Tuesday, February 23, 2010

ஆ!..தங்கம்? - 2



ஆபரணங்களின் அழகு பெண்கள் அவற்றை அணிவதில் தான். ஆண்கள் அவர்களோடு எதிலும் போட்டி போடலாம். ஆனால் நகை அணிவதில் பெண்களுக்குத் தான் முதலிடம். ஆங்காங்கே சில ஆண்கள் நகைகள் அணிந்து கொள்ள ஆசைப்படலாம். சிங்கப்பூர் மாதிரியான வாழ்க்கைச் சூழலில் பெரும்பாலான ஆண்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை வெளிக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் சிலரின் பார்வை பிளாட்டினத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது.

தங்க நகை வாங்கினால் பயன்படுத்தலாம். அவசரம் வந்தால் விற்றுக் காசாக்கலாம். தங்கம் இருக்கும் வரை கையிருப்புக்குக் காவலுண்டு என்பது மூத்த தலைமுறையின் மனக் கணக்கு. ஆனால் இளைய தலைமுறையினர் தங்கம் வாங்குவதிலும், அணிவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது மூத்த தலைமுறையின் அங்கலாய்ப்பு.

எளிமையான வடிவங்கள், அணியும் உடைகளுக்கேற்ற வண்ணங்கள், குறைந்த செலவில் பளிச்சென்று அடையாளம் காட்டும் தன்மை. தங்கம் விற்கும் விலையில் மாற்று ஆபரங்ணகளைத் தேடியாக வேண்டிய கட்டாயம். இப்படிப் பல காரணங்களால் இளம் பெண்களை ஈர்த்திருக்கின்றன கவரிங் நகைகள். அது மட்டுமல்ல குறைந்த விலை. மின்னும் தன்மை மங்கும் பட்சத்தில் மீண்டும் முலாம் பூசும் வசதி. இரவு, பகல் எங்கு சென்றாலும் கழுத்தில் கிடப்பதைப் பற்றிக் கவலையில்லை. வழியில் யாரும் மிரட்டினால் கூடக் கழட்டிக் கையில் கொடுத்து விடலாம் என்பது இளையர்கள் சொல்லும் சங்கதி.



தங்க நகைகளில் பல வகையுண்டு. 18,21,22 மற்றும் 24 கேரட் என்று பல அளவுகளில் தங்கம் கிடைக்கிறது. அவற்றுக்கேற்றவாறு விலையிலும் வித்தியாசம் உண்டு. ஆனால் இந்தியச் சமூகம் பெரும்பாலும் விரும்புவது 22 கேரட். அண்மைய காலங்களில் 916 தங்கத்துக்குக் கூடுதல் வரவேற்பு.

சொக்கத் தங்கம் என்பது 24 கேரட். அதில் எந்தக் கலப்படமும் இருக்காது. 916 என்பது 91.6 விழுக்காடு தங்கம். 8.4 விழுக்காடு மற்ற உலோகங்கள். உதாரணமாக செம்பு, வெள்ளி ஆகியன கலக்கப்பட்டிருக்கலாம். 21, 18 கேரட் இப்படின்னு குறையக் குறைய அந்த தங்க நகையோட மதிப்புக் குறையுது மற்ற உலோகங்கள் கூடுது.

பத்தர்களிடம் சென்று பிடித்தமான வடிவமைப்பைச் செய்து வாங்கியது ஒரு காலம். இன்று இயந்திரங்களில் வார்க்கப்பட்ட நகைகள் சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பிட்ட நேரத்துக்குள் பார்க்க வேண்டியதைப் பார்த்துச் சலித்து, எடுக்க வேண்டியதை எடுத்துக் கட்டிக் கொண்டு வருமளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. இருப்பினும் கைவேலைப்பாட்டின் அருமை தெரிந்தவர்கள் இன்னும் பத்தர்களை மறக்கவில்லை.



ஒரு சிற்பி சிலையை வடித்தெடுப்பது போல பத்தர்கள் நகைகளை வடிவமைத்துக் கொடுப்பர். அதன் மகிமையை உணர்ந்தவர்கள் கைவேலைப்பாடுள்ள நகைகளை விட்டுத் தூரப் போவதில்லை. செய்கூலி அதிகம் கொடுத்தாலும் அவர்கள் என்றென்றும் விரும்புவது கைவேலைப்பாடுள்ள நகைகளைத் தான்.

