக்கொண்டிருக்கையில்
தாவணியை
சரிசெய்தேன்.

நண்பனோடு
பேசிக்கொண்டிருக்கையில்
தாவணியை
சரிசெய்தான்.

************

46) நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காங்கள்
உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்.

************

47) நள்ளிரவில்
கதவுதட்டும்
ஒலி கேட்டு
வந்து திறந்தேன்

காதலனோடு
சோர்ந்த முகத்தாடு
நின்றாய்

பறப்படுகிறேன்
அடுத்த கிழமை
பார்க்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக்
கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி.

************

48) தேர்வு முடிந்த கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற எவருக்கும்
தெரிவதில்லை

அது ஒரு
நட்பு முறிவிற்கான
சம்மத
உடன்படிக்கை
என்று.

************

நட்புக்காலம் 6

31) இரண்டு இரவுகள்
ஒரு பகல்
ஈரக் காற்றுகளால்
நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத் தொடர்வண்டிப்
பயணத்தில் எனக்கு
எதிரிலேயே
அமர்ந்து
தூங்கி
சாப்பிட்டு
படித்து
பேசாமலேயே இறங்கிப் போக
பெண்ணே உனக்குக்
கற்றுக் கொடுத்தது யார்.

************

32) புரிந்து
கொள்ளப்படாத
நாட்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தானாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

************

33) ஆய்வை முடிக்கிறவரை
காதலனை வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்.

வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம் கெஞ்சினாய்.

உன்னைக் காதலிப்பவனும்தான்
எவ்வளவு உயர்ந்தவன்.

உணர்ந்துகொண்ட
மெளனத்திற்கென்றே
ஒரு புன்னகை
இருக்கத்தான் செய்கிறது
என்பதை
அவன் தானே
எனக்குச்
சொல்விக் கொடுத்தான்.

************

34) பள்ளி மைதானம்
காலை வணக்கம்
காற்று கலைத்ததை
கண்களால்
மூடினேன்.

************

35) உனக்கு மடல் எழுத
உட்காருகிறபோது மட்டும்தான்
அப்புறம் எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக்
கிடைத்து விடுகின்றன.

************

36)காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று.

************

37) உனது சிறிய
பிரிவிற்கான
வலியைச்
சமாதனப்படுத்திக்
கொள்வதறகாகப்
பெரிய பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள்
நிறைந்த
அந்த வானூர்தி
நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு
வந்தேன்.

************

38) பால் வாசனையில்
அம்மா.

அக்குள்
வாசனையில்
மனைவி.

இதயத்தின்
வாசனையில்
நட்பு.

************

39) அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
உள்ளங்களின்
நட்பில்
இருக்கிறது.

************

40) அனைத்துக் கல்லூரிப்
போட்டிகளுக்கான
பங்கேற்பிற்காகத்
தற்செயலாக
அமைந்த
அந்தத்
தொடர்வண்டிப் பயணத்தில்
என் தோள் வாங்கித்
தூங்கிய
உன் மூடிய விழிகளில்
விழித்தேன்
முதன்முதலாய்
நான்.

************

நட்புக்காலம் 5

26) அம்மா அப்பாவிடம்
அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த
பரிமாறலுக்கு நடுவே...

எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில் இவன்
என் நிச்சயிக்கப்பட்ட
நண்பன்.

இப்போதும் கேட்கிறது
உன் குரல்
எனக்குள்.

************

27) சன்னலில்லாத
விடுதி அறையும்
அட்டவணைச்
சமையலும்
நம்மை
வாடகை வீடெடுக்க
வைத்தன
கல்லூரிக்கு வெளியே.

அறைக்குள் வந்து
இல்லறத்திற்குக்
கூடு தேடும்
இந்தச்
சிட்டுகளுக்குத் தெரியுமா
நம் நட்பு?

************

28)எனக்கு
மட்டும் என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக்
கொண்டு
வெளிவாங்கிப்
பூக்கிறது நட்பு.

************

29) நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை.

************

30) நண்பர்கள்
என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிய
அண்ணன்
தங்கை என்று
ஆரம்பித்தவர்கள்
கணவன்
மனைவியாகவும்
ஆகியிருக்கிறார்கள்.

ஆனாலும் சொல்கிறேன்
உண்மையான நட்பு
என்பது
நம்மைப்போல் என்றும்
நட்பாகவே
இருப்பது தான்.

************

நட்புக்காலம் 4

21) போக்குவரத்து
நெரிசல்மிக்க
அந்தச் சாலையோரத்தில்
நாம்
பேசிக்கொண்டிருந்தபொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்.

**********

22) உனக்கான பதில்களை
என்னிடமிருந்து நீ
எதிர்பார்க்காமல்
பேசுகிறபோதெல்லலாம்
தலைமுறைகளைத்
தாண்டிய
நம் பாட்டிகளின்
உறைந்து கிடக்கும்
மௌனங்கள் அனைத்தையும்
நீ உருக்கிக் கொள்கிறாய் என்றே
நான் கருதுகிறேன்.

**********

23) எதைப் பற்றித்தான்
நாம்
பேசிக்கொள்ளவில்லை.

காதல் காமம்
குல்சாரி
ஆழிப்பேரலை
பெரியார்
அகிரா குரசோவா
புல்லாங்குழுல்

காற்றுள் மிதக்கும்
நம் உரையாடல்களை
மீட்க
நாளையேனும்
ஒரு கருவி
கிடைக்குமா?.

**********

24)சேர்ந்து நிழற்படம்
எடுத்துக்கொண்டு
அடிக்கடி மடல்
எழுதுவதாகச்
சொல்லிக்கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
துணைவியிடமும்
பேத்திகளிடமும் கூட
சிரிக்கச் சிரிக்கப்
பேசுகிறார்கள்
இவர்கள்.

**********

25) பேருந்து
நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்.

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்.

நட்புக்காலம் 3

13) பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்குத்
துணையாய் இருந்த
உன் விடுதி
அணிலுக்கு
இப்போதும்
நினைவிருக்குமா
நம்மை.

**********

14) எனது காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து
வைத்த போது

நீ
விழுங்கிய
எச்சிலில்
இருந்தது
நமக்கான நட்பு.

**********

15) எனக்குத் தெரியும்
நீ சாப்பிடும்
நேரத்தின்
கடைசிக் குவளை
தண்ணீரில்
இருக்கிறேன்
நான்.

**********

16) நம்மைப் பற்றிய
ஆசிரியர்களின்
அய்யங்களுக்குத்
துணையாய்
நூல்களைப்
படபடக்கச் சொல்லிவிட்டு
இயல்பாய்
பேசிக்கொண்டிருந்தோம்
நாம்.

**********

17) அந்த மொட்டைமாடியின்
வெளிச்சம் குறைந்த
இரவின்
தனிமையில்
நம்மை அருகருகே
படுக்க வைத்துவிட்டு

நாம் பேசிக்கொண்டே
போய் வந்த
நட்பின்
பாதைகளைத்தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து பார்க்கின்றன.

**********

18) நீ மெயப்பித்த
பெண்மையிலிருந்து
வாய்த்தது
நான் மதிக்கும்
ஆண்மை.

**********

19) அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்
உன் மடியில் நானும்
மாறிமாறி
தூங்கிக்கொண்டு வந்தோம்.

தூங்கு என்று
மனசு சொன்னதும்
உடம்பும் தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது.

**********

20) இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில்
அசைந்த புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல் நாள்.

**********

நட்புக்காலம் 2

7) போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற பயம்
நல்ல வேளை
நட்பிற்கு இல்லை.

8) உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற எல்லையை
ஒரு நாள் தற்செயலாய்
நான் மீறிவிட்ட கோபத்தில்
ஏறக்குறைய நாற்பது நாட்கள்
என்னோடு நீ
பேசாமல் இருந்தாய்.

ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன்
மறுபடியும் புதிதாய் நான்.

9) கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும்.

10) தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது.

தாய்மைக்கான
விதை
நட்பில் இருக்கிறது.

11) என் துணைவியும்
உன் துணைவனும்
கேட்கும்படி
நம் பழைய
மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு மழை தொடங்கும்
நாள் வேண்டும்.

12) அந்த விளையாட்டுப்
போட்டியைப் பார்க்க
நாம்ஒன்றாகச் சென்றோம்.

இரசிக்கையில்
இரண்டானோம்.

திரும்பினோம்
மறுபடியும்
ஒன்றாகவே.

நட்புக்காலம் 1

ஈராயிரமாவது ஆண்டின் நடுப்பகுதி.
கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிப் புறப்பட்டேன்.

மாநகரத்தின் மகா நெரிசலுக்குள் மூச்சுத் திணறி மனம் நொந்த வேளை.

"அறிவுமதியின் கவிதைகள்" கண்ணில் பட்டது.
வாசிக்க வாசிக்க என்னை யோசிக்க வைத்தது.
பின்னர் படிப்படியாய் அவரை நேசிக்க வைத்தது.

கிராமமா? நகரமா? என்று பகுத்துணர முடியாத ஊரில் பிறந்து வளர்ந்தவன். அம்மா,அக்கா, அண்ணி இவர்களை விட்டால் பெண் சினேகிதம் என்பதை மருந்துக்குக் கூட எண்ணிப் பார்க்க முடியாது என்னால் அப்போது?

மாநகர வாழ்க்கையில், கூட்டுப் புழுக்களாய் இருந்தவை எல்லாம் ஒரே நேரத்தில் வண்ணத்துப் பூச்சிகளாய் உருமாறி வண்ணக் கனவுகளை விதைத்தன என் மனதில்.

கனவுகள் கரை சேர்க்குமா? காலை வாரி விடுமா? பகுத்துணரத் தெரியவில்லை அப்போது?

புத்தனுக்கொரு போதி மரம். எனக்கொரு மெரினா கடற்கரை.

வேடிக்கை பார்க்கப் போவது எனக்குள் உற்சாக ஊற்றைப் பிரவகிக்கச் செய்யும்.

துள்ளி எழும் துளி நீர் மெள்ள அடங்கிய பிறகு மனசு ஆழ்கடல் போல் அமைதி கொள்ளும்.

இமைகளும் இதயமும் ஒருமித்த அலைவரிசையில் சஞ்சரிக்கும் வேளையில் கையிலிருக்கும் நட்புக்காலத்தை விரிப்பேன்.

அண்ணன் அறிவுமதி என் தோள்களின் இருமருங்கிலும் புதிய இறக்கைகளைப் பூட்டி விடுவார்.

அப்புறமென்ன எனக்கே எனக்கான வானில் தனியனாய்ச் சுற்றித் திரிவேன்.

நட்பின் குறுக்கு வெட்டு, நெடுக்கு வெட்டுத் தோற்றங்களை ஆழமாய் அழகாய் அள்ளித் தந்திருப்பார் நட்புக்காலத்தில் அறிவுமதி. என்னைப் பக்குவப்படுத்திய புத்தன் அவர் தான்.

இதோ நட்புக்காலம்.

உங்கள் பார்வைக்கு.....

1) உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வரிகள்
தேடித்தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என் கவிதை.

2) நீ வயசுக்கு
வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள் நீ.

3) உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகு தான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும் பூக்களின்
மௌனத்திலும்
இசை கேட்க
ஆரம்பித்தேன்
நான்.

4) கண்களை
வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்.

கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப் போல்
கண்கள் தருகிறவள் தான்
தோழியாகிறாள்.

5) எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்.

உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்.

அதனால் தான்
நட்பு
நம்மைத்
தேர்ந்தெடுத்திருக்கிறது.

6) ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான்
சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே
படுத்துத் தூங்கிவிட்டும்
போயிருக்கிறாய்
என்பதைச்
சொல்லிப் பரிகசித்தன
என் தலையணையில்
சில மல்லிகைகள்.

Wednesday, February 14, 2007

இரு (ம)ரணங்கள் :( :( :(

இரு மரணங்கள்அண்மையில் என்னை உலுக்கியெடுத்த மரணங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். அதில் தொடர்புடைய இருவருடனும் எனக்கு நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ எந்தத் தொடர்பும் இல்லை. நண்பர்கள் வழியாகவும், இணையத்தில் மூலமாகவும் என் இதயத்துக்குள் வந்தவர்கள் அவர்கள்.

முதலில் தேனீ ஒருங்குறி வடிவமைத்த உமர் தம்பி காக்கா....

1953 ஜுன் 15 ல் இம் மண்ணில் பிறந்து, 2006 ஜுலை 12 வரை வாழ்ந்து மறைந்தவர். சொந்த ஊர் அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டம். அங்குள்ள காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். பல்வேறு பணிகளைத் திறம்படச் செய்து இறுதியில், இணையத்தில் தமிழை இடம் பெறச் செய்வதற்கு மனப்பூர்வமாகத் தொண்டாற்றியுள்ளார். அவர் பற்றிய முழுமையான தகவல்களுக்கு....

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%...AE%AA%E0%AE%BF

அடுத்து சாகரன் என்ற கல்யாண்....

1975, ஜுலை 22 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரியில் பிறந்தவர். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சவூதி அரபியாவில் பணியாற்றினார். இணையத்தில் தமிழைப் பரப்புவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்ட பெருமகனார். சென்ற 2007 பிப்ரவரி 11 அன்று காலமானார். அவர் பற்றிய தகவல்களுக்கு....

http://www.muthamilmantram.com/showthread.php?t=18585http://www.muthamilmantram.com/showthread.php?t=18596http://icarusprakash.wordpress.com/2007/02/11/shockinghttp://pithatralgal.blogspot.com/2007/02/192.htmlhttp://valai.blogspirit.com/archive/...11/kalyan.htmlhttp://blog.thamizmanam.com/archives/84http://thulasidhalam.blogspot.com/20...g-post_12.htmlhttp://muthamilmantram.blogspot.com/...blog-post.htmlhttp://theyn.blogspot.com/2007/02/blog-post_8610.htmlhttp://balabharathi.blogspot.com/200...g-post_12.htmlhttp://masivakumar.blogspot.com/2007...g-post_12.htmlhttp://wethepeopleindia.blogspot.com...post_8206.htmlhttp://poonspakkangkal.blogspot.com/...g-post_12.htmlhttp://techtamil.blogspot.com/2007/02/blog-post.htmlhttp://vicky.in/dhandora/?p=305http://surveysan.blogspot.com/2007/0...post_4044.htmlhttp://muthukumaran1980.blogspot.com...g-post_12.htmlhttp://kuzhali.blogspot.com/2007/02/blog-post_12.htmlhttp://paransothi.blogspot.com/2007/...g-post_12.html

பிப்ரவரி 11 திங்கள் காலை அலுவலகம் புறப்பட்டு பேருந்துக்காகக் காத்திருந்த வேளை முத்தமிழ் மன்றத்தின் சுதாகர் அண்ணா அலைபேசியில் அழைத்து விவரம் சொன்னார். செய்தி கேட்டதுமே மாளாத் துயரம் இதயத்தில் மண்டியது. யாரோ முகம் தெரியாத சாகரனுக்காக ஏன் என் மனம் இப்படி அடித்துக் கொள்கிறது? விளங்கவில்லை. அன்பர் உமர் தம்பியின் மரணச் செய்தி கேட்ட கணமும் என் மனநிலை அப்படித்தான் இருந்தது.

