Tuesday, April 20, 2010

தூக்கம் விற்ற காசுகள்.

ஒரு கவிதையால் என்ன செய்ய முடியும்?
நண்பன் என்னிடம் கேட்டான்.

ஒரு கவிதை என்ன செய்ய முடியாது?
திருப்பிக் கேட்டேன் நண்பனிடம்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவிதை மின்னஞ்சலில் வந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தயக்கமின்றி வாசிக்கத் தொடங்கினேன். முதல் இரண்டு வரிகளே, இனிவரும் வார்த்தைகள் அடர்த்தியான அர்த்தம் பொதிந்தவை என்று உணர்த்தின. முழுக்க வாசித்து முடித்ததும் ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது என்னால். காரணம், அப்போது எனக்கு வெளிநாட்டு வாழ்க்கையனுபவம் இல்லை. ஆனால் நண்பர்கள் பலருக்கு அந்த அனுபவம் உண்டு. அவர்களின் கோணத்தில் என்னைப் பொருத்திப் பார்த்த போது கவிதையின் பொருள் புதிதாய் விளங்கியது.

அதன் பிறகு 2006 ல் சிங்கப்பூர் வந்தாயிற்று. அப்போது மீண்டும் மின்னஞ்சலில் வந்தது அந்தக் கவிதை. தலைப்பு “தூக்கம் விற்ற காசுகள்”. எழுதியவர் நண்பர் ரசிகவ் கே. ஞானியர். அந்தச் சூழலில் சுவிசில் உள்ள நண்பரொருவர் தம்முடைய வானொலிக்காகக் கவிதை வாசித்துக் கேட்டார். அப்போது சட்டென நினைவுக்கு வந்தது “தூக்கம் விற்ற காசுகள்” தான். காரணம், யார், எப்போது வாசித்தாலும் அந்தக் கவிதையின் பொருள் விரிவடைந்து கொண்டே போகும். வாசிப்பவர்களை ஒரு கணம் யோசிக்க வைக்கும் தன்மை கொண்ட காத்திரமான எழுத்துக்கள் அவை. மெல்லிசையோடு அந்தக் கவிதையை ஒலிப்பதிவு செய்து அது சுவிஸ் வானொலியிலும் ஒலிபரப்பானது. அதன் பிறகு யாரோ ஒரு நல்ல நண்பர் வழியே அது இணையத்தில் வலம் வரத் தொடங்கியது. துபாய் மட்டுமல்ல, சவூதி அரேபியா, தமிழகம் என்று தமிழர்கள் வசிக்கும் அத்தனை பகுதிகளிலும் அந்தக் கவிதைக்கும் பெரும் வரவேற்பு. நண்பர்கள் மூலமாக அந்தச் செய்தியைக் கேட்கும் கணந்தோறும் கவிதையை யாத்த நண்பர் ரசிகவ். கே. ஞானியாருக்குத் தான் மானசீகமாக நன்றி சொல்வேன்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நானும், நண்பர் ஞானியாரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை. ஓரிருமுறை கூகிளில் வார்த்தையாடியதோடு சரி. இப்போது சொல்லுங்கள். ஒரு கவிதையால் என்ன செய்ய முடியும்?

இதோ அந்தக் கவிதை...

தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ். கே. ஞானியார்.

இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால்
வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!


எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு
விமானப்பயணத்தினூடே விற்றுவிட்டு

கனவுகள் புதைந்து விடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மர உச்சியில் நின்று
ஒரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!

வார விடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!

இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த
உள்ளூர் உலகக் கோப்பை கிரிக்கெட் !

இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !

கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக் கூறி
வறட்டுப் பிடிவாதங்கள் !

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

மறுவீட்டுச் சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தினூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு
கடலைத்தாண்டிய கண்ணீரிலேயே...
கரைந்துவிடுகிறார்கள்;!

"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின்
திடீர்மறைவு ...

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

கவிதையின் ஒலி(ளி)வடிவம் இங்கே...

No comments:

Post a Comment