Monday, October 24, 2011

பயணம்.




 ஞானத் தேடலில்
எடுத்து வைக்கும்
முதல் அடி.

 பிரியமுள்ளவர்களைப்
பிரிந்து பின்
சேருவதை உணர்த்தும்
பால பாடம்.

 அன்பின்
அடர்த்தியை
அறிய வைக்கும்
ஆன்ம சோதனைக் களம்.

தொலைவு
முக்கியமல்ல.

நோக்கமே
பிரதானம்.

எங்கே போகிறோம்?
எப்போது திரும்புவோம்?
... ... ... ... ...
... ... ... ... ...
... ... ... ... ...
இப்படியான கேள்விகளிலும்


அவற்றின் பின்னே
ஒளிந்திருக்கும் விடைகளிலும்
துடித்து நிற்கிறது
உறவுகளின் உயிர்.

அறியாமை அகல
ஆன்மத் தேடலைத்
தொடங்கி வைக்கும்
ஆதிச் சுழி.

முன்னும் பின்னுமாய்
கடந்த தூரமும்
கடக்க வேண்டிய
தொலைவும்
மிச்சமிருக்கின்றன
இன்னும்…

காலக் கயிறு
சுழற்றி விட்ட
பம்பரம் போல்
சுற்றிக் கொண்டு
அலைகிறது மனது.

தொடரத் தொடரப்
பயணங்கள்...

தொலைவு கடக்கும்
துயரங்கள்.


எல்லை மீறும் பயணம்
தொல்லை சேரும் தருணம்.

கடந்து செல்லும்
காலத்தை
நினைவுப் பெட்டகத்தில்
உறைய வைக்கும்
உற்சாக அனுபவம்.

நினைவுச் சாளரம் திறந்து
நிகழ்காலத்தின்
வெளிச்ச ரேகை பரவ
உள்ளுக்குள் ஒளியேற்றும்
உன்னத உணர்வு – பயணம்.

கரை தொடும்
அலைகள்
கடலிடம் மீள்வது போல்
தினம் தினம்
தொடர்கிறது
தேடலுக்கான பயணம்.

மன அடுக்குகளின்
இடுக்குகளில்
வெளிச்சம் பாய்ச்ச
அவசியம் தேவை
பயணம்.

1 comment:

  1. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete