Tuesday, February 23, 2010

ஆ!..தங்கம்? - 3




சிங்கப்பூரில் உள்ள 33 நகைக்கடைகளில் அண்மையில்(ஜனவரி 10) சோதனை நடத்தியது சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம். எதேச்சை முறையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது சங்க உறுப்பினர்களே வாடிக்கையாளராகப் போய் நகைகளை வாங்கி வந்து ஆய்வுக்கு உட்படுத்தினர். சில கடைகளில் 916 என்று விற்கப்பட்ட நகைகளில் சரியான விகிதத்தில் தங்கம் கலக்கப்படவில்லை என்பது தெளிவாயிற்று. இனி தரம் குறைந்த நகைகளை விற்ற கடைகளை சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் வர்த்தக, தொழில் துறை அமைச்சுக் அடையாளம் காட்டும். முதல் தடவை அந்தத் தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டம் விதிக்கப்படலாம். அதுவே வாடிக்கையாகி இருந்தால் அவர்களுடைய விற்பனை உரிமம் ரத்துச் செய்யப்படலாம்.

பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வை சிங்கப்பூர் நகைக்கடைக்காரர்கள் சங்கம் கடுமையாகச் சாடியது. தற்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான நகைகள் இயந்திரங்களால் வடிவமைக்கப்படுபவை. அவற்றில் சிற்சில இடங்களில் கூடுதல், குறைவு இருப்பது இயற்கை தான். அதற்காக ஒட்டுமொத்த நகைகளும் கலப்படம் என்று சொல்வது சரியல்ல என்பது அவர்களின் வாதம்.

முழுமையாக இயந்திரங்களால் வடிவமைக்கப்படும் நகைகளில் வள்ளிபுள்ளி மாறாமல் 91.6 தரம் இருக்கும். மற்றபடி ஒவ்வொரு பகுதி பகுதியாக இணைத்துச் செய்ய வேண்டிய நகைகளில் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சற்று கூடுதல் குறைவு இருக்கலாம். காரணம் அந்த இணைப்புக்காக கேடியம் பயன்படுத்தப்படும். அந்த இடங்களில் 91.6 அப்படின்றது 91.5 இருக்கலாம் அல்லது 91.4 இருக்கலாம். அதே நேரத்துல அடுத்த பகுதியில் 91.8 இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனாலும் ஒட்டுமொத்த அளவில் அது 91.6 நகையாகவே மதிப்பிடப்படும் என்பது நகைக்கடைக்காரர்கள் சொல்லும் விளக்கம்.

சிங்கப்பூரில் விற்கப்படும் நகைகளுக்குத் தரக்கட்டுப்பாடு முக்கியம். சில கடைக்காரர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. எனவே தான் இது போன்ற சோதனைகளில் அவர்களுக்கு வேதனை வருகிறது. முறையான தரக்கட்டுப்பாடு இருந்தால் தேவையற்ற மன சஞ்சலங்களைக் குறைக்கலாம்.

ஒரு கடை நடத்தும் போது யாரிடம் வேண்டுமானாலும் தங்கத்தைக் கொள்முதல் செய்யலாம். ஆனால் அவற்றை முறையாகச் சிங்கப்பூர் தரக்கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பி சோதனையிட்டால் அவர்கள் ஒரு முத்திரையிட்டு அனுப்புவார்கள். அதை நிறைய நகைக்கடைக்காரர்கள் செய்யத் தவறுகின்றனர் என்பது வேதனைக்குரிய உண்மை.

சாமானிய மக்கள் கூட இன்று தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களில் அதிகமானோர் ஆபரணத் தங்கத்தையே பெரிய முதலீடாகக் கருதுகின்றனர். அவர்களின் அந்த அணுகுமுறை சரியா?

தங்க பார்களாக வாங்கினால் அது புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று சொல்ல முடியும். ஆபரண நகையாக வாங்கி வைத்துக் கொண்டு மீண்டும் விற்கும் போது பல விதமான கழிவுகள் இருக்கு. ஒரு வங்கியில் கணக்கைத் தொடங்கித் தங்க பார்களாகக் கொள்முதல் செய்வதில் அதிக இலாபத்தை எதிர்பார்க்கலாம் என்பது விபரம் அறிந்தவர்கள் சொல்லும் ஆலோசனை.



ஒரு வங்கிக்குச் சென்று நகை வாங்கி, விற்பது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. எனவே ஆபரணத் தங்கத்திலேயே முதலீடு செய்வது நம்மில் பலருக்கும் வசதி. இருப்பினும் நகைகளை வாங்குவதற்கு முன் கூடுதல் கவனம் அவசியம்.

ஒரு கடைக்குச் சென்று நகைகளைப் பார்த்து அவை நமக்குப் பிடித்த பிறகு எடை போட வேண்டும். அப்போது அந்த நகையில் இருக்கும் எடை அட்டையை நீக்கி விட்டுத் தான் அந்த எடை போடப்பட வேண்டும். அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள எடையும், நிறுவையில் இருப்பதும் சரியான அளவுடையவையா? என்பதைச் சோதித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு நகையைத் திருப்பிப் பார்த்தால் அந்தக் கொக்கி அல்லது மோதிரத்துக்குப் பின்னேயோ பார்த்தீங்கன்னா ஒரு முத்திரை இருக்கும். அந்த முத்திரை தான் சிங்கப்பூர் தரக்கட்டுப்பாடு வாரியத்தின் (எஸ்ஸே) முத்திரை. அது இருந்தால் நீங்கள் தாராளமாக வாங்கலாம். எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதாவது நிச்சயமாக என்ன சொல்றாங்களோ அந்த மதிப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.

தங்க நகை வாங்கிய பிறகு கொடுக்கப்படும் விலைப்பட்டியலில் முறையான தகவல்கள் இருக்கின்றனவா என்பதையும் சோதித்துக் கொள்ள வேண்டும். கணிணி மயமாக்கப்படாத சில கடைகளின் விலைப்பட்டியலில் போதுமான விளக்கங்கள் இருக்காது. எனவே கவனமாக நடந்து கொண்டால் முதலுக்கு மோசமில்லை.

இப்படிப் பார்த்துப் பார்த்து வாங்கிய நகைகளில் கூட சில நேரங்களில் குறை வர வாய்ப்புண்டு. அது போன்ற தருணங்களில் நம் சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தையும் நாடலாம். www.case.org.sg என்ற இணையப் பக்கத்தில் அது பற்றிய தகவல்களைக் காணலாம்.

சிங்கப்பூரில் விற்கப்படும் நகைகளுக்குச் சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு வர்த்தகர்களுக்கு இருக்கிறது. அதை அவர்கள் புரிந்து கொண்டால் வாடிக்கையாளர்களுக்கும் தரமான நகைகள் கிடைக்கும். வர்த்தகர்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

தங்க நகைகளில் கலப்படம் என்பதை வாடிக்கையாளர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் நம்பிக்கை தான் வர்த்தகத்துக்கு ஆதாரம். அதற்கு எந்தச் சேதாரமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வர்த்தகர்களின் கடமை. அதைப் புரிந்து கொள்ளும் போது வாங்கும் நகைகளில் கூடுதல் பொலிவு இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

(நிறைவு)

2 comments:

  1. உபயோகமான பகிர்வு. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. //உபயோகமான பகிர்வு. மிக்க நன்றி.
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர்.

    ReplyDelete