அவர்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது. இணையத்தமிழ் எங்களை இணைத்து வைத்திருக்கிறது. அது தான் இணையத்தின் சக்தி. நெருக்கமானவர்களோடு நம் தாய்மொழியில் கருத்துப் பரிமாற அவர்களும் துணை நின்றிருக்கிறார்கள் என்ற ஆதாயம் ஒன்றைத் தவிர அவர்களுக்கும் எனக்கும் உறவொன்றுமில்லை.உமர் தம்பியின் மறைவு ஏற்படுத்திய காயமே இன்னும் மறையாத நிலையில், சாகரனின் இழப்பு தமிழ் இணைய ஆர்வலர்கள் மத்தியில் மாறாத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது.

மிக இளம் வயதில் ஏற்பட்டுள்ள அந்த இருவரின் மரணங்களும் பல கேள்விகளை முன் வைக்கிறது. இணையத்தில் தமிழ் பரப்ப ஆர்வம் கொண்ட அனைவரும் தங்கள் அலுவலக நேரம் போக மீதமுள்ள ஓய்வு நேரத்தில் தான் கணிணியில் காலம் கழிக்கின்றனர். அது அவர்களுடைய மனதில் கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதோ என்ற எண்ணத்தைப் புறந்தள்ள முடியவில்லை.

இணைய வெளியில் உலவும் போது, முகம் தெரியாத நிலையில், சம சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு படிப்படியாய் தங்கள் எண்ணப் பரிமாற்றங்களால் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் வகையில் கைகோர்க்கிறார்கள். பணிச்சூழல் காரணமாக உறவுகள், நண்பர்கள் யாவரையும் விட்டு வெகுதூரம் அயல் தேசத்தில் விலகி நின்றாலும், இணையம் தான் முகமறியாத புது உறவுகளைத் தருகின்றது. அதன் விளைவு தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை எடுக்காமல் வழக்கம்போலவே உரையாடுவதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

ரியாதில் சாகரன் உறுப்பினராக உள்ள மன்றம்(தஃபர்ரக்) தான் நமது அன்பு அறிவிப்பாளர். திரு.பி.ஹெச். அப்துல் ஹமீது. திரு.அப்துல் ஜப்பார் ஆகியோரை சவூதி அரபியாவுக்கு அழைத்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் நடித்த ஆக்ராவின் கண்ணீர் என்ற ஒலிநாடகம் ரியாதில் அரங்கேறியது. அதில் பங்கேற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் திரு.அப்துல் ஜப்பார் சாகரன் பற்றிய தன் நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

நாடகத்தில் என்னுடைய உணர்ச்சிகரமான நடிப்பை அனைவரும் ரசித்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் என்னிடம் வந்து பேசிய சாகரன், அய்யா, உங்கள் வயதுக்கு நீங்கள் இவ்வளவு உணர்ச்சிப் பெருக்கு காட்டக்கூடாது. அது நடிப்பாக இருந்தாலும் சரி. உங்கள் உடல்நலனிலும் அக்கறை செலுத்துங்கள் என்றார். பாவம், சாகரன் தன் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள மறந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று சொன்னார் திரு.அப்துல் ஜப்பார்.

யாரைச் சந்தித்தாலும் தங்களைப் பற்றிய அழுத்தமான தடங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் சாகரனும், உமர்தம்பியும். அதற்கு அவர்களைப் பற்றிய இணையப் பதிவுகளே சாட்சி. அவர்கள் மறைந்தாலும் இணையக் கடலில் அவர்கள் விட்டுச் சென்ற அலை நம் இதயக் கரைகளை என்றென்றும் தொட்டுச் செல்லும்.......

Tuesday, February 13, 2007

அன்பின் உறவுகளுக்கு....

அன்பின் உறவுகளுக்கு,

நலம்.
அதுவே நாளும்
நானிலத்தைச் சூழட்டும்.

இணையம் எனும் கடலில்
நம் இதயங்கள் சங்கமம்.

நல்லதை எடுத்து
அல்லதை விடுத்து
வல்லதைத் தெரிந்து
வையத்தில் வாழ்வாங்கு வாழ

எல்லோருக்கும் பொதுவான
இறைவன் அருள் செய்யட்டும்.