Friday, February 18, 2011

ஹோஸ்னி முபாரக் யார்?



எகிப்தின் நைல் நதிக்கரையில் உள்ள Menoufia மாநிலத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்தார் முபாரக். ஆயுதப் படையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

1975ல், அப்போதைய அதிபர் அன்வர் ஸாதாத்தின் நம்பிக்கைக்கு உரிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

1981ல், இராணுவ அணிவகுப்பில் நடந்த திட்டமிட்ட தாக்குதலில் அன்வர் ஸாதாத் படுகொலை செய்யப்பட்டார். அருகிலிருந்த முபாரக், காயமின்றித் தப்பினார். இதன் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம்கூட அப்போது எழுந்தது. அந்தச் சம்பவம் நிகழ்ந்த ஏழு நாட்களில் முபாரக் அதிபராக அறிவிக்கப்பட்டார்.

இஸ்ரேலுடன் அமைதி, வாஷிங்டனுடன் ஒத்துழைப்பு, பணக்கார வர்க்கத்தின் உருவாக்கம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நசுக்குதல் போன்ற அன்வர் ஸாதாத்தின் கொள்கைகளையே முபாரக்கும் அடியொற்றித் தொடர்ந்தார். காலப்போக்கில் அவருடைய ஆட்சிமுறையில் மாற்றம் தென்படத் தொடங்கியது.

உலகின் வெளிப்படையான பொருளியல், அரசியல் கொள்கைகளுடன் முபாரக்கின் ஆட்சிமுறை பொருந்தவில்லை. வட்டாரத்தின் செல்வாக்கைப் பெற்றவர்... அனைத்துலக அரங்கில் அனைவருக்கும் பழக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டவர். மத்தியக் கிழக்கு அமைதி முயற்சியில் அதிகம் பங்காற்றியவர். எனினும் இஸ்லாமிய எதிர்த்தரப்பினரை அவர் கையாண்ட விதம் அதிருப்தியை அளித்தது.

பழைய அதிபர் அன்வர் ஸாதாத்துக்கு நேர்ந்த கதி இவருக்கும் நேரவிருந்தது. 1995ம் ஆண்டில் எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் முபாரக் மீது படுகொலை முயற்சி நடந்தது. அவருடைய கார் தீவிரவாதிகளின் குண்டுகளால் துளைக்கப்பட்டது. நூலிழையின் உயிர் பிழைத்தார் முபாரக்.

இஸ்லாமிய எதிர்த்தரப்பினர் மட்டுமல்ல, உள்நாட்டு மக்களின் வெறுப்பையும் முபாரக் சம்பாதித்தார். ஜோர்தான், சிரியா போன்ற நாடுகளில், தலைவர்களின் இடத்தை அவர்களுடைய புதல்வர்கள் நிரப்பியதுபோல் எகிப்திலும் நேர்ந்துவிடும் என்று மக்கள் அஞ்சினர். அந்த அச்சத்திற்குக் காரணம் இருந்தது. எகிப்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, துணையதிபர் நியமிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் முபாரக் நியமிக்கவில்லை.

நாட்டின் முன்னேற்றத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை என்பது மக்களின் இன்னொரு குறை. இந்தக் குமுறல்களை முபாரக் கண்டு கொள்ளவேயில்லை.

காலம் செல்லச் செல்ல நிலைமை மாறத் தொடங்கியது. 2004, 05 ஆம் ஆண்டுகளில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கத் தொடங்கின.

2005ல் நாட்டில் முதன்முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. பெயருக்குத்தான் அது தேர்தல். முடிவு அனைவருக்கும் தெரிந்ததாக இருந்தது. தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த இரண்டு பிரபலமான வேட்பாளர்களைச் சிறையில் அடைத்தார் முபாரக். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாம் தவணையாக அதிபர் பொறுப்பை ஏற்றார்.

அரபு உலகில், அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக எகிப்து விளங்குவதைத் உறுதிப்படுத்திக்கொண்டார் முபாரக். எனினும் அவருடைய ஜனநாயக அடக்குமுறைகள் அமெரிக்காவுக்கு அதிருப்தியளிக்கத் தொடங்கின. ஊழல், அதிகாரம், வறுமை, வேலையின்மை போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளால், செல்வாக்கை இழந்தார் முபாரக். ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அவர் கொடுத்த வாக்குறுதிகள் நீர் மேல் எழுத்துக்களாயின. விளைவு, இப்போது மக்களாட்சிக்கான விடியல்.

No comments:

Post a Comment