Tuesday, February 23, 2010

ஆ!..தங்கம்? - 1



தங்கம் என்ற சொல்லைக் கேட்டாலே தலை கிறுகிறுக்கிறது சில பேருக்கு. காரணம் - அதன் விலையேற்றம். சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது தங்கத்தின் விலை மளமளவென்று ஏறி விட்டது. ஒரு கிராம் தங்கம் முதல் நாள் ஒரு வெள்ளி குறையும். அதுவே மறுநாள் இரண்டு அல்லது மூன்று வெள்ளி கூடும். இப்படி நிலையில்லாத விலை ஏற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

முன்பு, இரான் - இராக் இடையே நடந்த போர் காரணமாக தங்கம் விலை வேகமாக உயர்ந்தது. பின்னர் அது ஓரளவு இறங்கியது. ஆனால் இப்போதுள்ள சூழலில் சொத்துச் சந்தை, பங்குச் சந்தை போன்ற வர்த்தகங்களில் நல்ல முன்னேற்றம். இதனால் தங்கம் விலை கூடிக்கொண்டே போகிறது. நான்காண்டுகளுக்கு முன்பு ஓர் அவுன்ஸ் தங்கம் 250 முதல் 300 அமெரிக்க டாலர் வரை விற்கப்பட்டது. அதுவே இன்றைக்கு சுமார் மூன்று மடங்கு உயர்ந்து 1100 முதல் 1150 அமெரிக்க டாலர் வரை ஏறியிருக்கிறது. அதனால் யாராலும் எந்த விதத்திலும் முன்னுரைப்புச் செய்ய முடியவில்லை.

இருப்பினும் மக்களிடம் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்துக்குக் குறைவில்லை. அன்றாட அலுவலுக்கு மத்தியில் தங்கத்தின் விலையையும் கொஞ்சம் உற்றுக் கவனிக்கிறார்கள். தருணம் வாய்க்கும் போது தவறாமல் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். காரணம் தங்கத்தில் போடும் பணம் எப்போதும் வீண் போகாது என்ற நம்பிக்கை. எப்படியும் அது ஒரு சேமிப்பு. கையில் இருந்தால் காசு செலவாகி விடும் எனவே தங்கத்தில் முதலீடு செய்து கொள்வோம் என்பது அவர்களின் கணிப்பு. எல்லாவற்றையும் தாண்டி நம் இந்தியக் கலாசாரத்தோடு இசைந்து வரும் ஆபரணம். அதை அணிந்து கொள்வதன் மூலம் ஒருவரின் கௌரவமும், அந்ததும் மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தணியாத வேட்கை தொடர்கிறது.

மக்களிடம் தங்கத்துக்கான தேவை அதிகரித்து வரும் அதே வேளை அதன் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா என உலகம் முழுக்கச் சுமார் 25 தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் அவற்றில் இருந்து பெருமளவு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. எனவே அவற்றில் இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இப்போதுள்ள நிலையில் சுமார் 15 சுரங்கங்களில் இருந்து ஆண்டொன்றுக்கு 2500 டன் தங்கம் கிடைக்கிறது. ஆனால் தேவையின் மதிப்பு ஆண்டொன்றுக்கு 2800 டன்.

அமெரிக்காவுக்கும் தங்க விலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளியல் சுனாமி அந்நாட்டுப் பணத்தின் மீதான நம்பிக்கைக்கு பெரும் வேட்டு வைத்தது. அமெரிக்க டாலரின் மதிப்புப் படிப்படியாகக் குறைந்தது. எனவே உலக மக்கள் அந்தப் பணத்தைக் கையில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தங்களிடம் உள்ள டாலைரை விற்று விட்டு அவற்றைத் தங்கமாக உருமாற்றத் தொடங்கினர். ஆனால், அமெரிக்க டாலருக்கும் தங்கத்தின் விலையேற்றத்துக்கும் ஒரு காலத்தில் தொடர்பு இருந்தது. அந்த நிலை இன்று மாறிவிட்டது. வளரும் நாடுகளின் பொருளியலை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் சந்தையின் போக்கு அமைகிறது என்று கூறுவோரும் உண்டு.

ஒரு காலத்தில் அமெரிக்க டாலருடன் பின்னிப் பிணைந்திருந்த தங்கம் இப்போது தனித்துப் போய் விட்டது. அது எந்த நாட்டின் நாணயத்தோடும் இணைந்து செல்லும் சூழல் இப்போதைய சந்தையில் இல்லை. தங்கத்தை அதிகம் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா. காரணம் அங்குள்ள மக்கள் தொகை. அப்படியானால் இந்திய ரூபாய்க்கு எதிராகத் தான் தங்கத்தை மதிப்பிட வேண்டும் என்பது அவர்களின் வாதம்.

(இன்னும் மின்னும்)

No comments:

Post a Comment