பொதுமக்கள் தங்கம் வாங்குவது ஒரு புறமிருக்க மிகப் பெரிய நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை இல்லாத வகையில் புதிதாகப் பல நாடுகளிலும் தங்கம் மின்னத் தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பொருளியலில் ஏற்பட்ட ஆட்டம் அதற்கு முக்கியக் காரணம். பல நாடுகள் - குறிப்பாக சீனா, ஜப்பான் போன்றவை இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவை நம்ப முடியும் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டன.
பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைச் சீனா ஊக்குவித்து வருகிறது. அங்குள்ள மக்கள் கடந்த ஆண்டில் மட்டும் 70 டன்னுக்கும் அதிகமாகத் தங்க நகை அணியத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. அனைத்துலக பண நிதியம் தன்னிடமுள்ள 400 டன் தங்கத்தை விற்கப் போவதாக சென்ற ஆண்டு இறுதியில் அறிவித்தது. உடனே அதில் 200 டன் தங்கத்தை வாங்கிக் கொண்டது இந்தியா.

இந்தியா தன் வசமுள்ள தங்கத்தை ஏலத்தில் விற்ற காலம் ஒன்று இருந்தது. இப்போது அதன் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. எனவே தங்கத்தைக் கொள்முதல் செயவதில் இந்தியா ஆர்வம் காட்டுகிறது. அப்படி இந்தியா வாங்கும் தங்கத்தைப் பின்னாளில் வேறெங்கோ சென்று விற்க வேண்டிய அவசியமில்லை. அங்கிருக்கும் மக்களிடம் விற்றாலே கணிசமான இலாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்பது இந்திய அரசுக்குத் தெரிந்த சூட்சுமம். எனவே இனியும் தங்கம் விற்பனைக்கு வந்தாலும் அதை வாங்கிக் கொள்ள இந்தியா தயக்கம் காட்டாது.

ரஷ்யாவும் தனது அணுகுமுறையை மாற்றி கொண்டு வருகிறது. தன் கையிருப்புச் சொத்துகளில் 2 சதவீதத்தை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்திருந்த ரஷ்யா அதை 10 சதவீதமாக மாற்றும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. 55 விழுக்காட்டுச் சொத்துக்களை ஏற்கெனவே தங்கமாக மாற்றிக் கொண்டுள்ள ஐரோப்பிய வங்கிகளும் இன்றைய தங்கச் சந்தையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். எனவே தங்கத்தின் விலை இன்னும் அதிகமாகலாம் என்பது இப்போதைய கணிப்பு. இதற்கெதிரான கருத்துச் சொல்பவர்களும் உண்டு.

1980களில் அனைத்துலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் தங்கம் 800 டாலர் வரை விற்கப்பட்டது. அப்போது சந்தையில் மற்ற பொருட்கள் விற்ற விலை போல இன்று 3 மடங்கு விற்கிறது. ஆனால் தங்கத்தின் விலை 25 முதல் 30 விழுக்காடு வரையே உயர்ந்திருக்கிறது. எனவே விரைவில் தங்கத்தின் விலை குறையும் என்று நம்பிக்கையூட்டுபவர்களும் உண்டு.
ஓர் அவுன்ஸ் தங்கம் 500 டாலர் முதல் 600 இருந்த காலகட்டத்தில் நிறையப் பேர் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து தங்களிடமுள்ள தங்கத்தை விற்க ஆரம்பித்தால் 40 முதல் 50 விழுக்காடு வரை விலை குறையும் வாய்ப்பு உண்டு என்று சிலர் கணக்குப் போடுகின்றனர். வேறு பல முதலீடுகளில் பெரிய மாற்றம் வந்து தங்கத்தை விற்று அவற்றில் முதலீடு செய்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றாத வரை தங்கத்தின் விலை இப்படியே தான் தொடரும்.

(இன்னும் மின்னும்)

No comments:

Post a Comment